முனைவர் பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
தந்தை பெரியாரை முப்பிரிநூலோர், முன் நின்ற வகுப்பினர் எதிர்ப்பது, எதிர்த்துக் குரல் கொடுப்பது - இதுவரையில் நாம் நுகர்ந்து வந்த அதீத நன்மைகளுக்கு வேட்டு வைத்தவரே இந்த மாமனிதர் தாம், இவரல்லவா உறங்கிக் கிடந்த - உணர்வற்றுக் கிடந்த, சொரணையற்று விழிப்பின்றிக் கிடந்தவர்களை உயிர்ப்பித்து எழச்செய்து விட்டவர் எனும் ஆத்திர உணர்வினால், தங்கள் அகம் பாவப் பாம்பைச் சமத்துவம், சுயமரியாதை, வகுப்புரிமை என்னும் தடிகள் கொண்டு நசுக்கி விட்டாரே என்பதால்.
ஆனால் சமத்துவம் பெறாமல், ஜாதிச் சகதியினால் மூடப்பட்டுச் சுயமரியாதை உணர்வு பெறாமலிருந்த தாழ்த்தப்பெற்ற சகோதரர்கள், தந்தை பெரியார் பெற்றுத் தந்த உரிமை, வாழ்வு, இடஒதுக்கீடு ஆகியவற்றைப் பெற்றுப் புதுவாழ்வு பெற்றவர்கள் அனைவரும் தந்தை பெரியார்தான் தங்கள் முதல் தலைவர், மற்ற எவரும் தங்களுக்குப் பின்னவர்கள் தாம் என்பதை உணராமல் ‘பெரியார் எங்களுக்கு என்ன செய்து விட்டார்?' ‘பெரியார் பார்ப்பனரல்லாதார் நலனுக்கு உழைத்தவர், எளிய பிற்படுத்தப்பெற்ற பிற வகுப்பினருக்கு உழைத்த வர்தானே தவிர எங்கள் நலனுக்கு உழைத்தவர் இல்லை' என்று நாக்கூசாமல் பேசுகின்றனர்.
ஆனாலும் இதில் ஓர் ஆறுதல் - தொல்.திருமாவளவன் ஒத்த உண்மைச் சிந்தனையாளர்கள் பெரியார்தாம் பெரும்பங்கு என்பதை உணர்ந்து பேசியும், செயல்புரிந்தும் வருவது மட்டுமல்லாது தமிழர் தலைவர் ஆசிரியர் பால் மிகுந்த மதிப்பும் - மரியாதையும், தேர்தல் பாதையில் சில மாறுபாடு கொண்டபோதிலும் செயலாற்றி வருகின்றனர்.
உண்மையிலேயே தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல் தாழ்த்தப்பட்டவர் நிலைக்கு உழைத் திடாதவரா? தந்தை பெரியாரின் வாழ்க்கை வெளிப் படையான ஒளிவு மறைவு இல்லா வெளிச்சக் கீற்று மிகுந்த வாழ்க்கை. அதனை வெளிப்படுத்த இன்றும் ஆதாரங்களாக விளங்குபவை அவருடைய ஏடுகளாம். குடி அரசு, பகுத்தறிவு, விடுதலை, ரிவோல்ட் ஜஸ்டிசைட், உண்மை, மாடர்ன்ரேசனலிஸ்ட், திராவிடன் ஆகியன வாகும்.
எனவே, தந்தை பெரியாரின் ‘குடி அரசு' பழைய ஏடுகளைப் புரட்டினாலே இந்த மாமனிதர் தாழ்த்தப் பெற்றோர் நிலை உயர எவ்வளவுப் பாடுபட்டுள்ளார் என்பது வெளிப்படும். அதிலும் தொடக்கம் முதலே தீண்டாமைக்கு எதிரான, தாழ்த்தப்பெற்றோர் நிலை உயரக்கூடிய அவருடைய கருத்துமணிகள் கல்லில் வடித்த எழுத்துக் களே அன்றி காகிதத்தில் அச்சடித்த எழுத்துக்கள் ஆகா. சொல்மட்டுமல்லாது செயலும் அவ்வகைத்தே என்பதற்கும் சான்றுகள் பல காட்ட முடிகிறது.
உண்மையான பெரியார் தொண்டன், தந்தை பெரியாரை ‘எங்கப்பன் பெரியாரு, எங்கப்பன் பெரியாரு' என்று கூவியதை ‘இதழாளர் பெரியார்' எனும் நூலில் பெரியார் பேருரையாளர் இறையன் அவர்கள் பதிவிட்டிருப்பதைப் படித்தால் உண்மையாகவே சொல்கிறோம் - மெய் சிலிர்க்க வைக்கிறது. அவருடைய பதிவை அப்படியே சுருக்காமல், மறைக்காமல் காட்டுகிறேன்.
"எத்தனையோ ஆண்டுகள் கழிந்தோடிவிட்டாலும் என் நினைவுப் புலத்திலிருந்து நீங்காமல் நிலைத்திருக்கும் - காலம் வென்ற ஞாலப்பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த - அந்த நிகழ்வைப் பதிவு செய்கின்றேன் இங்கே.
உடுமலைப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குப் பெரியாரவர்கள் ஊர்தியில் சென்று கொண்டிருந்தார். வண்டியில் நானும் இருந்தேன். திடீரென வண்டி குலுங்கி நிற்க, அனைவரின் கண்களும் தெருவை நோக்கியபோது உடற்சட்டையணிந்திராத உருவமொன்று வண்டியின் குறுக்கே பாய்ந்தது, அய்யாவின் ஊர்தி சாலைப்பகுதிக்கு விரைந்து கொண்டிருந்தது. அவரைக் கண்டிக்கும் முறையில் சிலமொழிகளை வீசிய எங்களைப் பற்றியெல்லாம் அந்த ஆள் கண்டு கொள்ளவேயில்லை.
மாறாக அவ்வேன் ஊர்திச் சாளரத்தினூடே தன் கைகளை ஓச்சிமிகவும் தளர்ந்திருந்த அய்யாவின் கைகளைப் பற்றித்தன் கண்களில் ஒற்றிக்கொண்டும், ‘எங்கப்பன் பெரியாரு. எங்கப்பன் பெரியாரு' என ஓங்கிய குரலில் கூவிவிட்டு, தொடர்ந்து "ஊம். வண்டியை எடுங்கள், கூட்டம் நடக்கும் இடம் இந்தப் பக்கங்தான் இருக்கிறது" எனக்கட்டளையிட்டுவிட்டு ஊர்தியை ஒட்டியே வந்தார்.
எங்கள் எல்லாரையும் கவ்விய அதிர்ச்சி தணிந்து ஆறுதல் நிலையை நாங்கள் தழுவினோம். கீழிறங்கிய வுடன் சட்டையணிந்து கொண்டிராத முண்டு மட்டுமே அரைக் கசைந்திருந்த - அப்பாட்டாளித் தோழரிடம் பலவற்றையும், உசாவியபோது, அய்யாவைப் பற்றி நிறையப் பேசிய அவர் தான் ஒரு பளுதூக்கும் தொழிலாளி எனத் தெரிவித்தார்.
ஒரு பேரினத்தையே சுமந்து காக்கும் தொண்டறத்தை இயற்ற முன் வந்த பெரியாரின் அருமையையும், பெருமையையும் ஒரு சுமை தாங்கிப் பாட்டாளியால் ஏனையோரைக் காட்டிலும் எளிதாக விரைந்து புரிந்து கொள்ள முடிகிறது எனும் பேருண்மை புலப்பட்ட நிலையில் பெரும் உள்ள நெகிழ்ச்சிக்குத்தான் இலக்கானேன். அன்றும் பிறகும் பல மேடைகளில் அந்நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அடிக்கடி நான் அசைபோட்டுப் பார்க்கும் அரும் பொருள்களில் "எங்கப்பன் பெரியாரும்" ஒன்று!
ஆகத் தந்தை பெரியாரை நன்குணர்ந்த அந்தப் பளுதூக்கும் தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் போல் பலரும் இன்றும் இருக்கையில் பழைய நிலை அறியாது அறியாமைச் சேற்றில் உழலும், வேட்டி சட்டையிலிருந்து கால் சட்டைக்கு எப்படி மாறினோம், கல்விக் கூடங்களில் எப்படி கால் வைத்தோம், கூழோ, கஞ்சியோ குடித்த நாம் இன்று அரிசி உணவுக்கு மாறியது எப்படி? அதற்கு ஏணிப்படி எது என்பதை உணராத சிலர் வேண்டுமானால் தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீசலாம். சிலையைச் சிரச்சேதம் செய்யலாம். குண்டர் சட்டத்தில் காராக்கிரகத்தில் வாடலாம். ஆனால் அவர்களை ஏவியவன் சுகமாகக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறான்.
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று கர்ஜித்தவர் திலகர் எனக் கூறி படேலுக்குப் பின் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துச் அவருக்கும் சிலையமைப்போம் என்கிறார்களே; ஆம்! அத்திலகர் திருவாய் மலர்ந்து அருளியவை இவை.
"செக்கு ஆட்டுவோரும், வணிகரும், சலவையாளரும் மற்ற தொழிலாளர்களும் தங்கள் குலத்தொழிலை விட்டுவிட்டுச் சட்டசபைக்கு வருவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய வர்களே தவிர, சட்டத்தை இயற்ற வேண்டியவர்கள் அல் லர். அதற்கு அவர்கள் ஆசைப் படக்கூடாது"
ஆம்! சவரம் செய்யும் தொழிலாளிக்கும், சலவைத் தொழிலாளிக்கும் சட்டசபையில் என்ன வேலை? என்று கேட்ட உயர்ஜாதி ஆணவக்காரர் திலகர் என வரலாறு கூறும். மறைக்கப்பட்ட உண்மை இது அவருக்கு.
எந்தத் தலைவர் சிலையையும் இழிவு செய்தல் தகாது என்பவர்கள் நாம். இருப்பினும் கேட்கிறோம், இவ்வளவு இழிவுபடுத்திய திலகர் சிலையை இழிவுபடுத்த முடியுமா? தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயுமல்லவா? தந்தை பெரியார் என்ன கிள்ளுக்கீரையா?
தமிழ்த்தென்றல் திரு.வி.க. "சமபந்தி போஜனத்திற்குச் சாதகமான நிலைமை அக்காலத்தில் இல்லை. பிராமணரும், பிராமணல்லாதாரும் சமபந்தி போஜனம் செய்வதென்பது சாத்திய மில்லாத காலமாய் இருந்தது. பிராமணரல்லாதாருக்கு வெளித்திண்ணையில் இலை போட்டுத்தான் பிராமணர் வீடுகளில் சாப்பாடு போடுவார்கள்" என்று எழுதிய காலத்தில் இதுதான் தன் கொள்கை என்று தந்தை பெரியார் அறிவித்த கொள்கை இது.
"மாந்தன் மாந்தனாக இருக்க வேண்டும். மக்களிடையே எந்த உருவத்திலும் - வடிவத்திலும் ஏற்ற தாழ்வுகள் நிலைக் கூடா; மக்களாயத்தில் சமவாய்ப்பும், சமபங்கும், சமவுரிமையும், சமனுகர்ச்சியும் இருக்க வேண்டும். இக்குறிக்கோளை எய்துவதற்கு எதனையும் கொள்ளலாம், எதனையும் தள்ளலாம்" இதுதான் பெரியாரியல்.
1925இல் காங்கிரசில் இருக்கையிலேயே தாழ்த்தப் பெற்றோர் முன்னேறவேயில்லை என்பதைச் சுட்டிக்காட்டி
"பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்பு வாரிப் பிரிதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் மிக முக்கியமானதென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத்திலோ மற்றும் பல பொதுவாழ்க்கையிலோ அவர்கள் முன்னேறவேயில்லை" (8.11.1925 குடி அரசு)
18 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்திடா காலத் திலேயே தாழ்த்தப் பெற்றவர்களின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தான் முக்கியம் என்று சொன்ன பெரியாரைப் பார்த்து ‘என்ன செய்தார், பெரியார் எங்களுக்கு?' என்று கேட்கவே வெட்கப்பட வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையையே முன்னிறுத்திக் காஞ்சிபுரம் மாநாட்டில் உற்ற நண்பர் திரு.வி.க.வையே குறை கூறிக் காங்கிரசிலிருந்து வெளியேறியவர் தந்தை பெரியார்.
இடஒதுக்கீட்டுக்கு போராடியது மட்டுமல்லாது, தீண்டாமைக்கு எதிரியாகப் பிரகடனப்படுத்தியவர் தந்தை பெரியார். தெரியுமா, உங்கள் முப்பாட்டனார் மேலுக்குச்சட்டை போடக்கூடாது, காலுக்குச்செருப்புப் போடக்கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது,தெருவில் நடக்கக்கூடாது. தொட்டால் தீட்டு பட்டால் பாவம் என்றெல்லாம் இருந்த நிலைமை தெரியுமா? அதெல்லாம் தெரியாமல் இன்று பெரியார் பெற்றெடுத்த, வாங்கிக்கொடுத்த சுதந்திரக்காற்றை, உரிமைப் பங்கைப் பெற்றுவிட்டுப் பெரியார் என்ன கிழித்துவிட்டார் என்று ஓதுவோர் பார்வைக்கு மேலும் ஒரு குறிப்பு.
காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி விடுத்த அறிக்கையில் "தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடமையாகும். ஏனெனில் அது தீண்டாதார்களில் பிராமணரல்லாதாரின் முன்னேற்றமாகும். தீண்டாமை ஒழிப்பது மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யம் அடையும்" என அனைத்துக் கட்சியினரையும் சேர்ந்த பார்ப்பனரல்லாதாரைக் கடமையாற்றிட வேண்டிய தந்தை பெரியாரின் இதய சுத்தியை யார் கேள்வி கேட்பது? கேள்வி கேட்பது அறியாமை.
இன்னும் சொல்லப்போனால் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பெற்றோருக்குத் தனிக் கிணறு வைத்துத் தீண்டாமையைத் தூக்கிப்பிடிக்க முயன்றபோது கண்டனக்குரல் எழுப்பியவர் தந்தை பெரியார். எனவே தாழ்த்தப்பெற்றோர் நன்றியுடன் போற்றிட வேண்டிய முதல் ஒரே தலைவர் தந்தை பெரியார், தந்தை பெரியாரே! உணர்க, உணர்ந்து தெளிக!!
- விடுதலை நாளேடு, 17.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக