திங்கள், 8 ஜூலை, 2024

அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம்! - 9.9.1990

இயக்க வரலாறான தன் வரலாறு(237) : அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம்!

நவம்பர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

 9.9.1990 அன்று அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலம் சிகாக்கோ நகரிலே என் மகள் செல்வி அருள்செல்விக்கும், மலேசியா கே.வேலு_சாரதா ஆகியோரின் செல்வன் பாலகுருவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சியும் அதன் தொடர்பான கருத்தரங்குகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

மணவிழாவிற்கு, என்றும் அன்னை என்று என்னால் மதிக்கப்படும் திருமதி வெர்ஜினியா கிருச்சினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 மணமக்கள் அருள்செல்வி – பாலகுரு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

மணவிழாவிற்கு அருமை நண்பர்கள் பாரிஸ் சுசீலா, இலண்டன் ஜெயராம், நியூயார்க் அமுதா, நியூஜெர்சி ராஜரத்தினம், அட்லாண்டா ஜியார்ஜியா, டாக்டர் நல்லதம்பி குடும்பத்தினர், டெக்ஸ்சாஸ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் திரு.தில்லை ராஜா குடும்பத்தினர், எம்.எம்.ராஜ் குடும்பத்தினர், இ.சாய்.வேதமுத்து, விஸ்கான்சில் பல நண்பர்கள் மற்றும் டாக்டர் திரு.சேனாபதி குடும்பத்தினர், ஒகியோ தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் திரு.ராஜேந்திரன் குடும்பத்தினர், டாக்டர் அரசு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பலரும் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர்.

சோம.இளங்கோவன் ஆசிரியரின் மகள் அருள்செல்வி – பாலகுரு திருமணத்தை நடத்தி வைக்கும் காட்சி உடன் அன்னை திருமதி வெர்ஜினியா கிருச்சினர்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மகள் இணையேற்பு விழாவில் கலந்து கொண்ட இரு குடும்பத்தினர்

இல்லினாய்ஸ் மாநிலத்தின் நீதிபதி மணவிழாவிற்கு வருகைபுரிந்து, மணமக்கள் இருவருக்கும் சம்மதமா என்று கேட்டு, அந்நாட்டு முறைப்படி மணவிழா நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவிலேயே முதன்முதல் நடக்கும் சுயமரியாதை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என்னும் சிறப்பை ஏற்படுத்தி, தாலி அணிவிக்காமல் மாலை மாற்றி மோதிரம் அணிவித்து, தந்தை பெரியார் அவர்களின் ஒப்பந்த விழா உறுதிமொழியை டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் கூற, மணவிழா இனிது நடைபெற்றது.

இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் அன்னை திருமதி வெர்ஜினியா கிருச்சினர் அவர்களுடன் மணமக்கள் மற்றும் ஆசிரியர்.

இம்மண விழாவினை அமெரிக்க தமிழர், அன்பர்கள் அனைவருமே அறிமுகப் படுத்தினார்கள். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அன்பர்களும் மற்றும் டாக்டர்கள், பொறியியல் விஞ்ஞான வல்லுநர்கள், தொழில் அதிபர்கள் வந்து வாழ்த்துக் கூற மணவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்காவில் கடும் உழைப்பால், சிக்கனத்தால், ஈட்டிய பொருளால் எல்லா செலவுகளையும் மணமக்கள் தாங்களே செய்துகொண்ட புதுமை அங்குள்ள தமிழர்களையும், அமெரிக்கர்களையும் பெரிதும் கவர்ந்தது! சிகாகோ இளங்கோவன் அவர்கள் தந்தை பெரியார் போல் உடை அணிந்து நன்றிகூறிட, விழா இனிது நிறைவேறியது.

டாக்டர் சேவியர் ரோஜ் இனிய குரல் படைத்த ஈழத்தமிழர் அய்ங்கரன், ஈழத்திற்குச் சென்று வந்த அவருடைய அண்ணன் திரு.பாஸ்கரன், திருமதி.ரேவதி நடேசன், சிகாகோவின் இசைச் சித்தர் ராமன் ஆகியோரின் இன்னிசை விழாவுடன் மணவிழா இனிதே நடந்தேறியது.

தமிழகத்திலிருந்தும் உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்த வாழ்த்துத் தந்திகள், கடிதங்கள் அனைத்தும் மேடையில் படிக்கப்பட்டன. அமெரிக்காவில் முதல் சுயமரியாதைத் திருமணம் என்பது வரலாற்றில் பதிவானது.

மணமக்களை வாழ்த்தி உரையாற்றும்போது, சடங்கு, சம்பிரதாயம் என்கிற முறையில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதை அறிவாசான் தந்தை பெரியார் அகற்றி, சமமான முறையில் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொண்டு ஒத்த கருத்துடையவர்களாக -_ நண்பர்களாக வாழ வேண்டும் என்றார். ஆண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் இருக்கின்றதோ அந்த அளவுக்கு பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தேன். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் சிலாங்கூர் மாநிலத் தலைவர் ரே.கோ.ராசு உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி உரைநிகழ்த்தினார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக