இதே நாளில் தான் (19.12.1973) தந்தை பெரியார் சென்னை தியாகராயர் நகரில் தன் இறுதி முழக்கத்தை செய்தார். ஆனால் அதுதான் இறுதி முழக்கம் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது.
ஆனாலும் அய்யாவின் அந்தஉரை எப்படியோ மரண சாசனமாக அமைந்து விட்டது.
சுயமரியாதை இயக்கத்தின், திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளை சாறு பிழிந்து எடுத்தது போல அமைந்தது அந்த அரிய உரை!
1) கடவுளைப் பற்றி கடுமையாக விமர்சிக்கிறேன் என்று நினைக்கலாம். ஆனால் நாலாயிர திவ்யிய பிரபந்தம், தேவாரம் முதலிவை கடவுள் நம்பிக்கையில்லாதவர்களையும், சைவம், வைணவம் அல்லாதவர்களையும் எப்படியெல்லாம் இழிவுப் படுத்துகின்றன - கேவலமாகப் பேசுகின்றன என்பதை எடுத்து விளக்கினார்.
2) மத நூல்களும், அரசமைப்புச் சட்டமும் ஜாதியைப் பாதுகாக்கின்றன. நூற்றுக்கு 3 விழுக்காடு உள்ள உயர் ஜாதி பார்ப்பனர் தவிர மற்றவரை சூத்திரர்கள் என்று சொன்னால் அதன் பொருள் என்ன?
பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சொல்லுவதை இந்தக் காலகட்டத்திலும் எப்படி ஏற்க முடியும் என்ற கேள்விதான் தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் பேருரையின் இடியாகவும், மின்னலாகவும் தகித்தன.
3) இந்திய அரசமைப்புச் சட்டம் மதப்பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதியைப் பாதுகாப்பது என்றால் அதன் பொருள் மத சாத்திரங்கள் கூறும் அந்த சூத்திர ஜாதி இழிவைக் காப்பாற்றுகிறது என்று தானே பொருள் என்பதுதான் தந்தை பெரியாரின் முக்கியமான வினாவாக இருந்தது.
4) தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமைப் போராட்டம் ஆகும்.
தந்தை பெரியார் கோயில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட் டத்தை அறிவித்த நிலையில் அவரின் முக்கிய சீடரான மாண்பு மிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில் அய்யாவிற்கு போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் அதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். ஆனால் பார்ப்பனர் அதனை எதிர்த்து நேரிடையாகவே உச்ச நீதிமன்றம் சென்று சூத்திரர்கள் கடவுள் சிலையைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்று எடுத்துச் சொன்னார்கள்.
அது தொடர்பான தீர்ப்பில் “ஆபரேசன் சக்சஸ்; நோயாளி செத்தான்” என்ற நிலையில் தான் இருந்தது.
கோயிலைக் கட்டிய அரசர்கள் தமிழர்கள், கோயிலைக் கட்ட உழைப்பைக் கொடுத்தவரும் தமிழர்கள். அந்தத் தமிழனை நாலாம் ஜாதி வருணத்தவனாக்கி, அதாவது சூத்திரனாக்கி (வேசி மக்களாக்கி) அவன் கட்டிய கோயில் கருவறைக்குள் அவன் நுழையக்கூடாது; அவன் நுழைந்தால் கடவுள் தீட்டாகிவிடும் என்று சொன்ன நிலையில்தான் தந்தை பெரியார் கொதித்து எழுந்து தமது இறுதிப் பேருரையில் வெளியிட்ட ஒவ்வொரு சொல்லுமே எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறின.
5) எல்லாக் கட்சிக்காரனும் சேர்ந்து தி.மு.க. ஆட்சியை ஒழிக்கப் பார்க்கிறான். இந்த தி.மு.க. ஆட்சி ஒழிந்தால் என்ன நடக்கும்?
இன்றைக்குத் திருட்டுத்தனமாகப் பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாக பேசுவான், அப்படிப் பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்பான் - விளம்பரமும் கொடுப்பான் என்று தனது இறுதி மரண சாசனத்தில் தந்தை பெரியார் முழங்கினாரே - அது இப்பொழுது நடைமுறையில் பட்டவர்த்தனமாக உள்ளதா? இல்லையா?
தி.மு.க. ஏன் ஆட்சிக்கு வரக்கூடாதாம்? அது திராவிடர் இன உணர்வுடன் நடந்து கொண்டும், சமூக நீதியில் அக்கறை செலுத்தும், ஜாதி ஒழிப்பிற்கு வழி செய்யும், மதத்துக்கு எதிராக பாலியல் நீதி பேசும் - மகளிர் வளர்ச்சித் திட்டங்களை மிக விரைவாக அறிவிக்கும்.
பண்பாட்டுத் துறையில் பார்ப்பனீயத்துக்கு எதிராக படை வரிசை காட்டும். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மீண்டும் சட்டம் கொண்டு வரும். சமஸ்கிருதம், இந்தியை எதிர்த்தும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை விரிவு படுத்தல்.
மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலிலும், சிறீரங்கம் ரங்கநாதன் கோயிலிலும் கூட பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர்களாக வரும் நிலை ஏற்படும்.
அதுவும் மதவாத ஆட்சி மத்தியில் தொடை தட்டி, தோள் தட்டி பொங்கி எழும் நிலையில், தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி நிலை பெற்றால் அவை எல்லாம் தவிடுப் பொடியாகாதா?
தமது இறுதி மரண சாசன உரையில், தந்தை பெரியார் சொன்ன தி.மு.க. ஆட்சி ஒழிக்கப்பட்டால், இன்றைக்கு மறைவாக பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாக பேசுவான் என்றாரே.
அதுதானே இன்று நடக்கிறது. ராம ராஜ்ஜியம் என்றும் இந்து ராஜ்ஜியம் என்றும் வெளிப்படையாகப் பேசவில்லையா?
எத்தகைய தொலைநோக்கு.
இன்றைக்கு 47 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் எச்சரித்தது இப்போழுது வந்து விட்டதே.
அந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது நடக்க இருக்கும் தேர்தலில் தி.மு.க. வெல்ல வேண்டியதும் “திராவிடம்“ தீர்க்கமாக ஒளி வீசித்திகழ வேண்டியதும் அவசியமாகும்.
அதுதான் தந்தை பெரியாரின் மரண சாசனப் பேருரை நமக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடமும், விட்டுச் சென்றுள்ள “திராவிடம்“ என்னும் தத்துவச் சீலரும் ஆகும்.
வாழ்க பெரியார்,
வெல்க திராவிடம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக