செவ்வாய், 7 ஜனவரி, 2020

இசையுலகில் வடமொழி ஆதிக்கம்- 36

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9.3.1985,  10.3.1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், டாக்டர் சேலம் எஸ்.ஜெயலட்சுமி  அவர்கள் உரை வருமாறு.

17.12.2019 அன்றைய தொடர்ச்சி...

இசையுலகில் முன்னரே கூறியபடி சாமவேதம் தான் ஆரம்பம் என்ற கொள்கை இருப்பினும் வடமொழியில் இன்று அகப்படும் சாமவேதத்தில் இசைக்கூறுகள் ஒன்றுமில்லை என்பதையும், இந்த வேதங்களுக்கு முன்பாகவே தமிழ் நான்மறைகள்   இருந்திருக்கக்கூடும் என்பதையும் பார்த்தோம். தமிழிசையில் ஆதியிசைகள் பதினோராயிரத்துத் தொள்ளாயிரம் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் யாவும் இசையைப் பற்றிய ஏராள மான குறிப்புகளைத் தருகின்றன. பரதம் என்ற தமிழ் நூல் ஒன்று இருந்து இறந்தமை தெரிகிறது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தில் கூறுகின்றார். நாட்டிய நன்னூல் கடைபிடித்து என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் நாட்டிய நூல் வடமொழியில் உள்ள நாட் டிய சாத்திரமாக நிச்சயம் இராது என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டார். ஏனெனில் நாட்டிய சாத்திரத்தில் வட மொழி வல்லார் கூறிக்கொள்வதுபோல் அத்துணைச் செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் சிலப்பதி காரத்தை எடுத்துக்கொண்டாலோ அதனுள் வரும் சிற்சில குறிப்புகளே ஒரு இசைக்களஞ்சியம் ஆகும் அளவுக்கு இருக்கின்றன என்பது நமக்குப் பெருமை யைக் கொடுக்கத்தக்கது.

சங்க இலக்கியங்களில் காணப்படும் பலதுறைச் செய்திகளைப் பிற மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் நாம் தமிழின் உண்மையான உயர்வை உணர முடியும். முதலாவது, தமிழ் எவ்வளவு ஏற்றமு டையது என்பதைத் தமிழர்களாகிய நாமே புரிந்து கொள்ளவில்லை. அப்படியிருக்கப் பிறமொழியினர் எவ்வாறு புரிந்து கொள்ளமுடியும்! பிற மொழியினர் தமிழின் ஒப்பற்ற பெருமையைத் தெரிந்து கொள்வதற்கு நாம் தமிழில் உள்ள அரிய சொற்களை, செய்திகளை திறமையான ஆய்வுடன் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து ஆங்கிலத்திலும், அய்ரோப்பிய மொழிகளி லும், பிற இந்திய மொழிகளிலும் நூல்களை வெளியிட வேண்டியது மிகமிக அவசியம். இந்த நோக்கோடு முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி நூல்களை இயற்றினார்கள் என்றால் அது மிகவும் வரவேற்கத்தக்கது.

இசையுலகில் நமது இந்திய இசை அதுவும் தென் னாட்டிசை மிக நுட்பமானதாகவும் பண்பட்டதாகவும் விளங்கிவருகிறது. வடஇந்திய இசையும் பண் அல்லது இராகம் என்ற அடிப்படையில் (Malodic System)  ஆனதே என்றாலும் நுண் சுரங்களை நமது தமிழ்நாட்டு இசையைப்போல் இவ்வளவு அதிகமாகக் கையாள் வதில்லை. உலக இசைகளில் ஆர்மோனியத்தில் அமைந்துள்ளது போல் பன்னிரண்டு அரைச்சுரங்களே (Twelve Semi Tones) கையாளப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு இசையில் காற்சுரங்கள், அரைக்காற்சுரங்கள் என்று பல நுண்சுரங்கள் இராகங்களில் பொன்னில் பதித்த வைரங்கள் போல் மிளிர்ந்து காணப்படுகின்றன. இந்த ஒப்பற்ற இசையின் இலக்கணத்தை ஆராய்தல் பொருட்டு இந்தியாவிற்கு வரும் மேனாட்டு இசைப் பேராசிரியர்கள் இங்குள்ள வடமொழி நூல்களை ஆராய்கிறார்கள். இங்கு இசைக்கப்படும் இசைக்கும் இந்நூல்களில் காணப்படும் இலக்கணத்திற்கும் ஒரு விதச் சம்பந்தமுமில்லையே என்று திகைக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இசையின் அடிப்படை இலக் கணங்கள் தமிழிலேதான் இருக்கிறது. வடமொழி மய மாக்கும் முயற்சியில் பிற மொழியினரால் சொற்களைத் தான் வடமொழியாக்க முடிந்தது. ஆனால் அந்த சொல் லின் அடிப்படை மரபை, இலக்கணத்தை அவர்களால் அசைக்கமுடியவில்லை. இடபம் என்ற சொல்லை ரிஷபம் என்று ஆக்கினர். காந்தாரம் என்பதைக் காரந் தாரம் என்று ஆக்கினர். பண்பெயர்களை மாற்றியமைத் தார்கள். கலை என்பதை கலா என்றார்கள். பரதம் என்ற தமிழ்ச்சொல்லை வடசொல் என்றார்கள். நாட்டியம் என்பதை நாட்யம் என்று ஆக்கினார்கள். திருவிடம் என்பதை திராவிடம் என்றார்கள். தமிழில் மெய்யெ ழுத்து முதலாக வராது என்ற காரணத்தில் இச்சொற்கள் வடமொழிச் சொற்கள் என்று கூறினார்கள்.

கி.பி. 12 ஆவது நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தமிழிசை மரபும் பாணர் வரன்முறையும் சீராகவும் சிறப்பாகவும் இருந்துள்ளன.  பின்னர்த் தமிழ்நாட்டு முடிமன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஒப்பற்ற பாணர் மரபும் தமிழிசையின் வடிவமும் பிறமொழிகளின் பெயர்வழியே வேரூன்ற ஆரம்பித்தன. தமிழ்நாட்டுத் தலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. திருமறைக்காடு - வேதாரண்யமாயிற்று: திருவெண்காடு சுவேதாரண்ய மாயிற்று. பெரியகோயில் பிருஹதீஸ்வரமாயிற்று.

தேவாரத் திருமுறைகளில் நூற்றிமூன்று பண்களைப் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.  தெய்வச் சந்நிதி களிலே இசையோடும் தாளத்தோடும் யாழ், குழல், வீணை, மொந்தை, முழவம் ஆகிய இன்னிசைக் கருவிகளோடு தெய்வீகப்பாக்கள் பாடப்பட்டன. பண் சுமந்த பாடல்கள், நாடெங்கும் மக்களை இசையிலும் பக்தியிலும் பிணைத்தது. நடனக்கலை கோயிலில் வழிபடும் தெய்வம் வீதியிலே புறப்பட்டபோது நவசந்தி நிருத்தங்களாக ஒப்பற்ற கலையழகோடு தெய்வத்தின் முன்னிலையிலும் மக்கள் கண்டுகளிக்கும்படியாகவும் ஆடப்பட்டன. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் சிற்பக் கலையையும் இசையையும் நடனத்தையும் மற்றும் பல கவின் கலைகளையும் ஈடு இணையற்ற முறையிலே பராமரித்துப் பாதுகாத்து வந்தன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று சுந்தரமூர்த்தி அடிகள் சம்பந்தரைப் போற்றிப் பாடினார். சமயத்தைப் பரப்புவதைக் காட்டிலும் தமிழைப் பரப்புவதே சிவ நெறிச் செல்வர்களின் நோக்காக இருந்தது. ஆகம சாத்திரம் திராவிடப் பண்பாடேயாகும் என்று சுநீதி குமார் சாட்டர்ஜி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறி யுள்ளார்கள். இக்கலைகள் இன்றைக்கும் இங்கு தமிழ் நாட்டிலே சிறந்தோங்கி இருப்பதே நமக்குப் பெரும் சான்றாகும்.

எவ்விதமோ பலகுறுக்கு வழிகளிலே தமிழர்களை வஞ்சித்துத் தமிழ் மரபாகிய நம்முடைய பண்பாட்டை நம்முடையது அல்ல என்று நாமே நம்பும்படியாக ஒரு சாரார் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறார்கள். பல தமிழ்ச் சொற்களை நமது புலவர்களே நம்முடைய தில்லை என்றும் மறுத்துக் கூறும் நிலைக்கும் நாம் வந்துள்ளோம். கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தெலுங்கு, கன்னடம், வடமொழி ஆகியவற்றில் இசை பற்றிய பல நூல்கள் பாடல்கள் வந்துள்ளன. அவை எதிலும் நமது பண்டைய இசை முறைக்கு உகந்த இலக்கணங்கள் காணப்படவில்லை. ஒவ்வொன்றும் தாறுமாறாகப் பல கொள்கைகளைக் கூறிக்கொண்டு, ஒன்றோடொன்று முரண்படுகின்றன. இன்று கர்நாடக இசை என்பது தமிழிசையே அன்றி வேறில்லை. இரா கங்களின் பெயர்களை மாற்றி எவருக்கும் ஒன்றும் புரியாதவாறு நிறையக் குழப்பங்களை உண்டு பண்ணி யுள்ளார்கள். ஆராய்ச்சியாளர்கள் செய்வதெல்லாம், இந்நூல்கள் சரியான, உண்மையான தகவல்களைத் தரவில்லையே என்று புலம்புவதுதான். கர்நாடக இசை அடிப்படை இலக்கணம் ஏதும் கூறாமல் சரிகமபதநிச என்றால் ஆரோகணம் சநிதபமகரிச என்றால் அவரோ கணம் என்று கூறிவிட்டு இசைப்பயிற்சியை ஆரம்பிக் கின்றன, சரிகம முதலிய ஏழிசை எப்படிப் பிறந்தன? இவற்றின் இயல்பு என்ன? எங்ஙனம் பண்கள் பிறந் தன? அதற்கு அடிப்படை இலக்கணம் என்ன என்பது பற்றி எவ்விதச் செய்தியும் இல்லை. சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரம் என்று நூலை மிகச் சிறப்பாகக் கூறுவர் வடமொழி ஆதரவாளர்கள். அந்தச் சாரங்க தேவர் தேவாரவர்த்தனீ என்ற தேவாரத்தில் காணப் படும் பண்களைக் குறிப்பிட்டுள்ளார். பன்னிரெண்டு சுரங்களுக்கு 22 சுருதிகள் (காற்சுரம் அல்லது அலகு என்று தமிழிசை கூறும்) என்ற ஒரு தவறான கொள்கை யைப் பரப்பி இசையுலகில் எல்லையற்ற குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளார் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.

கருணாமிருத சாகரம் என்ற அரிய சிலப்பதிகார ஆராய்ச்சி நூலை எழுதியுள்ள தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்த 22 சுருதி என்பது 12 அரைச்சுரங்கள் 24 அலகுகளாக ஆகின்றபடியால் இரண்டு சுரங்கள் இணை, கிளை முறையில் அமைந்துள்ளவற்றை ஒவ் வொரு அலகு குறைத்துப் பாடும் முறையால் இக்கருத்து ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கியுள்ளார். இந்த இலக்கணம் சிலப்பதிகாரத்தின் மூலம் நமக்கு கிடைக் கிறது. பல அரிய இசைத் தமிழ் நூல்கள் இறந்தமையால் நமக்கு இவ்விதம் பெரும் இடையூறு ஏற்பட்டது. தமிழிசையின் வளத்தையும் மேன்மையையும் பார்க் கும்போது கர்நாடக இசையெல்லாம் மிகவும் பிற்பட் டது; ஏன், தாழ்வுற்றது என்றும்கூடச் சொல்லலாம்.

பிழையா மரபின் ஈரேழ் கோவையை

உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி

என்று இளங்கோவடிகள்  இசை இலக்கணத்தைச் சிலப்பதிகாரக் காவியத்தில் நாம் செய்த பெரும்பேற்றால் பொதிந்து வைத்தாரோ நாம் பிழைத்தோமோ; பன்னிரு சுரங்களைப் பன்னிரண்டு இராசி வீடுகளில் அமைத்து சுரங்களினூடே பகையும் நட்பும் உறவும் பின்னிப் பிணைக்க ஒன்பது சுவைகளையும் அள்ளிச் சொரியும் நமது இசையிலும் பண்களிலும் காணப்படும் பெருமித மும் ஆனந்தமும் நெகிழ்ச்சியும்தான் என்னே! உலகி லேயே இவ்வளவு வளம்பெற்ற இசைமரபு எங்கும் கிடையாது. பரதநாட்டியத்தின் காணங்கள் கூத்து வகை கள் யாவும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளன. சிலம்பில் காணப்படும் அளவு செய்திகள் வடமொழி பரதநாட்டிய சாத்திரத்தில் காணப்படவில்லை. ஆகவே யாரிடமிருந்து யார் கடன் வாங்கியிருக்கக்கூடும் என் பதை நாம் நன்கறியலாம்.

எந்த நூலை எடுத்தாலும் வடமொழியில் அந்நூலை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு வடமொழி நூல்தான் மூலம் என்று சொல்வது ஒரு வழக்காக இருக்கிறது. நல்ல காலம்! சிலப்பதிகாரத்தை எவரும் மொழிபெயர்க்கவில்லை. அதாவது மொழிபெயர்க்க இயலவில்லை என்று தெரிகிறது.

திரு உ.வே. சாமிநாதய்யர் அவர்கள், சிலப்பதிகாரக் காவியம் இளங்கோவடிகளால் அவர் காலத்திலேயே செய்யப்பட்டது. இது வேறு எந்த மொழியிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டது என்று எவராலும் எவ் விதத் திலும் சொல்லமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறு கின்றார்.

ஆரியர் வருகை என்று சொல்லப்படும் காலத்திற்கு முன்பு திராவிட சம்பந்தமான ஒரு நாகரிகம் இந்தியா முழுவதும் பலுசிஸ்தானம், வங்காளம் வரை பரவியிருந்ததாக பானர்ஜி முதலிய வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள். ஆகவேதான், நாம் இன்று காஷ் மீரத்திலும், இமயத்திலும், ஒரிஸ்ஸாவிலும், வங்காளத் திலும் நமது பண்பாட்டின் சுவடுகள் காணப்படுவதைக் காண்கிறோம். பல திராவிடச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் வங்காள மொழியில்கூடக்  காணப்படுகிறது என்று கூறுகிறார் பண்டர்கர் என்னும் அறிஞர்.

ஆரியர்களுடைய வருகைக்கு முன்னர் வட இந்தியாவிலே திராவிட மொழி பரவியிருந்தது என்ற உண்மை இங்ஙனம் உறுதியாயிற்று. வட இந்திய பிராந்திய மொழிகளை ஆராய்ந்து பார்க்கும்போது இவ்வுண்மை தெற்றெனப் புலனாகிறது. வடமொழிச் சொற்கள் தொடர்கள் நிரம்பியிருக்கும் வங்காள மொழிகூடப் பெருவாரியான திராவிடச் சொற்களைக் கொண்டதாகவும் மொழி ஒற்றுமை உடையதாகவும் இருக்கிறது. அதைவிட அதிசயமானது இந்தி மொழி யிலும் திராவிடச் சொற்களை நிறையக் காணமுடியும் என்ற உண்மைதான். ஒரு காலத்தில் வட இந்தியா முழு வதிலும் திராவிட மொழியே வழங்கிவந்தது என்பதைப் பற்றி எந்தவிதமான அய்யமும் கொள்வதற்கில்லை. பி.ஆர். பண்டர்கர் இந்தியாவின் பண்டைய வரலாறு என்ற சொற்பொழிவு (பக்கம்5) Quotation on Tamil and Tamil Culture compiled by R.Madhivanan Thainadu Pathipagam 1981).

இசைமூலமாகவும் இசைப் பண்பாட்டின் மூலமா கவும் தமிழிசைக்கும் தமிழிசை இலக்கணத்திற்கும் இணையான இசைக்கலை உலகில் வேறெங்குமில்லை என்பதை நிலைநாட்டலாம் என்பது எனது தாழ்ந்த கருத்து. தமிழ் நூல்களில் உள்ள ஒப்பற்ற உண்மைகளை அழியா மரபுகளைத் தமிழர் நன்கு அறிந்து உவக்கும் வண்ணம் தமிழிலும், பிற மொழியினர் உணர்ந்து கொள்ளும் வண்ணம் பிற மொழிகளிலும் நூல்களினை உருவாக்கித் தருவதே நமது தலையாய கடன் என்று எனது பணிவான கருத்தை தமிழறிஞர்கள் முன் விண்ணப்பம் செய்கிறேன்.

- டாக்டர் சேலம் எஸ். ஜெயலட்சுமி

- விடுதலை நாளேடு 19 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக