செவ்வாய், 1 அக்டோபர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 13

26.9.2019 அன்றைய தொடர்ச்சி...


கந்த புராணமே இராமாயணம்


இன்னும் சொல்லப்போனால், கந்த புராணமே ஆரியர் திராவிடர் போராட்டத்திற்குப் பின் கற்பனை செய்யப்பட்ட முதல் கதையாகும். இதுபோலவே இராமாயணம் முதலிய வையுமாகும். இராமாயணத்தில் பலவகை இராமாயணங்கள் இருக்கின்றன. அதன்படிப் பார்த்தால் இராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம் என்று இரு காண்டங் களுடன் முடிகிறது. இராவணன், இலங்கை, அனுமார், சீதை, வனவாசம் முதலியன எல்லாம் அவைகளில் இல்லை. பிற்பாடு கந்த புராணத்தைப் பார்த்து விஷயங்கள் கற்பிக் கப்பட்டு அதில் சேர்க்கப்பட்டவைகளேயாகும். கந்த புராணத்துக்கு அந்தக் காலத்திலிருந்த செல்வாக்கைக் கண்டு, அதற்குப் போட்டியாக இருக்க, பிற காண்டங்களை இராமாயணத்தில் சேர்த்தனர். பெயர்களை மாற்றியமைத் தனரே அன்றி, மற்றபடி கந்த புராண நிகழ்ச்சிகளை - காரணக் கதைகளை அப்படி அப்படியே இராமாயணத்தில் சேர்த்துள்ளனர். இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் வரை உள்ளவை மட்டுமே இராமாவதாரச் சேதிகளாகும். இராமாயணத்தில் கந்த புராண நிகழ்ச்சிகளைக் காணலாமே யன்றி கந்த புராணத்தில் இராமாயணத்தைக் காணமுடியாது. அதனால் இராமாயணமானது கந்த புராணத்தைப் பார்த்து, பின்னிட்டு உண்டாக்கப்பட்டது என்பதில் சந்தேகமே கிடையாது. ஆராய்வரேயாயின் பண்டிதர்களுக்கே இந்த உண்மை நன்கு தெரியும்.

ஆச்சாரியாரே கூறட்டும்


சிவன் - விஷ்ணு அவதாரங்கள் யாவும் ஆரியர் - திராவிடர், தேவர் - அசுரப் போராட்ட அடிப்படையில், ஆரியர் - தேவர் பாதுகாப்புக்கென, திராவிட அசுரர்களைக் கொன்று உண்டாக்கப்பட்டவையேயாகும். ஆக எல்லாம், இந்த ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பதாக இருக்கிற தேயன்றி, நமக்குக் கடவுளெனயாதிருக்கிறது? கடவுளின் பிரதிநிதியாக வக்காலத்து வாங்கிக் கொண்ட தன்மையில் பேசிவரும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தான் கூறட்டுமே!

நம்மைப் பார்த்துப் பலர், ஆபாசங்களை மட்டும் காண்கிறீர்களே நல்லவைகள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை என்கிறார்கள். நல்லது ஏதேனும் இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் - தெரிவியுங்கள் என்றால் யாரும் வாய்கூடத் திறப்பதில்லை. ஆபாசங்களை நீக்கி எழுதுங் களேன் என்றாலும் எதுவும் பேசுவதில்லை.

ஆறுமுகம் பிறப்பு


ஆறுமுகம் என்னும் சுப்பிரமணியக் கடவுளின் பிறப்புப் பற்றி கந்தபுராணத்தில் கூறப்பட்டிருப்பதைத்தான் பாருங் கள். தேவர்கள், தங்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்து வருவதாகவும், அசுரர்களை அழிக்க வழி செய்தாக வேண்டும் என்றும் சிவனார் என்னும் கடவுளிடம் முறையிட்டார்களாம். சிவனாரும் ஒரு புத்திரனைத் தோற்றுவிக்க வேண்டித் தமது தேவியார் பார்வதியுடன் கர்ப்பகோடி ஆண்டு கலவி செய்தாராம். இவர்களது கலவிக் காலம் கழிந்து அவதாரம் தோன்று முன் தேவர்கள் - அசுரர்கள் பேதமே தெரியாதொழிந்து விடுமே என்று அஞ்சி, தேவர்கள் சிவனாரை அணுகிக் கலவியை நிறுத்துமாறு வேண்டினராம். கலவியை இடையில் நிறுத்துவதாயின் வெளிப்படும் இந்திரியம் என்னாவது என்று சிவனார் கேட்கத் தேவர்கள் தாங்கள் ஆளுக்குச் சிறிதளவாக உட்கொண்டு விடுவதாக ஒப்பி அவ்விதமே செய்ய, அதன் பயனாக, தேவர்கள் அனைவரும் கருவுற்றனராம்! ஆண்கள் இந்திரியத்தை வாய் வழியாக உட்கொண்டு கருவுற்றனராம்! தேவர்கள் எதிர்பாராத இவ்விளைவைக் கண்டு அஞ்சி மறுபடியும் சிவனாரையே அணுகித் தமது கருக்கலைய வழி கேட்டனராம். அவரும் ஒரு குளத்தைக் காட்டி அதில் நீராடச் சொன்னாராம்; தேவர்கள் அவ்வாறே செய்து தமது கர்ப்பத்தைக் குளத்தில் சிதைத்துக் கொண்டனராம்; இவ் விதம் சிதைவான கருப் பாகங்கள் குளத்தில் ஆறு குழந் தைகளாகினவாம். அவைகளைச் சிவனார் ஒன்றுபடுத்தி ஆறுமுகம் என்றாக்கினராம். இவனே பிற்காலத்தில் சூரபத் மன் என்ற திராவிட அரசனைச் சூதினால் அழித்தான் என்று புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

எல்லாம் ஆபாசக் கதைகள்


இப்படியாகப் புராணங்கள் ஒவ்வொன்றிலும் ஆபாசக் கதைகள் நிரம்பியுள்ளன. பாகவதம் முதலிய பிற்பட்ட காலத்திய நூல்களில்தான் என்ன ஒழுக்கமிருக்கிறது? ஆக ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சமாளிக்க அவ்வப் போது ஏதேதோ செய்து இருப்பதாகவே அறிகிறோம்.

மச்சாவதாரம்


தசாவதாரங்களுள் முதலாவதாகச் சொல்லப்படும் மச்சாவதாரத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்; வேதத்தை யாரோ ஒரு அசுரன் சுருட்டி எடுத்துச் சென்று சமுத்திரத்துள் மறைத்துவைத்து விட்டானாம். அதை மீட்டுவர விஷ்ணு மீன் அவதாரமெடுத்தாராம். வேதத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தான் அசுரன் என்றால் என்ன பொருள்? அந்த நாட்களில் காகிதம், ஓலைச்சுவடி, அச்சுக்கூடம், அல்லது பேனா, பென்சில் எதுவும் கிடையாது. அதனாலே வேதம் புத்தகமாக அல்லது ஓலைச்சுவடியாக இருந்திருக்க முடியாது. அப்படியானால் அதை எவ்வாறு தூக்கிச் சென்று மறைத்திருக்க முடியும்? வேதம் அந்நாட்களில் வெறும் வாய்ச்சொல்லாக உள்ளத்திலே இருந்த ஒரு பொருளாகவே இருந்து வந்தது. அதை மறைப்பதெப்படி? அதாவது, வேதப் பிரசாரம் கூடாது என்பதாக திராவிட அரசன் ஒருவன் கண்டித்து ஆட்சேபித்திருக்கவேண்டும். அதற்குத் தடுத் தான் என்றுதானே பொருள்; தந்திரமாக அவ்வரசனை அசுரனாக்கிக் கொலை செய்து, வேதத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். ஆகவே, அந்தக் காலத்திலேயே வேதத்திற்குச் சரியான, சட்ட விரோதமாகக் கூட எதிர்ப்பும் இருந்திருக்கிறது.

வராகவதாரம்


வராகவதாரத்தின் லட்சணத்தைப் பார்த்தாலும் ஆபாசம் புரிகிறது. பூமியை அதாவது உலகைப் பாயாகச் சுருட்டி ஒரு அசுரன் கடலுக்குள் ஒளிந்து விட்டானாம். பூமியின் வடிவம் உருண்டை என்பதாகச் சில நூல் வல்லுநர்கள் கண்டிருக்கின்றனர். அப்படியானால் பூமியைச் சுருட்டுவ தெப்படிச் சாத்தியமாகும்? மேலும், எங்கிருந்து கொண்டு சுருட்டினான்? சுருட்டியவனும் பூமிக்குள் அகப்பட்டிருக்க வேண்டுமே! சுருட்டியதைக் கடலுக்குள் ஒளித்து வைத் தானாம். பூமி அல்லது உலகம் எனும்போது கடலும் அதில டங்கியது என்பதைப் புராணம் எழுதியவன் மறந்திருக்க வேண்டும் அல்லது அறியாதிருக்க வேண்டும்.

மற்றவை


அதேபோலத்தான் நரசிம்மன், பரசுராமன், பலராமன், இராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களும் இருக் கின்றன.

பரசுராமன், இராமன் இவ்விரு அவதாரங்களும் ஒரே கடவுளின் அவதாரங்களெனப்படும். இவை ஒரே காலத்தில் இருந்து ஒன்றை இன்னொன்று எதிர்ப்பதும், போரிட்டுத் தோற்கடித்ததுமாக எழுதப்பட்டுள்ளது. இதேபோலப் பரசுராமன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய மூன்று அவதா ரங்களும் ஒரே காலத்தில் இருந்து செயல் புரிந்ததாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

வேத எதிர்ப்பு


சுருக்கமாகச் சொல்லப்போனால் வேத எதிர்ப்பு என்ற சங்கதி தோன்றியது இன்று நேற்றல்ல. ஈரோட்டு ராமசாமியும், திராவிடர் கழகமும் தோன்றிய காலத்திலல்ல; புராண காலத்திலேயே வேதம் வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றபடி, வேதத்தை ஏன் படித்தாய்? என்ன படித்தாய்? என்பது அக்காலத்தே தெரியாது. கார ணம், அது குறிப்பிட்ட ஒரு வகுப்பாரிடையே வாய்மொழி யாக, உள்ளத்தில் ஒரு கருத்தளவிலேயே இருந்து வந் திருக்கிறது என்றாலும், இராவணன், இரணியன் ஆகியோர் வேதத்தை முழுவதும் படித்ததினாலேயே அவர்கள் வேதத் திற்கும் யாகத்திற்கும் தேவர்களுக்கும் பிராமணர்களுக்கும் விரோதிகளானார்கள் என்பதாகத் தெரிகிறது. இக்காலத் திலேயும் வேதப் பாதுகாப்புக்கென தோழர்கள் ராஜகோபா லாச்சாரியாரும், வக்கீல் வெங்கட்ராம சாஸ்திரியாரும், சர்.சி.பி.ராமசாமி அய்யர், ஜட்ஜ் ஏ.எஸ்.பி. அய்யர் போன்றோரும் முன் வருகின்றார்கள் என்றால், சுயமரியாதை இயக்கம் வேதத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன பிறகுதான். வேதம் எப்படி, எதற்காக ஏற்பட்டது என்று திராவிடரில் யார் ஆராய்ச்சி செய்தார்கள்!

எந்த மொழியில்?


எந்த மொழியில் வேதம் ஓதப்பட்டு வந்தது என்றே சொல்ல முடியாது. சமஸ்கிருத மொழியே வேதகாலத்தில் கிடையாது. சமஸ்கிருதம் என்று தனிமொழியே இருந்த தில்லை. அந்தக் காலத்திலே ஆரியர்கள் பேசிக் கொண்டி ருந்த மொழி பலமொழி, மலைவாசி மொழிகள். அப்படிப் பட்ட சகல மொழிகளையும் கிரமப்படுத்தி அதைச் சமஸ் கிருதம் - சம்ஸ்தத்தையும் ஒன்றாக்கிய மொழி என்றாக்கி னார்கள். சமஸ்கிருதம் என்ற பதத்துக்கு அர்த்தமே அது தான். அப்படிச் செய்யும் போது திராவிட மொழிகளிலிருந்தும் பல சொற்களை ஆரியர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால், அச்சொற்களின் ஒலியை மட்டும் சிறிது மாற்றி யமைத்துத் தனிமொழி போலத் தோன்றுமாறு செய்து விட்டனர் என்பதாக என்சைக்ளோபீடியா என்னும் சர்வ பொருட் களஞ்சியம் கூறுகிறது.

தமிழ்ப் புலவர்கள்


இங்குள்ள நமது தமிழ்ப் புலவர்கள் எனப்படுவோர் தமிழைப் பிழைப்புக்காகக் கற்று வைத்துக் கொண்டு பாடுபடுகின்றனரே அன்றி, தமிழ்மொழி வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சிக்கென இம்மியும் காரியத்தில் இறங்கியது கிடையாது. தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் என்பதாகத் தமிழிலும் கடவுள் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளும் வேதத் தேவர்களைக் கடவுளாகக் கொண்டு, பிரார்த்தனைப் பாடல்களாகப் பாடப்பட்டிருக்கின்றனவே அல்லாது தமிழர்களுக்கான கடவுள்களைக் குறித்து ஒரு சொல்லும் கூறுவதில்லை!

அகஸ்தியனைப் பற்றிய கூற்று


தமிழ்மொழி ஏற்பட்டதே அகஸ்தியன் என்னும் ஒரு குறுமுனிவனால் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு சிறிதும் உண்மையல்ல என்பதோடு தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் வெட்கக்கேடு ஆகும். அகஸ்தியன் ஆரியக் கதைப்படி ஒரு ஆரியனாகும். ஆரியத்தைத் தெற்கே புகுத்த வடக்கிலிருந்து அனுப்பப்பட்டவன். அதாவது, சிவனாருக் கும் உமையாளுக்கும் திருமணம் இமயமலையில்  நடை பெற்றபோது தென்னாடு உயர்ந்து விட்டது என்று தேவர்கள் புகார் உரைத்தனராம்; தேவர்கள் என்றால் ஆரியர்கள் - பார்ப்பனர்கள்தாம். தென்னாடு உயர்ந்துவிட்டது என்றால், தென்னாட்டு மக்கள் ஆரியச் சூழ்ச்சிப் புராணக் கதைகளில் சிக்கிச் சீரழியாது முன்னேற்றமடைந்துவிட்டனர் என்பதாக அர்த்தம். தெற்கே யாரையாவது அனுப்பி உயர்ந்து விட்டவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பது ஆரியரது விருப்பம். இதற்குத் தகுந்த நபராக அகஸ்தியன் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர் என்பதாக கந்தபுராணம் கூறுகிறது.

இந்த அகஸ்தியன் தெற்குநோக்கி வரும்போதே அப் போதைய எல்லைப் பகுதியான விந்தியமலைக்கருகில் ஆரியர் பிரவேசத்தையும் ஆரிய மதப் பிரச்சாரத்தையும் தடுத்தொழித்து வந்த வாதாபி வில்வலன் என்ற இரு திராவிட அரசர்களை இந்த அகஸ்தியன் என்பவன் சூழ்ச் சியால் வென்று கொன்றிருக்கிறான் என்று கூறப்பட்டி ருக்கிறது. தென்னாடு சென்று இராவணனைக் கொன்றுவா என்றே அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டதாகக் கூறப்படு கிறது. இந்த இராவணன் யார்? இராமாயண இராவணனா அல்லது வேறொருவனா என்பது தெரியவில்லை. இவ் வாறாக, அகஸ்தியன் தென்னாடடைந்தும், தமிழ் நூல்களை யெல்லாம் ஒழித்து ஆரிய மயமாக்கிவிட்டான்.

ஒரே வார்த்தையில் சொன்னால், திராவிடர்களைக் கொன்று குவித்து அழிக்கவே வேதமும் மதமும் கடவுள் களும் பயன்பட்டு வந்திருக்கின்றனவே அன்றி இவை களினால் என்ன உருவான பலன் ஏற்பட்டிருக்கிறது?.

தொடரும்

- விடுதலை நாளேடு, 1 .10. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக