திங்கள், 20 பிப்ரவரி, 2017

விருதுநகரில் உண்மை சுயமரியாதைத் திருமணம்

13.07.1930- குடிஅரசிலிருந்து...

தலைவரவர்களே! மணமக்களே! அவர்களது பெற்றோர்களே! மற்றும் சகோதரி, சகோதரர்களே, இந்தக் கூட்டத்தில் எனக்குப் பேச மிக்க ஆசையாயிருக்கிறது. ஆனால் நான் ஆசீர்வாதம் செய்யவோ வாழ்த்துக் கூறவோ எழுந்திருக்கவில்லை. மேல்கண்ட இரண்டும் முறையே புரட்டும் மூட நம்பிக்கையுடையதுமாகும்.

நமது நாட்டில் ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு ஜாதிக்கே உரியதென்றும், அதுவும் அவர்களிடமிருந்து பணத்திற்கு விலைக்குக் கிடைக்கக்கூடியதென்றும் கருதி இருக்கிறோம்.

அனேகமாக ஆசீர்வாத ஜாதி பிச்சையெடுப்பதற்கு இந்த ஆசீர்வாதத்தை  உபயோகப்படுத்துவதையும் பார்க்கின்றோம்.  நம்மை மகாராஜனா-கவும் சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிற வனுடைய  ஆசீர்வாதம் யோக்கியமுடையதும் உண்மையு டையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய் சீமானாய் இருக்கும்படி செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்? தவிர வாழ்த்துவதும் அர்த்தமற்றதேயாகும். ஒருவன் வாழ்த்துதலினாலேயே ஒரு காரியமும் ஆகிவிடாது. வேண்டுமானால் மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம்.

ஆனால் அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைக்கேற்ற கடமை உண்டு. அக்கடமை என்ன-வென்றால் ஆசைப்படுகின்றவரினது ஆசை நிறைவேற உதவியாய் இருப்பதுதான்.

அவ்விதம் நான் ஆசைப்பட்டாலும் அவ்வாசை நிறைவேற நான் எவ்வளவு தூரம் உதவியாய் இருக்க முடியும்? என்பது எனக்கே தெரியவில்லை. ஆனால் எனது  நரைத்த தலையைப் பார்த்து என்னை முதலில் கூப்பிட்டு விட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

ஆகையால் இந்த சமயத்தை நிறைவேற்றிவைக்க சக்தி இல்லாத ஆசைப்படுவதை விட மணமக்களையும் மணமக்கள்  வீட்டாரையும் பாராட்டி மணமக்களுக்கு  ஏதாவது இரண்டொரு யோசனை சொல்ல உபயோகித்துக் கொள்ளுகின்றேன்.

சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதை கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மை யானது என்று சொல்லுவேன். என்னவெனில்  இந்த கல்யாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை. மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிகத் துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க்கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே  முடியாது. பெண்கள் மனிதத் தன்மை  அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை  அற்ற தன்மைக்கும்  இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே  அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி  வந்திருந்தால் அறுத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.

நம்மை நாம் சூத்திரரர்கள்  இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக்  கட்டுப்பட்டிருக்க வேண்டும், அதிலும் தாலி கட்டின புருஷனுக்கு  கீழ் படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன.  ஆதலால் அப்பேர்ப்பட்ட மிருக உணர்ச்சியையும் அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மண மக்களையும் அதற்கு உதவியாயிருந்த பெற்றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன்; பாராட்டுகிறேன், பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள்  பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று  சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ  என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள்.

ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக் கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன். அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக் கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபையோ ருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவைகளுக்கு ஒழுங்கும் அவசியமான  கட்டுப்பாடும்  பழக்கிக் கொடுக்க வேண்டும்.  இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனைக் குழந் தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள். அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத  கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது. ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரி மையும் அவசியமானதாகும். தவிர பெண்களுக்கு இப் போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ  ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய்  பேசி விளையாட வேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலை வியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப் பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

-விடுதலை,18.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக