வியாழன், 26 ஜனவரி, 2017

ஆசிரியர் கி.வீரமணி எழுதிய முதல் தலையங்கம்

வரியில்லாமல் ஆட்சி நடக்குமா?


“நிலைமையில் அபிவிருத்தி காண வேண்டுமானால் வரி போடவேண்டும், கடன் வாங்க வேண்டும். கடனும் வாங் காதே, வரியும் வாங்காதே என்றால் அது நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கமுடியுமா?” என்று பேசியுள்ளார் தமிழ் நாட்டு முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள்.
எந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபோதிலும், அரசாங்கத்தை நடத்த நிதி தேவை. நிதியைப் பெருக்க பெரும்பாலும் நான்கு வழிகள்தான் உள்ளன.
1. வரி
2. கட்டண வருமானம் (ரயில், தபால், ரிஜிஸ்டிரேஷன் மூலம் வருவது)
3. கடன்
4. நோட்டு அச்சடித்தல்
நமக்குத் தெரிந்தவரையில் இதைத்தவிர வேறு வழிகள் கிடையாது என்றே கருதுகிறோம். இந்த உண்மை எதிர்க் கட்சி நாற்காலியில் உள்ள தலைவர்களுக்குத் தெரியாது என்று நாம் சொல்லமாட்டோம். தெரிந்தும் மறைத்து, திரித்துக் கூறினால் தான் ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்பது அவர்களது முடிவு.
சென்ற நூற்றாண்டில் அரசாங்கம் என்றால் உள்நாட்டுக் கலவரங்களிலி ருந்தும் வெளிநாட்டுப் படையெடுப் புகளி லிருந்தும் மக்களைப் பாதுகாப்பதற்கும், சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கும், உடைமைகளைக் காப்பதற்குமே என்ற கருத்து நிலவி வந்தது.
ஆனால் இந்நூற்றாண்டில் அக்கடமைகளோடு, மக்கள் நலனைப் பெரிதும் பெருக்கக்கூடிய சமுதாய நல்வாழ்வுத் திட்டங்களை அமுல் செய்து எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற அடிப் படையில் பல கடமைகளும் பெருகி உள்ளன.
இந்நிலையில் அரசாங்க வருமானத்தைப் பெருக்காமல் எந்த அரசாங்கம் தான் மக்களுக்கு நன்மை செய்யமுடியும்?
தனி மனிதனின் பட்ஜெட் என்பது வரவுக்கேற்ப செலவை அமைத்துக் கொள்வதாகும். அரசாங்க பட்ஜெட் என்பது செய்ய வேண்டிய செலவினங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வருமானத்தைப் பெருக்குவது என்பதாகும். இது பொருளாதார தத்துவத்தின் பால பாடம்.
கொடுமை, கொடுமை, தாள முடியாத வரிக்கொடுமை என்று பிரச்சாரம் செய்யும் கோயபெல்ஸ் கூட்டத்தார்க்கு இதுகூடவா தெரியாது?  உதாரணத்திற்கு ஒன்று காட்டு வோம்.
தமிழ்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்து வந்திருக்கிறதென்பதை கல்விக்காக ஆண்டுதோறும் செலவான கணக்கைப் பார்த்தால் தெரியும்.
சென்னை ராஜதானியில்
(24 ஜில்லாக்கள் இருந்த காலத்தில்)
கல்விக்கான செலவு ரூ. 1 கோடியே 33 லட்சம்
1921-22இல் செலவு ரூ. 1 கோடி 33 லட்சம்
1922-23இல் செலவு ரூ. 1 கோடியே 54 லட்சம்
1923-24இல் செலவு ரூ. 1 கோடிய 63 லட்சம்
1924-1925இல் செலவு ரூ. 1 கோடியே 73 லட்சம்
பிறகு ஜஸ்டீஸ் ஆட்சியின் போது கட்டாய இலவசக் கல்வி புகுத்தியதால் 2 கோடியே 25 லட்ச ரூபாய் செலவழித்தனர்.
(ஆச்சாரியார் 1935-37 ஆட்சியிலும் ரூ. 2 கோடியே 52 லட்சம்; 1952-54இல் 11 கோடி ரூபாய் கல்விச் செலவை கணிச மாகப் பெருக்கவில்லை)
இன்று தமிழ்நாட்டின் மற்ற மொழிப் பகுதிகள் பிரிந்த நிலையில் (சுமார் 12 ஜில்லாக்கள் உள்ள நிலையில்) கல்விக்கான செலவு சமீபத்தில் மலையென உயர்ந்து இந்த ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கல்வித்துறையில் இந்த அதிசயிக்கத்தக்க சாதனையை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. இன்னும் மென்மேலும் பெருகிக்கொண்டே போகும். இந்த ஒரு துறையின் செலவினமே இப்படி என்றால் ஊர்தோறும் மருத்துவமனைகள், சாலை வசதிகள், முதலியவை பெருகுவதால் எவ்வளவு செலவு அதிகரிக்கும் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாமே!
வரியை உயர்த்தாமல் எப்படி இதைச் செய்ய முடியும்? பஸ் முதலியவற்றை அரசாங்கமே எடுத்து நடத்தினால் வரி தேவையிருக்காது என்று கூறுகின்றனர். அவற்றை எடுத்துக் கொண்டால் பல நூறு கோடி ரூபாய்களை நஷ்ட ஈடாகத்தர வேண்டுமே! அரசாங்கத்தின் ஆண்டு வருமானமே 113 கோடி ரூபாய்தானே?
அதோடுகூட, அத்துறைக்கு அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் திறமையாக நடத்தச் செய்யும் பிரச்சினை வேறு உள்ளதே?
எல்லா உடமைகளையும் தேசிய மயமாக்கி உள்ள சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளிலே வரியே வசூலிக் கப்படுவதில்லையா?
தேசீய மயமாக்குதலே சர்வரோக நிவாரண சஞ்சீவி என்று கூறும் கொலம்பஸ்கள் கவனத்திற்கு இவை ஏன் வர வில்லை?
தேசியமயமாக்கப்பட்டால் கூட வரியில் பங்கு என்பதையும் எந்த அரசாங்கமும் தள்ளிவிடமுடியாது என்பதை விளக்கத்தான் இதைக்கூறுகிறோம்.
சென்னை நகர கார்ப்பரேஷனில் நிர்வாகப் பொறுப் பேற்றுள்ள ஒரு கட்சியின் தலைவர், கார்ப்பரேஷனில் நீங்கள் வந்த வுடன் பாலும் தேனும் பெருக்கெடுத்தோடும் என்று கூறினீர்கள், அரசாங்கத்தின் வரி உயர்வைக் கண்டிக்கும் உங்களது நிர்வாகத்தில் சுமார் ஒரு கோடிக்கு மேல் வரியை உயர்த்தி யுள்ளீர்களே என்று சென்னை வாழ் மக்கள் கேட்டால், வயலுக்கு வரப்பு போல, வேட் டிக்குக் கரைபோல ஆட்சிக்கு வரி என்று உவமை காட்டிப் பேசினார்.
இந்த ஞானோதய ஒளி ஏன் இவர்கள் சென்னை கோட்டையில் இருக்கும்போது வருவதில்லை? ரிப்பன் கட்டடத்தில் ஒரு மனப்பாங்கும், கோட்டையில் மற்றொரு மனப் பாங்கும் இருக்கலாமா?
‘மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி’ என்பதுதானே இது?
நிஷ்காமிய கர்மயோகியான திரு.ஆச் சாரியாரின் வரி எதிர்ப்பின் ரகசியமும் இதே தத்துவத்தைக் கொண்டதுதான். அவர் முதலமைச்சராக இருந்த போது வரி கொடுப்பதைப் பற்றி குறிப்பிடுகையில் நல்ல காரியத்திற்காக நீங்கள் ஆண்டவன் சந்நிதியில் பக்தன் பயபக்தியோடு காணிக்கை செலுத்துவது போல் செலுத்தி வரவேண்டும் என்றார்.
அவர் ஏன் இப்போது வரியைக் கண்டிக்கிறார் என்கிறீர்களா? அதற்குப் பெயர்தான் அரசியல்! அரசியல்!! அரசியல்!!!
- விடுதலை 25.8.1962
-விடுதலை ஞா.ம.3.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக