செவ்வாய், 14 ஜனவரி, 2020

சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருத மயமாக்கப்பட்டமை (அல்லது) சைவத்தில் சமற்கிருதத்தின் செல்வாக்கு - 41

டாக்டர் ச.கெங்காதரன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் ச.கெங்காதரன் ஆற்றிய உரை வருமாறு:

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருளை அறியவேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் இக்கட்டுரை எழுதப்படுகிறது. சமற்கிருதத்தின் செல்வாக்கு சைவ சமய, மெய்ப்பொருள் இயலில் ஏன் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? சமற்கிருதத்தின் செல்வாக்கு சைவத்தில் ஏற்படுவதற்குக் காரணமானவர்கள் யார்? அதன் சூழ்நிலை யாது?

நம் நாட்டில் தற்போது காணப்படும் ருத்திர-சிவ வழிபாடு வேத காலத்தில் உள்ள ருத்திர வழிபாடும் அதற்கு முன்பே இங்குள்ள திராவிடர்களிடம் காணப்பட்ட சிவ வழிபாடும் சேர்ந்துள்ள வழிபாடு ஆகும். கோயிலோ, உருவ வணக்கமோ ரிக் வேதத்தில் இடம்பெறவில்லை. வேள்வியே ஆரிய வழிபாட்டின் மையமாக இருந்தது. சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மை கி.மு. 2500 முதல் கி.மு.1500 வரை எனக் கருதப்படுகிறது. அம்மை வழிபாடும் சிவ வழிபாடும் சிந்துவெளி மக்களை ஆட்கொண்டது. சிவபெருமானின் பண்டைய வடிவம் என்று ஆய்வாளரால் கருதப்பெறும் இலச்சினையில், அவர் விலங்குகள் சூழப் பதுமாசனத்தில் அமர்ந்திருக்கிறார். பசுபதியாகவும், மகா யோகியாகவும் பரமசிவனைக் கருதும் மரபு அந்நாளிலேயே நிலைபெற்றதற்கு இது சான்று. (பசுபதி-விலங்குகளின் தலைவன் - ஆன்மாக்களின் தலைவன் என்று பின்னாளைய சாத்திரம் பொருள் கண்டது.) சிவபிரானை மூன்று முக முடையோராக முத்திரையில் காண்கிறோம். இதிலிருந்து அவரை முக்கண்ணராகக் கருதும் கொள்கை வளர்ந்தது எனலாம். ரிக் வேத ருத்திரனும் சிந்துவெளிச் சிவனும் ஒன்று சேர்ந்தனர் என்பது எவ்வாறு புலனாகிறது?

ருத்திரன், சிவன் என்ற சொற்களின் வேர்ச் சொல்லில் ஒற்றுமை தெரிகிறது. ரிக் வேதம் ஐஐ 1.6.இல் சாயனர் ருத் என்னும் சொல்லுக்கு ருத்-துக்கம் துக்க ஹேது வா பாபாதிஹி தஸ்ய த்ராவயிதா ஏதான் நாமகோ தேவோசி என்று விளக்கம் தருகிறார். துன்பம் அல்லது அதற்குக் காரணமான பாவத்தை நீக்குபவர் என்பது இதன் பொருள். சித்தாந்த கௌ முதி என்னும் நூல் சிவம் என்னும் சொல்லுக்குப் பொருள் மெலிதாக்குதல் என்று கூறுகிறது. சித்தாந்த கல்ப த்ருமா என்னும் நூல் இந்தச் சொல்லை மேலும் விளக்குகையில் பாவத்தை மெலிதாக்குபவர் என்று கூறுகிறது. ஆகவே ருத்திரவழிபாடும் சிவவழிபாடும் இணைந்து தற்போது உள்ள சிவ வழிபாடாக மலர்ந்தது எனக் கருதலாம்.

திராவிட-ஆரிய பண்பாட்டின் கலப்பினால் ருத்திர-சிவ வழிபாடு தோன்றியபோது, திராவிடரிடமிருந்து மூடநம்பிக் கைகள் ஆரியரிடம் சென்றிருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். தென்னிந்திய சைவத்தின் தோற்றமும் தொன்மை வரலாறும் என்னும் நூலில் சி.வி. நாராயண அய்யர் இவ்வாறுதான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்னும் நியதி இல்லை; ஏனெனில், ஆரியரிடமே போதிய மூடநம்பிக்கை ஏன் இருந்திருக்கக் கூடாது? என்று கேட்கிறார்.

“It is not necessary to suppose that the Aryan religion was in any manner influenced by non-Aryan superstitions for there was nothing to prevent the Aryan themselves from having superstitions.”

C.V. Narayana Ayyer, “Origin and early History of  Saivism in South India”. University of  Madras, 1974 p.9.

ஆகவே, இரு நாகரிகங்கள் பழகும்போது ஏற்படும் மாற்றத் தால் சமற்கிருதத்தின் செல்வாக்கு திராவிடப் பண்பாட்டில் ஏற்பட்டது.

இந்த இரு பண்பாடுகளின் கலப்பில் இரு நாகரிகங்களின் சிறந்த பண்புகளும் (ஒன்று சேர்த்தலின் மூலம்) பாதுகாக்கப்பட வேண்டும் என்று சில சான்றோர் எண்ணினர். அவர்களில் திருமூலர், திருஞான சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும்

உணர்த்து மவனை யுணரலு மாமே

ஆரியமும் தமிழும் உடனல்கி காரிகையார்க்குங்

கருணை செய்தானே

என்பவை திருமூலர் திருமொழிகள், திருமூலர் தமிழ்ப் பண்பாட்டுடன் ஆகமப் பண்பாட்டை இணைத்து முதலில் இக்கலப்புக்கு வழிகோலியவர். இரண்டாவது மேற்கோளில் உடன் என்றதனால் ஆரியத்தினின்றே ஞானநூற் கொள்கைகள் தமிழிற்கு வந்தன என்று கொள்ளுதல் பொருத்தமில்லாதது என்பது புலனாகும். மேலும், தமிழ்ச் சொல்லும் வடச்சொல்லும் தாள்நிழற் சேர தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழவ மொந்தை மல்கு பாடல் செய்கையிட மோவார் என்று வரும் திருஞானசம்பந்தர் திருவாக்குகளையும் நோக்க வேண்டும்.

திருஞானசம்பந்தர் திருமூலருக்கு அடுத்து இரு நாகரிகக் கலப்பை இறுக்கி, சைவ சமயத்தை நிலை நிறுத்தியவர். கவுணிய குலத்தில் தோன்றியவர் என்பதை விடாமல் கூறுவதோடு தன்னைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று பலமுறை தொடர்ந்து அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டவர். தாம் அந்தணராகப் பிறந்து, சமற்கிருதம் நன்கு கைவரப் பெற்றவராக இருந்தும் தீந்தமிழிலே 383 பதிகங்கள் பாடியதிலே மட்டும் கருத்தைச் செலுத்தியவர். சமற்கிருத மொழியில் அவர் நூல் எழுதியதாகக் காணப்படவில்லை. மேலும், பதி, பசு, பாசம் என்னும் சொற்களைப் பயன்படுத்துவதுடன் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்த முயல்வதை தேவாரத்தில் கண்டுகளிக்கலாம்.

விளையாதது ஓர் பரிசில் வரு பசுபாச வேதனை ஒண் தளையாயின தவிரவ் வருள் தலைவன் என்னும் திருமுதுகுன்றப் பதிகத்தில் தலைவன், தளை, விளையாதது என்னும் சொற்களின் வழக்கத்தைக் காணலாம். மெய்கண்டாரால் சைவ சித்தாந்தத்தின் சிறப்புக் கொள்கையாகப் போற்றப்படும் அத்துவிதக் கொள்கையின் கருவை அழகு தமிழில் ஞானசம்பந்தர் கூறுவதை இங்கு நோக்கலாம்.

ஈறாய்முதல் ஒன்றாய்இரு பெண் ஆண்குண மூன்றாய்

மாறாமறை நான்காய்வரு பூதம்அவை அய்ந்தாய்

ஆறார்சுவை ஏழோசையொடு எட்டுத்திசை தானாய்

வேறாய்உடன் ஆனான்இடம் வீழிமிழ லையே

இறைவன் உயிர் உலகோடு ஒன்றாய், வேறாய், உடனாய் இருத்தலை இப்பாட்டு அழகாக விளக்குகிறது.

திருநாவுக்கரசர் எவ்வாறேனும் கயிலை சென்று இறைவனைக் காணவேண்டும் என்று முயல, அவருக்குத் திருவையாற்றுக் காட்சியையே கயிலைக் காட்சியாகத் தந்தருள்கிறார் இறைவன். திருஞான சம்பந்தர் தமிழ்நாட்டின் எல்லையாகிய திருக்காளத்தியிலிருந்தே திருக்கேதாரம் போன்ற தலங்களைப் பாடி, இருந்த இடத்திலிருந்தே இறைவனைப் பார்க்க வேண்டிய தன்மையை விளக்குகிறார். மேலும், அந்தண முறைப்படி உபநயனம் ஞான சம்பந்தருக்குச் செய்வித்து வேதம் ஓதும் உரிமையை உமக்குத் தந்தோம் என்று அந்தணர்கள் கூற, திருஞான சம்பந்தர்,

துஞ்சலும் துஞ்ச லிலாத போழ்திலும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்று

அஞ்ச வுதைத்தன அஞ்செ ழுத்துமே

என அந்தணர் அந்தியில் ஓதும் மந்திரத்தைவிட அய்ந்தெழுத்து மந்திரத்தின் சிறப்பை ஓதுகிறார். அப்பர் பெருமானும் சூரியனை வழிபடும் காயத்ரி மந்திரத்தைவிடச் சூரியனுக்கும் அடிப்படையாக கடவுள் வணக்கமே சிறந்தது என்பதை,

அருக்கன் பாதம் வணங்குவார் அந்தியில்

அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ

இருக்கு நான்மறை யீசனையே தொழும்

கருத்தினை நினையார் கன்ம னவரே

என்னும் தேவாரத்தால் தெரிவிக்கிறார். தமிழ் ஆரியப் பண்பாடுகள் கலந்த சைவ சமயத்தின் உயிர்க்கொள்கையான ஓர் இறைக் கொள்கை இரு பண்பாடுகளின் கலப்பினும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

சேக்கிழார் அடிகளும் இவ்வாறு வைதிகச் சைவ சமயத்தின் கலப்புத் தன்மையை உறுதிப்படுத்தி சைவ சமயத்தின் பெருமையை நிலைப்படுத்துகிறார். அவ்வாறு செய்யும்போது வேதநூல் என்பது காலத்துக்கேற்ப மாறக்கூடிய உலகியல் நிலையைத் தெரிவிப்பது என்றும், என்றும் நின்று நிலவக் கூடியது நிலவு மெய்ந்நெறிச் சிவநெறி என்றும் கூறுகிறார்.

உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்

நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்

என்பது சேக்கிழார் வாக்கு.

திருஞான சம்பந்தரின் திருத்தோற்றம் பற்றிக் கூறும்போது வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க என்று அருள்வதுடன், திருஞான சம்பந்தரின் திருத்தோற்றம் அயல் வழக்கின் துறையைச் செழுந்தமிழுக்கு வெல்லும்படி அமைகிறது என்று அறைகின்றார்.

திசையனைத்தின் பெருமை எலாந் தென்றிசையே வென்றேற

மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல

அயல்வழக்கின் துறைவெல்ல

அசைவினில் செழுந் தமிழ் வழக்கே

இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நலைபெருக - என்பது சேக்கிழார் அருள்வாக்கு.

ஆரிய-திராவிடப் பண்பாட்டுக் கலப்பால் ஏற்பட்ட நன்மை பயக்கும் இந்நிலை ஒரு பகுதி. இதன் மற்றொரு பகுதி இரு பண்பாட்டுக் கலப்பினால் தமிழரின் விழிப்பின்மையால் தமிழுக்கு ஏற்பட்ட மதிப்புக் குறைவையும் குறிப்பிட வேண்டும். இதற்குச் சமற்கிருத மொழியாளரின் ஏமாற்றுதல் காரணம் என்று கூறினாலும் தமிழரின் ஏமாறும் தன்மையே முக்கியக் காரணம் என்று கூறலாம். ஏமாறுபவன் இல்லை யெனில், ஏமாற்றுபவனின் செயல் செல்லாதல்லவா? இப்பகுதி யைப் பார்க்கும்முன் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குழுக் களுக்கும் திராவிட மொழிக்கும் உள்ள உறவை நாம் நோக்கலாம்.

சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்கம், இலத்தீனம், அனலடோனியம் என்னும் மொழிகள் இக்கூட்டத்தைச் சேர்ந்த மொழிகள், ஆங்கிலம் ஹ, க்ஷ, ஊ எனவும், கிரேக்கம் ஆல்பா, பீட்டா, காமா எனவும், ஹீப்ரு மொழி ஆலெப், பேத், கிமெல் எனவும் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டுள்ளன. ஆனால், இதே இந்தோ-அய்ரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்த சமற்கிருதம் இவ்வாறு கொள்ளாமல் அ, ஆ, இ என்று தமிழ்மொழி போன்று ஆரம்ப எழுத்துகளைக் கொண்டுள்ளது. இதனால் சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பியக் குடும்ப மொழிகளைச் சேர்ந்தாலும் கிரேக்கம், இலத்தீனம் போன்ற மொழிகள் இந்தோ-அய்ரோப் பியக் குடும்ப அமைப்பில் அய்ரோப்பிய மொழிகளால் அதிகம் பாதிக்கப்பட, சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பிய அமைப்பில் இந்திய (குறிப்பாக திராவிட) மொழிகளால் அதிகம் தாக்கம் பெற்றிருக்கிறது என்னும் உண்மை புலனாகும்.

இக்கூற்றை வலியுறுத்துவது போன்று Encyclopaedia Britanica 9-MtJ Volume-“Indo-European language”என்னும் தலைப்பில் பக்கம் 438இல் காணப்படும் கருத்தைக் குறிப்பிடலாம்.

In prehistoric times most branches of  Indo-European were carried into territories presumably or certainly occupied by speakers of non-Indo - European languages, and it is reasonable to suppose that these languages had some effect on the speech of the new comers. For the lexicon, that is indeed demonstrable in Hittite and Greek, at least.

It is much less clear, however, that these non-Indo-European languages affected significantly the sounds and grammer of the Indo-European languages that replaced them. Perhaps the best case is India, where certain grammatical features shared by Indo-European and Davidian languages appear to have spread from Dravidian to Indo-European rather than vice versa.

For most other branches of Indo-European languages any attempt to claim prehistoric influence of non-Indo-European languages on sounds and grammer is rendered almost impossible because of ignorance of the non-Indo-European languages with which they might have been in contact”

“Many or most of the desya words are indeed derivable from Sanskrit, but some are of  Dravidian origin e.g. akka (sister). atta (father’s sister), appa (father), Ura (Village) pulli (tiger)...... Whatever the judgement on any individual word, it is clear that Indo-Aryan did borrow from Dravidian and this phenomenon is important in considering  a group of sounds that sets Indo-Aryan apart from the rest of the Indo-European”.

இந்த நீண்ட ஆங்கில மேற்கோளை இங்கு கூறுவதற்குக் காரணம் எவ்வாறு சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு நன்மை கிடைத்திருக்கிறதோ, அதேபோன்று தமிழ்மொழியினால் சமற்கிருதம் நன்மை அடைந்துள்ளது என்று காட்டுவது தான்.

தொடரும்....

- விடுதலை நாளேடு 14 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக