வியாழன், 20 டிசம்பர், 2018

திராவிட இயக்க அருஞ்செயல்

உங்களுக்கு தெரியுமா ? பகுதி 1
××××××××××××××××××××××××××××

திராவிடத்தை எதிர்க்கும் நவீன இளைஞர்களே..! தேசிய வாதிகளே..! தமிழ் தேசிய பிஞ்சுகளே..!  என் உடன்பிறவா சகோக்களே..! நான் ஏன் திராவிடத்தை ஆதரிக்கிறேன் என்று  உங்களுக்குத் தெரியுமா?

1* 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற  நாடக  விளம்பர நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?


2* 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்  என்பதும் , 1925 ல்  பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்த பிறகு 1926க்குப் பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்கப் பட்டார்  என்பது  தெரியுமா.? 

3* பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4* 1933 -இல் அன்னை நாகம்மையார் மறைந்த-அடுத்த நாளே தடையை மீறி, ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்து தந்தைபெரியார் ஒரு மாதகாலம் சிறை புகுந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா ?

5* 1933 அக்டோபரில் “குடிஅரசில்” தந்தைபெரியாரால் எழுதப்பட்ட “இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?” என்ற கட்டுரையில் தீவிர பொதுவுடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப் பட்டு இ.பி.கோ. 124 ஏ பிரிவின்படி ராஜ துவேஷம் குற்றம் சுமத்தப்பட்டு, கட்டுரை ஆசிரியர் தந்தை பெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை) பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

6 * 1938-இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அய்யாவுக்கு அளிக்கப்பட்ட பட்டம் தான் “பெரியார்”என்பது உங்களுக்குத் தெரியுமா?

7* 1960 வாக்கில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட` “சோதனைக்குழாய் குழந்தை” பற்றி 1938-லேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

8* 1942 ஆம் ஆண்டு கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியும் , அதை தந்தைபெரியார் ஏற்க மறுத்து, பதவியை துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?

9* 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ 1 இலட்சம் நன்கொடை தந்தபோது-தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?

10* 1951-இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன் முதல் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

11* பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் சூத்திரர்கள் இடம் என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954 இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

12* 1954 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் தந்தைபெரியாரின் ராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டத்துக்கு – அங்கே போலீஸ் அதிகாரியின் வீடு இருப்பதால் காவல் துறை அனுமதி மறுத்தது என்பதும், தந்தை பெரியார் ஒலி பெருக்கி யில்லாமலேயே மாபெரும் கூட்டத்தில் 2 மணிநேரம் உரக்கப் பேசினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

13* வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் சிறையில் கைவிலங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

14* வைக்கம் போராட்டம் வெற்றி பெறும் நிலையில் அந்தப் புகழ் தந்தை பெரியாருக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதால் தான் கடைசி நேரத்தில் இதில் காந்தியார் அழைக்கப்பட்டார் என்ற சூழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?

15* தந்தை பெரியார் தலைமையில் வைக்கம் போராட்டம் நடந்த போது போராட்ட வீரர்களுக்கு உணவு வழங்கியவர்கள் சீக்கியர்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

16* தந்தை பெரியாருக்கு வரவேண்டிய கடன் தொகைகளை ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட தந்தைபெரியார் கோர்ட் மூலம் வசூலிக்க மறுத்தார் என்பதும், அதைத் தமக்கு மாற்றித் தருமாறு சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பார்ப்பன வழக்க றிஞர் கோரிக்கையை பெரியார் புறக்கணித்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

17* தந்தை பெரியார் காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது- பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி காங்கிரசில் வலுத்துவிட்டது என்று கூறி, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு- காங்கிரசி லிருந்து முக்கியப் பார்ப்பனத்தலைவர்கள் விலகினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

18* குருகுலப் பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது- பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று காங்கிரஸ் கமிட்டியில் தந்தை பெரியார் கொண்டுவந்த தீர்மானத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் ஆச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

19* தமிழ்நாடு கதர்போடின் தலைவராக தந்தைபெரியார் இருந்த போது செயலாளராக இருந்த கே.சந்தானம் என்ற பார்ப்பனர், தன்னிச்சையாக பார்ப்பனர்களை ஏராளமாக வேலைக்கமர்த்தியதையும், அதைத் தந்தைபெரியார் கண்டித்ததும் உங்களுக்குத் தெரியுமா?

20* ரஷ்யாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன் முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழி பெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

இன்னமும் சொல்கிறேன்...
- கட் செவி வழி செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக