வெள்ளி, 5 ஜூலை, 2024

நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்! (2020 ஜனவரி 20ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 2020 ஜனவரி 30 சென்னை வரை)

 

நிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்!

பிப்ரவரி 16-29 2020

– மஞ்சை வசந்தன்

‘நீட்’ தேர்வு மற்றும் புதியக்கல்விக் கொள்கையால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள _ ஏற்படவுள்ள பேராபத்துகளை விளக்கி தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர். பாசிச மத்திய அரசின் மனுதர்ம ஆட்சியின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசையும் கண்டித்தும், நீட்டை விரட்டியே தீருவோம் என்கிற முழக்கத்தோடு 2020 ஜனவரி 20ஆம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 2020 ஜனவரி 30 சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடர் நெடும் பயணத்தை மேற்கொண்டார்கள். அனைத்து இடங்களிலும் கழகத் தோழர்கள் தோழமைக் கட்சி நிருவாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாகத் திரண்டுவந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து உரை கேட்டு உணர்வு பெற்றனர்.

சமூக நீதிக்களத்தில் தமிழர் தலைவர் சாதனைகள்:

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ரூ.9000 வருமான வரம்பு ஆணையை கொண்டுவந்த பொழுது அவற்றைத் தொடர்ந்து எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தோல்வியே காணாத எம்.ஜி.ஆர். அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியுறச் செய்து (2 தொகுதிகளில் மட்டும்தான் அ.இ.அ.தி.மு.க வெற்றி) எம்.ஜி.ஆரை உணரச் செய்து ரூ.9000 வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ய வைத்து இடஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்தக் காரணமான தலைவர், ஆசிரியர் அவர்கள். மத்திய அரசில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு இருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை குழிதோண்டிப் புதைத்த நிலையில் தொடர்ந்து இந்தியா முழுவதும் சமூகநீதித் தலைவர்களை ஒருங்கிணைத்து, 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தி, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் காலத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்றச்செய்து, மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் காரணமான சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் காலம் வரை தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 49 விழுக்காடாக இட ஒதுக்கீடு இருந்தது.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காலத்தில் 69 விழுக்காடாக இட ஒதுக்கீடு உயர்வு பெற்றது.  69%  இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் ஆபத்து வந்த பொழுது 31சி என்னும் சட்டத்தை தமிழக அரசுக்கு எழுதிக்கொடுத்து சட்டமாக்கி இந்திய அரசியல் சட்டம் 9 ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கு முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர் ஆகிய மூன்று பார்ப்பனர்களையும் பயன்படுத்தி தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பை உருவாக்கிய தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் காலத்தில் சமூக நீதிக்காக இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தம் செய்யப்பட்டது.  ஆசிரியர் அய்யா அவர்களின் காலத்திலும் சமூக நீதியை பாதுகாக்க அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக எம்.ஜி.ஆர் அரசால் கொண்டு வரப்பட்ட நுழைவுத்தேர்வை தொடர்ந்து 21 ஆண்டுகள் எதிர்த்துப் போராடி, டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தனிச்சட்டத்தை நிறைவேற்றி, நுழைவுத்தேர்வை  ஒழித்து கட்டிய தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மதிப்பெண் முறைகேடுகள் நடந்து அந்த மாணவர்களுக்கு 5 முதல் 15 வரை கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதைக் கண்டுபிடித்து நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்ட சமூக அநீதியை தடுத்த தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், வளர்ச்சி பெற்ற அமெரிக்காவில் கூட தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் இந்தியாவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாகப் போராடிவரும் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

மத்திய அரசில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பொழுது இந்தியாவிலேயே முதல் எதிர்ப்புக் குரலைக் கொடுத்து மற்ற தலைவர்களுக்கு வழிகாட்டும் தலைவராகத் திகழ்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நாகர்கோவிலில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு நெடும்பயணம் வரவேற்புப் பொதுக்கூட்டத்தில்  ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

தூத்துக்குடி நெடும்பயணம்:

நாகர்கோவில் பொதுக்கூட்டம் (20.01.2020)

ஜனவரி 20ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு விடுதியிலிருந்து பயணக்குழு தோழர்களுடன் ஆசிரியர் அவர்கள் புறப்பட்டு நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டுத்திடல் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார். காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் இராதாகிருஷ்ணன் சி.பி.அய்.எம் மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி, சி.பி.அய் மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், வி.சி.க தொகுதி பொறுப்பாளர் பகலவன் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பினார்கள். மாவட்டத் தலைவர் தலைமையேற்றார் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், நல்லபெருமாள், ஞா.பிரான்சிஸ், உ.சிவதாணு ஆகியோர் முன்னிலையேற்றார்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இளங்கோவன் நன்றி கூறினார். 6:40 மணிக்கு நெல்லை நோக்கிப் புறப்பட்டது பிரச்சாரப் பயணக்குழு.

திருநெல்வேலி பொதுக்கூட்டம் (20.01.2020)

நாகர்கோவிலில் புறப்பட்ட பரப்புரை பயணக்குழு இரவு 8:20 மணிக்கு திருநெல்வேலி சிந்துபூந்துறையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது. நீட் எதிர்ப்பு பெரும்பயண வரவேற்பு பொதுக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காசி தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர்  இராஜேந்திரன் வரவேற்றார். ரெத்தினசாமி, அரியமுத்து, டேவிட் செல்லதுரை, வழக்குரைஞர் வீரன், பொன்ராசு, வேல்முருகன், அய்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையேற்றனர். கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இரவு 9:50 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. திருநெல்வேலி ஆரியாஸ் தங்கும் விடுதிக்கு இரவு 10:00 மணிக்குச் சென்று இரவு உணவுக்குப் பின் ஆசிரியர் ஓய்வெடுக்கச் சென்றார்.

கோவில்பட்டி பொதுக் கூட்டம் (21.01.2020)

21.1.2020 அன்று மாலை 5:30 மணிக்கு கோவில்பட்டி காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடையை வந்தடைந்தார் தமிழர் தலைவர். பொதுக் குழு உறுப்பினர் தமிழரசி தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் பெரியாரடியான் முன்னிலையேற்றார். மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், வெற்றிவேந்தன் தூத்துக்குடி காசி, செல்வராசு ஆழ்வார் பூ.வசந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர். தோழமைக் கட்சித் தோழர்கள் ஆசிரியர் அவர்களை வரவேற்று சிறப்பு செய்தார்கள். மாலை 5:50க்கு உரையை தொடங்க 6:25 வரை  35 நிமிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

செய்தியாளர் சந்திப்பு

கோவில்பட்டி பொதுக்கூட்டம் முடித்து புறப்பட்ட தமிழர் தலைவர் அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்து நின்றனர். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து ‘நீட்’ பரப்புரைப் பயண வெற்றி குறித்து எடுத்துரைத்து 7:35க்கு தமிழர் தலைவர் வாகனம் சாத்தூர் நோக்கிப் புறப்பட்டது.

சாத்தூர் பொதுக்கூட்டம் (21.01.2020)

சாத்தூர் வடக்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்ட மேடைக்கு இரவு 7:00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை தந்தார்.  விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் வானவில் ம.மணி, ப.க.புரவலர், ந.ஆனந்தம், மாவட்டச் செயலாளர் விடுதலை ஆதவன், சாத்தூர் நகரத் தலைவர் கா.அ.நடராசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.அசோக் அனைவரையும் வரவேற்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 7:05 மணிக்கு தனது உரையை தொடங்கி 7:30 வரை  30 நிமிடம் சிறப்புரையாற்றினார். ‘நீட்’ தேர்வின் பேராபத்தை பொது மக்கள் உணர்ந்தனர்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு

சாத்தூர் பொதுக்கூட்ட மேடை எதிரே அமர்ந்து ஆசிரியர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் சாத்தூர் நடராஜன், அவரது வாழ்விணையர் மற்றும் செல்வம் ஆகியோரை நீண்ட நாள் கழித்து பார்ப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என தனது உரையில் குறிப்பிட்ட ஆசிரியர் அவர்கள், மேடையை விட்டுக் கீழே இறங்கியதும் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து நலம் விசாரித்து அவர்களிடம் விடைபெற்று இரவு 7:40க்கு மதுரை நோக்கிப் புறப்பட்டார்; தமிழர் தலைவர்.

மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆசிரியருடன், கழகத்தினர்

மதுரை பொதுக்கூட்டம் (21.1.2020)

மதுரை, முனிசாலை, ஒபுளா படித்துறையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:05 மணிக்கு வந்தடைந்தார் ஆசிரியர் அவர்கள். நிகழ்விற்கு மதுரை மாவட்டச் செயலாளர் முருகானந்தம் தலைமையேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் க.அழகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் முனியசாமி, தென்மாவட்டப் பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராஜா, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, மண்டலத் தலைவர் பவுன்ராசா, மண்டலச் செயலாளர் நா.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சுப.முருகானந்தம், வழக்குரைஞர்கள் கணேசன், சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலையேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 9.20 மணிக்கு தொடங்கி 10 மணி வரை 40 நிமிடங்கள் நீட் தேர்வின் அவலங்கள் பற்றி விளக்கவுரையாற்றினார். பெருந்திரளாக பொது மக்கள் கூடி நின்று ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

22.01.2020 ஹார்விப்பட்டி இராமசாமி உடல்  மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பு

காலை உணவை முடித்து விடுதியிலிருந்து காலை 10:30 மணிக்குப் புறப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர். இயக்கத்தின் புரவலர், 60 ஆண்டு கால விடுதலை வாசகர் மதுரை ஹார்விப்பட்டி பெரியார் பெருந் தொண்டர் இராமசாமி அவர்கள் உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் கொடையாக வழங்கினார். முன்னதாக நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்கள் இரங்கலுரையாற்றினார். 21.1.2020 அன்று மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி அவர்களுக்கு மதுரை பொதுக் கூட்ட மேடையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 

காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகளிரணி அமைப்பாளர்களுடன் ஆசிரியர்

காரைக்குடியில் பொதுக்கூட்டம் (22.01.2020)

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை 6:45 மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டு 7:00 மணிக்கு காரைக்குடி அய்ந்து விளக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை அனைவரையும் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையேற்றார். மண்டலத் தலைவர் சாமி. திராவிடமணி, மாநில மகளிரணி அமைப்பாளர் மு.சு கண்மணி, மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தலைமைக் கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மண்டலச் செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன், சுப்பையா, ராஜாராம், அனந்தவேல், மாவட்ட துணைத்தலைவர், கொ.மணிவண்ணன், நகரத்தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரவு 7:20 மணி முதல் 8:05 மணி வரை 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார். நகரச் செயலாளர் தி.க.கலைமணி நன்றி கூறினார்.

புதுக்கோட்டை பொதுக்கூட்டம்  (22.01.2020)

இரவு 9:00 மணிக்கு புதுக்கோட்டை நகர எல்லையில் கழக இளைஞரணி தோழர்கள் இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் வருகைதந்து பயணக் குழுவினரை வரவேற்று இரவு 9:05 மணிக்கு புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்தனர்.  மாவட்டத் தலைவர் கு.அறிவொளி வரவேற்றார், மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். மண்டலச்செயலாளர் சு.தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள், இரா.புட்பநாதன், இரா.சரஸ்வதி, மாவட்டச் செயலாளர், ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் இளங்கோ, மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து ஆகியோர் முன்னிலையேற்றனர்.  இரவு 9:20 மணி முதல் 10:00 மணிவரை 40 நிமிடங்கள் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

‘நீட்’ தேர்வு எதிர்ப்பு நெடும் பயணத்தின் போது குழந்தைகளுடன் பேசி மகிழும் ஆசிரியர்.

இரவு  திருச்சி பெரியார் மாளிகை

22.1.2020 இரவு 10:00 மணிக்கு புதுக்கோட்டையில் புறப்பட்டு பயணக் குழுவினர் வரும் வழியில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட இரவு உணவை முடித்து இரவு சரியாக 11:30க்கு திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து ஓய்வெடுக்கச் சென்றார் ஆசிரியர்.

கரூர் பொதுக்கூட்டம் (23.1.2020)

23.1.2020 மாலை 6:45 மணிக்கு நான்காவது நாள் பரப்புரைக்காக கரூர் அரசினர் விடுதியிலிருந்து புறப்பட்டு கரூர் குமரன் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:55 மணிக்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து வரவேற்றார், மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி தலைமை தாங்கினார், சே.அன்பு, ம.பொம்மன், பொத்தனூர், க.சண்முகம், மு.க. இராஜசேகரன், க.நா.சதாசிவம் ஆகியோர் முன்னிலையேற்றனர். 7:20 மணிக்கு உரையை தொடங்கி தமிழர் தலைவர் 8:05 மணிக்கு நிறைவு செய்தார். மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் பெருந்திரளாகக் கூடி உரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.  நகரச் செயலாளர் ம.சதாசிவம் நன்றி கூறினார். 8:10 மணிக்கு கரூரிலிருந்து ஈரோடு நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

ஈரோடு பொதுக்கூட்டம் (23.1.2020)

23.1.2020 ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:40 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேடை ஏறியவுடன் நேரடியாக உரையைத் தொடங்கி இரவு 10:00 மணிக்கு நிறைவு செய்தார். மாவட்டச் செயலாளர் சிற்றரசு வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் நற்குணம் தலைமையேற்றார். கோபாலகிருஷ்ணன், த.சக்திவேல், இரா.சீனிவாசன், ந.சிவலிங்கம், ப.காளிமுத்து, த.சண்முகம், ப.பிரகலாதன், பெ.இராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.  மணிமாறன் நன்றி கூறினார்.    

                               (தொடரும்)

நிகழ்வு : ‘நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்

மார்ச் 1-15, 2020

மஞ்சை வசந்தன்

(சென்ற இதழின் தொடர்ச்சி…)

(23.1.2020) இரவு சேலத்தில் வரவேற்பு

ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சாலை ஓரத்தில் இரவு உணவை முடித்து நள்ளிரவு 1:15 மணிக்கு சேலம் சிறீசாந்த் விடுதிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களை சேலம் தோழர்கள் வரவேற்றனர். பிறகு உறங்கச் சென்றார்கள்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை

சுயமரியாதை சங்க கூட்டம் சேலம் செவ்வாய்பேட்டை சுயமரியாதைச் சங்கம் உறுப்பினர்கள் கூட்டம் 24.1.2020 அன்று காலை 9:30 மணியளவில் சிறீசாந்த் விடுதி அரங்கில் பழனி புள்ளையண்ணன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.  தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதல் உரையாடல்களுடன் 10:00 மணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது.

பெத்தநாயக்கன் பாளையத்தில் வரவேற்பு

10:15 மணிக்கு சேலத்தில் புறப்பட்டு 11:00 மணிக்கு பெத்தநாயக்கன் பாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு தலைமையில் அனைத்துக் கட்சியினர் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்றனர்.

கழகக் கொடியேற்றுதல்

பெத்தநாயக்கன் பாளையம் கடை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கழக இலட்சியக் கொடியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முற்பகல் 11:20 மணிக்கு ஏற்றிவைத்தார்கள். அங்கும் பொதுமக்கள் கூடி நின்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.

 ஆத்தூர்

24.1.2020 நண்பகல் 12:30 மணிக்கு ஆத்தூர் ராமகிருஷ்ணா ரெசிடென்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை ஆத்தூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குடும்பத்துடன் சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர்.

மாலை 6:10க்கு விடுதியிலிருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேல் வாழ்விணையரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விடைபெற்றார்.

ஆத்தூர் பொதுக்கூட்டம் (24.1.2020)

ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:20 க்கு வருகை தந்தார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மாவட்டச் செயலாளர் நீ.சேகர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் த. வானவில் தலைமையேற்றார். பெ.சோமசுந்தரம், சி.சுப்ரமணியன், விடுதலை சந்திரன், வெ. அண்ணாத்துரை, திவாகர், வீராச்சாமி ஆகியோர் முன்னிலையேற்றனர். உ.செல்வன் நன்றி கூறினார். 7:10 மணி முதல் 8:05 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.  பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய ஆசிரியர் அவர்களின் உரையை பெருந்திரளாக பொது மக்கள் கூடி கேட்டனர்.

எடைக்கு எடை நாணயம்

நீட் எதிர்ப்புப் பரப்புரை மேற்கொண்டு ஆத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆத்தூர் கழக இளைஞரணித் தோழர்களால் பொதுக்கூட்ட மேடையில் பொது மக்களின் வாழ்த்து-களிடையே எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. நாணயத்தைப் பெற்றுக்-கொண்ட ஆசிரியர் அவர்கள் எனது எடைக்கு மேலாக வழங்கப்பட்ட நாணயம் ரூ.16,000 திருச்சியில் இயங்கி வரும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

ஆத்தூர் பொதுக்கூட்ட மேடையில் தோழர் இளமாறன் அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களிடத்தில் விடைபெற்று இரவு 8:10க்கு கல்லக்குறிச்சி நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

கல்லக்குறிச்சியில் வரவேற்பு

ஆத்தூர் பொதுக்கூட்டம் முடிந்து கல்லக்குறிச்சிக்கு வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு இரவு 9:05க்கு மண்டலத் தலைவர் க.மு.தாஸ் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தோழர்கள் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

கல்லக்குறிச்சி பொதுக்கூட்டம் (24.1.2020)

கல்லக்குறிச்சி மந்தவெளி பொதுக்கூட்ட மேடைக்கு 24.1.2020 இரவு 9:10 மணிக்கு வந்தடைந்தார் தமிழர் தலைவர் அவர்கள். மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமையேற்றார். பொன்.ராமகிருஷ்ணன், க.மு.தாஸ், குழ.செல்வராசு, த.பெரியசாமி, து.சுந்தரராசன் உள்ளிட்டோர் முன்னிலை யேற்றனர். 9:15 மணி முதல் 10:00 மணி வரை தமிழர் ஆசிரியர் அவர்கள் 45 நிமிடங்கள் சிறப்புரையாற்றினார்கள். முத்துசாமி நன்றி கூறினார்.

பெரம்பலூரில் வரவேற்பு

6ஆவது நாள் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு 25.1.2020 மாலை 5:30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து புறப்பட்டு பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 6:50 மணியளவில் பெரம்பலூர் மூன்று ரோட்டில் தி.மு.க பொறுப்பாளர் முகுந்தன் தலைமையில் தி.மு.க, தி.க, வி.சி.க தோழர்கள் பயனாடை அணிவித்து உணர்ச்சி மிக்க வரவேற்பு அளித்து இருசக்கர வாகனங்களில் முன்னே அணிவகுத்து சென்றனர்.

பெரம்பலூர் பொதுக்கூட்டம் (25.1.2020)

பெரம்பலூர் தேரடியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 7:00 மணிக்கு வருகை தந்தார் ஆசிரியர் அவர்கள், நகரத் தலைவர்  ஆறுமுகம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையேற்றார் மண்டலத் தலைவர் காமராஜ் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ப.ஆறுமுகம், இரா.அரங்கராசன், சா.தங்கபிரகாசம், ஆதிசிவம், அண்ணாத்துரை, பெ.துரைசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர் 7:15 மணி முதல் 7:55 வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “நீட்’’டின் அவலங்களை எடுத்துரைத்து உரையாற்றினார்-கள். அனைத்துக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கூடி நின்று உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். மு.விசயேந்திரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

பெரம்பலூர் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அங்குக் கூடியிருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து நீட் பரப்புரைப் பயண நோக்கங்களை விளக்கி பேட்டியளித்தார். அனைவரிடமும் விடைபெற்று இரவு 8:00 மணிக்கு அரியலூர் நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அரியலூர் பொதுக்கூட்டம் (25.1.2020)

25.1.2020 இரண்டாவது கூட்டம் அரியலூர் ஆயிரங்கால் மண்டப வீதியில் அனிதா நினைவரங்கத்தில் எழுச்சியுடன் நடந்தது. மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையேற்றார் மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் மண்டலத் தலைவர் சி.காமராசு, மண்டலச் செயலாளர் சு.மணிவண்ணன், இரத்தின.இராமச்சந்திரன் தங்க.சிவமூர்த்தி, சி.சிவக்கொழுந்து, பேராசிரியர் தங்கவேலு பொறியாளர் இரா.கோவிந்தராசன் உள்ளிட்டோர் முன்னிலையேற்றனர் இரவு 8:50 மணிக்கு மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 9:05க்கு  தொடங்கி 9:55 வரை 50 நிமிடங்கள் உரையாற்றினார், நீட் என்ற தேர்வால் அனிதா உள்பட நமது பிள்ளைகளை எத்தனை பேரை இழந்துள்ளோம்; நீட்டை விரட்டும் வரை நமது போராட்டம் ஓயாது. பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடத் தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்து உரையாற்றினார். பெருந்திரளாக மக்கள் கூடிநின்று ஆசிரியர் உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஒன்றியச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இரவு வல்லத்தில் ஓய்வு

அரியலூர் கூட்டம் முடித்து இரவு 10:00 மணிக்கு தோழர்களிடம் விடைபெற்று புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் பயணக் குழுவினர் இரவு 11:15 மணிக்கு தஞ்சை வல்லம் வந்தடைந்தனர்.

தோழர்கள் சந்திப்பு (26.1.2020)

26.1.2020 அன்று காலை 10:00 மணியளவில் தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் கிளைக்கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து ஒக்கநாடு மேலையூரில் நடைபெறும் மன்னை நாராயணசாமியின் 100ஆம் ஆண்டு விழா, நீட் எதிர்ப்பு கிராமப்புற வட்டார மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர். அனைவரிடமும் விடைபெற்று முற்பகல் 11:00 மணிக்கு மயிலாடுதுறை நோக்கிப் புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (26.1.2020)

மயிலாடுதுறை தங்கும் விடுதியிலிருந்து மாலை 6:30 மணிக்குப் புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 6:40 மணிக்கு 7ஆவது நாள் முதல் கூட்டமான மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமைக்கப்பட்ட கூட்ட மேடைக்கு வருகை தந்தார். மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் குடவாசல் குணசேகரன் தலைமையேற்றார்.  மண்டலத் தலைவர் ச.மு.ஜெகதீசன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் நா.சாமிநாதன் நகரத் தலைவர் சீனிமுத்து, நகரச் செயலாளர் அரங்க. நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை யேற்றார்கள். கழகத் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் வருகை தந்து நீட் பரப்புரைப் பயணத்தை தமிழர் தலைவர் மேற்கொள்வதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.  இரவு 7:00 மணி முதல் 7:55 மணி வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற்றினார்கள். பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நின்று உரையைக் கேட்டு விழிப்புணர்வு பெற்றனர். அனைவரிடமும் விடை பெற்று இரவு 8:00 மணிக்கு சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார் ஆசிரியர். கா.அருள்தாஸ் நன்றி கூறினார்.

சிதம்பரம் பொதுக்கூட்டம் (26.1.2020)

சிதம்பரம் போல் நாராயணதெருவில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு இரவு 9:05 மணிக்கு தமிழர் தலைவர் வருகை தந்தார்கள். மாவட்டச் செயலாளர் அன்பு.  சித்தார்த்தன் வரவேற்றார்.  மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்டபாணி, மாவட்டத் துணைத்தலைவர் கோவி.பெரியார்தாசன் மாவட்ட இணைச் செயலாளர் சி.யாழ்திலீபன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்டச் செயலாளர்  நா.தாமோதரன், மாவட்ட துணைச் செயலாளர் கா. கண்ணன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை யேற்றனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீட் பயணம் மேற்கொண்டுவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வாழ்த்திப் பேசினார். இரவு 9:20 மணி முதல் 10:00 மணி வரை 40 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் நகர கழகத் தலைவர் கோவி.குணசேகரன் நன்றி கூறினார்.

இரவு புதுச்சேரியில் வரவேற்பு

26.1.2020 அன்று சிதம்பரம் கூட்டம் முடித்து பயணக் குழுவினருடன் புதுச்சேரி நோக்கி இரவு 10:05 மணிக்கு புறப்பட்டார் தமிழர் தலைவர், வழியில் கடலூரில் பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி இரவு உணவு முடித்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து நள்ளிரவு 12:30 மணிக்கு புதுச்சேரி அண்ணாமலை தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதுச்சேரி மண்டலத் தலைவர் இர.இராசு, மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், இளைஞரணித் தலைவர் தி. இராஜா உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்றனர். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி சிதம்பரத்திற்கே வருகை தந்து தலைவரை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். இரவு 1:00 மணியளவில் ஓய்வெடுக்கச் சென்றார் தமிழர் தலைவர் அவர்கள்.

புதுச்சேரி பொதுக்கூட்டம் (27.1.2020)

27.1.2020 அன்று எட்டாம் நாள் பயணமாக மாலை 6:40க்கு அண்ணாமலை விடுதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி அவ்வைத்திடல் சாரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு 6:45க்கு வருகை தந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். புதுச்சேரி மண்டலத் தலைவர் இர. இராசா வரவேற்றார்.  புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்றார்.  மண்டலச் செயலாளர் கி. அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் கோ. கிருஷ்ணமூர்த்தி, இரா. சடகோபன், கு. ரஞ்சித் குமார், ந. நடராசன், வீர. இளங்கோவன், லோ. பழனி, இரா. விலாசினிராஜ், அ. எழிலரசி, மு. ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை-யேற்றனர்.  மாலை 7:00 மணிமுதல் 7:55 வரை 55 நிமிடங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்கள்.  முதுகெலும்புள்ள புதுச்சேரி அரசையும் அதன் ஆற்றல்மிகு முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களையும் பாராட்டிப் பேசினார். புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் இறுதியாக சிறப்புரையாற்றினார்.  இளைஞரணித் தலைவர் தி.இராசா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக