சனி, 17 நவம்பர், 2018

பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு

02-06-1929 - குடிஅரசிலிருந்து...


சுயமரியாதை ஆசிரமத் திறப்பு விழாச் சொற்பொழிவு


சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர்களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப்பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரவேற்புக் கமிட்டியார் தேர்ந் தெடுத்ததற்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும். ஏனெனில் நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர்களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர்களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக்கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சவுந்தர பாண்டி யனார், சொ. முருகப்பா, ஆகிய முக்கியமானவர்களில்  எ.குருசாமி ஒருவராவார். ஆகவே, அப்படிப்பட்ட வரும் அதோடுகூடவே செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக் கொள்கையையே பின்பற்று கிறவருமாவார். நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகை யாகிய ரிவோல்ட்க்கு பெயரளவில் நான் பத்திராதி பனே ஒழிய, காரியத்தில் அவரே தான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர். அவரது எழுத்துக்களும் கருத்துக் களும் தமிழ்நாடு மாத்திர மல்லாமல் வெளி மகாணங்களிளெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்துவிட்டது. இந்த மாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும், பம்பாய் மாகாணத்தில் நாசிக்கிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக்கிறது. இந்தியா மாத்திரமல்லாமல் மேல் நாடுகளிலும், அமெரிக்கா அய்ரோப்பா முதலிய கண்டங்களிலிருந்து பாராட்டுக் கடிதங்களும் சந்தாதாரர்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர திரு.குருசாமிக்கு நல்ல கல்வியும் அறிவும் இருப்பதால் அவருடைய வகுப்பில் பெரிய பிரபுக்களும் பதினாயிரக்கணக் கான பணத்துடன் பெண்கள் கொடுப்பதற்கு வலிய வந்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய் யாமல் கலப்பு மணமே செய்து கொள்ளுவ தென்றும் அதிலும் விதவையாயிருத்தலே மேல் என்றும் தீர்மானித்துக் கொண்டிருப்பவர். எனவே இப்பேர்ப் பட்ட அதாவது, எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும் தொண்டர்களுக்கு வழிகாட்டியும் ஆகும்.

(பட்டுக்கோட்டையில் 24.05.1929 வெள்ளி இரவு 11 மணியளவில்  திரு.சி.குருசாமி தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு

- விடுதலை நாளேடு, 17.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக