இயக்க வரலாறான தன் வரலாறு(234) :
அய்யாவின் அடிச்சுவட்டில்

கி.வீரமணி

எஸ்.கருணானந்தம்
மானமிகு கவிஞர் எஸ்.கருணானந்தம் அவர்கள் 27.9.1989 அன்று நெல்லையில் முடிவு எய்தினார். அவருக்கு வயது 64. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியுற்று, உடனே நெல்லை புறப்பட்டு 28.9.1989 அன்று முற்பகல் 11 மணி அளவில் கவிஞரின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன்.
அங்கு கவிஞர் அவர்களின் உடல் கறுப்புச் சட்டை அணிவிக்கப் பெற்று, எவ்வித மூடச் சடங்குமின்றி மாலைகளால் போர்த்தப்பட்டிருந்தது.
கவிஞர் கருணானந்தம் அவர்கள் 1942ஆம் ஆண்டு கும்பகோணம் அரசினர் கல்லூரி இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்தார். அப்போது சிவகாசித் தோழர் தவமணிராசனும் இதே வகுப்பில் பயின்றார். இவர்கள் இருவரும்தான் திராவிடர் மாணவர் கழகத்தைத் துவக்கினர். இருவருமே தமது படிப்பைப் பாதியில் கைவிட்டுப் பின்னர் ஈரோடு ‘குருகுலத்தில்’ அய்யாவோடு பணி தொடர்ந்தனர்.
தோழர் ஈ.வி.கே.சம்பத்தோடு இணைந்து கருஞ்சட்டைப் படை அமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் திரு.கருணானந்தம்.
‘தமிழர் தலைவர்’ என்னும் தலைப்பில் சாமி.சிதம்பரனார் அவர்கள் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை இதைத் தொடர்ந்து யாரும் எழுதாததால் கவிஞர் கருணானந்தம் அவர்கள் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். ‘தந்தை பெரியார்’ என்னும் தலைப்பிலான இந்த நூல் 1979ஆம் ஆண்டு வெளியானது.
டாக்டர் கோவூரின் பகுத்தறிவு விளக்க மனோதத்துவ நூல் ஒன்றை ‘டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தார் கவிஞர் கருணானந்தம். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இந்நூலை வெளியிட்டது.
1967இல் கவிஞர் அவர்கள் “அண்ணா காவியம்’’ என்னும் நூலை இயற்றி, இதற்குத் தந்தை பெரியார் அவர்களிடம் மதிப்புரை வாங்கி வெளியிட்டார்.
1972_73ஆம் ஆண்டுவாக்கில் கவிஞர் அவர்கள் தமிழ்நாடு அரசு செய்தித்துறையில் பணியாற்றிய காலத்தில் தந்தை பெரியாரின் ஒரு நாள் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் மூலம் படமாக்கினார்.
கவிஞர் அவர்கள் இறுதியாக எழுதிய கவிதை “தந்தை பெரியார் கொள்கைக் குறள்’’ என்னும் தலைப்பில் ‘விடுதலை’ வெளியிட்டது. ‘தந்தை பெரியார் 111ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக