வெள்ளி, 29 ஜூன், 2018

தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்

12.04.1931 - குடிஅரசிலிருந்து...

பகத்சிங்

1. (ஏ) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம்மகாநாடு மனமாரப் பாராட்டுகின்றது.

(பி)பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக் கொள்கையும் கவர்ந்து கொள்ளும் படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத் தோடு வரவேற்கின்றது.

(சி) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும், பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப் படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகின்றது.

விடுதலை சுதந்திரம்

2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி பூமிக்கு உடையவன் - உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவைகளான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுகத் துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சம சுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

பெண் உரிமை

3.  (ஏ) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டு மென்பதாக இம்மகாநாடு திட்டமாய்க் கருதுகின்றது. (பி) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடை களையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் எனவும், தேகசக்திக்கும் செல்வநிலைக்கும் தகுந்த அளவில் குழந்தை களைப் பெறுவதற்காகக் கர்ப்பத்தடை முறைகளை அவசியம் கையாள வேண்டும் என்றும் இம்மாகாநாடு தீர்மானிக்கின்றது.

நம்பிக்கையில்லை

4. 1. மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கை களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினாலும், 2. தனது செய்கை களுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால்  ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்புமற்றுப் போவதாலும், 3. வருணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழைய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாலும் 4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடைசெய்து வருவதாலும், 5. சமதர்மகொள்கைகளுக்கு விரோதமாய் இருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அருப்புக்கோட்டை போலீஸ் மாற்றப்படுமா?

29-03-1931 - குடிஅரசிலிருந்து...

இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெருவில் நடக்காமல் தடைப்படுத்தப்பட்டதும், அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.  மற்றும் அவர்கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத் தடுத்து உபத்திரப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும்.  இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றது.  போதாக்குறைக்குத் திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணி யென்னும்  கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வல மாய் எடுத்துக் செல்ல வொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங்கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.

சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலையற்றதாகவும் மக்களுக்குள் எப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவதாகவும், இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.  பார்ப்பனியப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வதாகவே செய்திகள் கிடைத்து வருகின்றன.  போலீஸ் இலாகாவும், சட்ட இலாகாவும் 30 நாள் கணக்கெண்ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணுவதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதாயிருக்கின்றதேயொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப்படுவதற்கு ஒரு பரிகாரம் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை என்று வருத்தத்துடன் எழுதுகின்றோம்.

இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதாவது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லு வதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படுவ தாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் தொலைக்கக் கூடாதா? என்று நாடார் சமுகத்தையும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

- விடுதலை நாளேடு, 23.6.!8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக