வெள்ளி, 24 ஜனவரி, 2020

சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருத மயமாக்கப்பட்டமை (அல்லது) சைவத்தில் சமற்கிருதத்தின் செல்வாக்கு - 42

டாக்டர் ச.கெங்காதரன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (ஷிணீஸீsளீக்ஷீவீtவீsணீtவீஷீஸீ) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் ச.கெங்காதரன் ஆற்றிய உரை வருமாறு:

 

14.1.2020 அன்றைய தொடர்ச்சி...

சமற்கிருதச் சொற்கள் தமிழில் வரும்போது அவற் றைத் தமிழ் மயமாக்கிச் சேர்த்துக்கொள்வதற்கு தற்சமம், தற்பவம் என்னும் நெறிகள் தமிழ்மொழியில் உள்ளன. இத்தகைய நெறிமுறைகள் பிறமொழிச் சொற்கள் சமற் கிருதத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்போது கையாளப்படு வதாகத் தெரியவில்லை. ஆகவே, பிறமொழிச் சொற்கள் சமற்கிருதத்தில் கலந்துள்ளமைபற்றித் தெளிவாக அறிய இயலாமல் போகிறது.

பழந்தமிழ்ச் சொற்கள் இருக்கவும் அதற்கு இணை யாகச் சமற்கிருதச் சொற்களைப் படைத்து புதியதாகப் படைக்கப்பட்ட சமற்கிருதச் சொற்கள் தாம் மூலமானவை எனக் காட்டும் முயற்சி கண்டிக்கத்தக்கது. பெரிய புராணத்தைப் பின்பற்றி உபமன்னிய பக்த விலாசம் என்னும் நூலைச் சமற்கிருதத்தில் இயற்றி, இதுதான் பெரிய புராணத்துக்கும் முற்பட்டது என்று கூறல் தவறு. இவ்வாறு செய்யும் முயற்சியில் தவறு ஏற்படும்போது இம்முயற்சிகளின் போலித் தன்மை வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சிறுதொண்டர் என்னும் பக்தர் தப்ர பக்தா என மொழிபெயர்க்கப்படுகிறார்.  சிறுதொண்டர் என்பதன் கருத்து வயதில் குறைந்தவரானாலும் திறமை யில் பெரியவர் என்னும் கருத்தாகப் பெரிய புராணத்தில் காணப்படுகிறது. இக்கருத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்பம் என்னும் பொருள்பட தப்ர பக்தா என்னும் மொழி பெயர்ப்பு உள்ளது. சிறிய பெருந்தகையார் என்று ஞானசம்பந்தரைச் சேக்கிழார் கூறும் குறிப்பு இக்குற்றத் தைத் தவிர்ப்பதாக உள்ளது.

இவ்வாறே நெல்லையப்பர் செஞ்சாலிவாடி ஈசுவரர் என்றும், நெய்யாடியப்பர் கிருதபுரி ஈசுவரர் என்றும், மழபாடி வயிரத்தூண் வஜ்ர தம்பேசுவரர் என்றும் அழைக்கப்படும் வழக்கத்தை நோக்கலாம். அஞ்சொலாள் என்னும் பெயர் மாயூர திருப்பதிகத்தில் காணப் படுகிறது. இது அஞ்சல் என்று ஆகி பிறகு இச்சொல்லே அபயாம்பிகை (அபயம் தருபவள்) என வழங்குவதாயிற்று. இவ்வாறே வடிவுடை நாயகி காந்திமதியாகவும், ஏலவார் குழவி சுகந்த குந்தளாம்பாளாகவும், சொன்ன வாறு அறிவார் யுக்த வேதீஸ்வரராகவும், அறம் வளர்த்த நாயகி தர்ம சம்வர்த்தனியாகவும் வழங்கப்படுகிறார்கள். திருப்பழனம் எனப்படும் தலம் பயணம் என மருவி, இதற்கு இணையான சமற்கிருதச் சொல் (வயல் என்பதைக் குறிக்காமல்) பயணம் என்பதைக் குறிக்கும் பிரஸ்தானபுரம் என்று வழங்கப்படுகிறது.

இறைவனைக் குறிக்கும் சொற்களைப்போல மனித னைக் குறிக்கும் சொல்லும் இவ்வாறு சமற்கிருத மாற்றம் பெற்றது. கருணாகரன் என்னும் சொல் கருணாஹரன் என்று தவறாக எழுதும்போது கருணைக்குக் காரணமா னவன் என்னும் பொருள் மாறி கருணையைக் கொல் பவன் என்னும் பொருள் உண்டாகிறது. திருநெல்வேலிப் பேருந்து நிலையத்துக்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையேயுள்ள பாலத்தை ஒரு தனி மனிதரே ஆங்கில ஆட்சிக் காலத்தில் தம் தாயின் அறிவுரைப்படி, தமக்கு அப்போது கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் பரிசுச் சீட்டுப் பணத்தைக் கொண்டு கட்டினார் என்னும் செய்தி சொல் லப்படுகிறது. தற்போதும் அங்குள்ள பாலம் சுலோசன முதலியார் பாலம் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் திருமண நல்லக்கண்ணு முதலியார் என்று அழைக்கப் படும் சுலோசன முதலியார் என்று உள்ளது என்னும் செய்தியை நெல்லை சைவப் பெரியார் சி.சு. மணி அவர் கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே, நல்லக்கண்ணு என்று அழைப்பதைவிட சுலோசனன் என்று அழைப்பதில் பெருமையிருப்பதாகக் கருதியிருப்பது தெரிகிறது.

சைவ சித்தாந்த தத்துவத்தைப் பொறுத்தமட்டில் தொல்காப்பியம் முதலிய சங்க இலக்கியங்களைக் கொண்டு மட்டுமே வளர்ந்தது என ஒருசாரார் நிறுவ முயன்றுள்ளனர். மெய்யின் அகரமொடு சிவணும் என்பது முதற்கொண்டு தொல்காப்பியச் சூத்திரங்களைக் கொண்டு மட்டும் விளக்க முயலலாம். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து என்று உள்ள பெயர் களே சைவ சித்தாந்த இறை, உயிர், தளை கருத்துகளை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. மெல்லெழுத்து களின் வகைகளான வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை உயிர்களின் வகைகளைக் குறிக்கின்றன.

எழுத்துகளை ஒலிக்கும்போது இலக்கணத்தால் குறிக் கப்படும் எடுத்தல், நலித்தல், படுத்தல் என்னும் முறைகள் உலகத் தோற்றல், நிலை, இறுதி என்பவற்றைக் குறிப்பன வாகக் கொள்ளலாம். வ, ய என்னும் எழுத்துகள் உடம் படுமெய் என குறிக்கப்படும். இது இரு உயிர்களை இணைப்பது, பிறப்பை அழிப்பது என்னும் பொருளில் ஆளப்படுகிறது. வ, ய என்னும் எழுத்துகள் தூல, சூக்கும பஞ்சாக்கரத்தில் அருளையும், உயிரையும் முறையே குறிப்பதை நாம் நோக்கலாம். வினை என்னும் சொல்லே சைவ சித்தாந்த இரு வினையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. பா. வே. மாணிக்க நாயகர் எழுதிய “The mystical aspect of  Tamil alphabets” என்னும் நூலில் தமிழ் எழுத்துகளுக்கும் சைவ தத்துவத்துக்கும் இடையே உள்ள உறவு தெளிவாக்கப்படுகின்றது.

ஒன்றென்றது ஒன்றே காண் ஒன்றே பதி..... இக்கிரமத் தென்னும் இருக்கு என்னும் மெய்கண்டாரின் விளக்கம் ஏகம் சத், விப்ரா பஹீதா வதந்தி என்னும் இருக்குவேத மொழிக்கு விளக்கமாக உள்ளது. மேலும், மன்னுசிவன் சந்தியில் மற்றுலகம் சேட்டித்தது என்னும் மறையின் இயல் மறந்தாய் என்னும் பகுதியும் நோக்கத்தக்கது. இது போன்ற பகுதிகளுக்கு தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கியங்களிலிருந்து சான்று காட்ட இயலாது.

இந்நிலையில் நாம் செய்யவேண்டியது என்ன? ஏற்கெனவே கலந்துவிட்ட ஆரிய, திராவிடப் பண்புகள் சைவ, வைணவ மெய்ப்பொருளியலாகக் காணப்படு கின்றன. தற்போதைய நிலையில் இக்கலப்பை நீக்கவோ, மறுக்கவோ இயலாது. ஆனாலும், விழிப்பின்மையால் முன்பு ஏமாந்ததுபோல் ஏமாறாமல், நம் பண்பாட்டுக்கு உரிய நலத்தை நாம் பார்த்துக் கொள்ளவேண்டியது நம் கடமையாகும்.

- விடுதலை நாளேடு 21 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக