திங்கள், 8 ஜூலை, 2024

உச்சநீதிமன்ற தடை ஆணையை எதிர்த்து, தடை ஆணை தமிழகம் முழுவதும் எரிக்கப்பட்டது. கைது -10.10.1990

 

இயக்க வரலாறான தன் வரலாறு(237) : 

நவம்பர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி


உச்சநீதிமன்ற தடை ஆணையை தீயிட்டு எரிக்க கழகத்தினருடன் செல்லும் ஆசிரியர்.

மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்திலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்ற நம் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நிலைகண்டு, பார்ப்பனர் கொதித்துக் கிடக்கின்ற நிலையில், மண்டல் குழுவின் செயலாக்கத்தினைத் தடுத்து நிறுத்த பார்ப்பனர்கள் தங்கள் இறுதி முயற்சியாக உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்றனர்.

நீதிபதி

ரங்கநாத் மிஸ்ரா


 உச்சநீதிமன்ற தடை ஆணையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்.

10.10.1990 அன்று உச்சநீதிமன்றத்தின் தடை ஆணை தமிழகம் முழுவதும் எரிக்கப்பட்டது. என் தலைமையில், சென்னையில் வீரர்கள் அணிவகுத்து எழுச்சி முழக்கங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு தடை ஆணையைக் கொளுத்துவதற்கு இளைஞர்கள் தீப்பந்தங்களை ஏந்தி வந்தனர். அய்யா சிலைக்கு மாலை அணிவித்தோம். எங்களை போலிஸ் தடுத்தது. உடனே உச்ச நீதிமன்ற தடை ஆணையை உணர்ச்சி முழக்கங்களிடையே தீயிட்டுக் கொளுத்தினோம். தோழர்கள் கட்டுக்கோப்பாக ஆணையை எரித்தனர். நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டோம். தமிழகம் முழுவதும் தோழர்கள் கைது. உச்சநீதிமன்ற தீர்ப்பு சாம்பலானது. ஏற்கெனவே, தலைமை நிலையத்தின் சார்பில், தடை ஆணையை எரித்து அதன் சாம்பலை அரைகுறையாக எரிக்கப்பட்ட பகுதியை அஞ்சல் உறையில் போட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். அந்த முகவரி:

HON’BLE JUSTICE,
RENGANATH MISRA,
CHIEF JUSTICE,
SUPREME COURT OF INDIA,
NEW DELHI.

போராட்டத்துக்குப் போகும்போதே மேற்கண்ட முகவரியை எழுதி அஞ்சல் உறையைத் தயாராக எடுத்துச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்.

10.10.1990 அன்று சுப்ரீம் கோர்ட் ஆணையைக் கொளுத்தும் முதற்கட்டப் போராட்டத்தை அறிவித்து இருந்தேன். மேலும், நாம் ஒவ்வொருவரும் ஒரே அணியில் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டம் இன்றி இடஒதுக்கீடு பாதுகாப்புப் படை அணி (Reservation Protection Force -RPF) என்னும் படையை விரைவில் அமைத்திடவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக