வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 12

24.9.2019 அன்றைய தொடர்ச்சி...

நம்மைப் பிரித்து வைத்துள்ளவை

வேதம், மதம், கடவுள்கள் எனப்படும் மூன்றாலுமே நாம் அனைவரும் இந்துக்கள் என்ற ஒரே சமுதாயப் பட்டிக்குள் திணிக்கப்பட்டிருக்கிறோம் எனினும் பல படியாகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம். இந்து மதத்தினராக உள்ள நாம், சுமார் 25 கோடி இந்துக்கள் இருப்பினும், நாம் யாவரும் இந்தக் கடவுள்களினாலோ, மதத்தினாலோ ஒன்றுபடுத்தப் படவில்லை.

இந்து மதம் என்று ஒரு மதமே இருந்தது கிடையாது எனக் காலஞ்சென்ற காந்தியார் உட்பட, பல ஆராய்ச்சிக்காரர்கள் கூறியிருக்கிறார்கள். மதத்தினாலேயே நாம் ஒன்றாயில்லை; பலகோடிக் கடவுள்கள் இந்து மதத்தினருக்குக் கற்பிக்கப் பட்டுள்ளனர். அவைகளில் யாவருக்கும் ஒன்று என்பதாக ஒன்றுகூட இல்லை. சாஸ்திரங்களின் பேராலும், வேதத்தின் பேராலும் இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஒன்றுபட்ட வர்களாக இல்லை. அதைவிடுத்து, சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களாகிய நாமாவது எதனா லாவது ஒன்றுபட்டிருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. முதலாவது, வேதத்தில் இருப்பவை என்ன என்றே நமக்குத் தெரியாது. ஏனெனில், நாம் தான் வேதத்தைப் படிக்கவோ, பக்கமிருந்து கேட்கவோ கூடாதே! தெரிந்த வரை ஆபாசங்களும் கேடுகளும் அதிலிருக்கின்றன என்று கண்டிருக்கிறோமே தவிர நமக்கு முறையாக வேதம் கற்பிக்கப்பட்டிருக்கிறதா? ஏன்? அதை நாம் பார்க்கப் படிக்க நேர்ந்தால் அதன் அசிங்கம் நமக்கு விளங்கிவிடும். அன்றியும், நம்மை இழிவுபடுத்தவும் ஒழிக்கவுமே வேதசாஸ்திரம், மதம், கடவுள்கள் இருக்கின்றனவே தவிர, அவைகளில் நம் நலத்திற்கென்று ஒன்றுமே இல்லை என்பது விளங்கிவிடும்.

சூரியன், சந்திரன், அக்கினி, இந்திரன், வருணன், ருத்திரன், அவன், இவன் என்று பெயர்களும் உருவங்களும் இருக் கின்றனவே தவிர, காட் (படின), அல்லா, கடவுள் என்பதாக ஒன்று நமக்கு இல்லை. சொல்லப்போனால், கடவுளுக்குத் தமிழில் ஒரு சொல்லே இல்லை. இந்தக் கடவுள் என்ற சொல் இடைக்காலத்தில் தமிழில் புகுந்தது தான். சரித்திரம் காணாத கால முதற்கொண்டே நாகரிக வாழ்வில் திளைத்திருந்த நாம், ஒரு பெரிய சமுதாயம் தனக்கென வேதம், மதம், கடவுள், சாஸ்திரம், கொள்கை இவைகள் இல்லாமல் அண்டிப் பிழைக்க வந்த ஒரு நாடோடிக் கூட்டத்தாரின் பிரச்சாரத் தந்திரத்துக்கு ஆளாகிக் கூத்தடிக்கிறோமே தவிர, வேதனைக்காளாகிறோமே தவிர வேறென்ன?

ஆரியர் - திராவிடர் என்னும் இரு இனப் பிரிவுகளை இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் தவிர சர்வ சகல கட்சியினரும் அமெரிக்க - பிரிட்டிஷ் வரலாற்று நூலாசிரியர்களும், இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் - பிரதம மந்திரி பண்டித நேரு உட்பட ஒத்துக் கொள்ளுகின்றனர். நாம் கூறும் ஆரியர் - திராவிடர் பிரச்சினை ரத்தப் பரிசோதனையின் விளைவாக அல்ல; கொள்கைகளினால், கலாச்சாரத்தினால், பழக்க வழக்கங்களினால், பிரிக்கப்பட்டிருக்கும் பேதத் தினால் கூறுகிறோம். மற்றபடி ஆரியரும் - திராவிடரும் பெரும் அளவுக்கு இரத்தத்தினால் கலந்துவிட்டனர் என்பதை நாம் மறுக்க முன்வரவில்லை.

ஆரியர்கள் யார்

ஆரியர்கள் என்போர் யார்? என்சைக்ளோபீடியா என்ற சர்வபொருள் விளக்க நூலும் வேத நூல்களும், ஆராய்ச்சி உண்மை ஆதாரங்களும் சொல்லுவதென்ன?

பர்ஷிய என்னும் பாரசீகத்தில் இருந்தவர்களே ஆதியில் பெரிதும் ஆரியர்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இவர் களுக்குள் இரு கட்சிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒரே இனத்தவர் எனினும், இங்கு உள்ள சைவர்கள், வைணவர்களைப் போல, ஒரு சாரார் தேவர்கள் என்றும், மற்றவர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்குள் உயர்வு தாழ்வு கிடையாது; எனினும் கொள்கைத் துறையில் மாறுபட்டிருந்தனர். வானம், தீ முதலிய பிரகாசம் என்னும் பொருளைக் கொண்டதான வான ஒளி என்ற தத்துவத்தின் மீது தேவர்கள் வழிபாடு கொண்டிருந்தனர். மற்றவர்கள் இதற்கு மாறுபட்ட இயற்கைத் தத்துவத்தைக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு அசுரர் என்ற பெயர் இருந்து வந்தது. அசுரர்கள் மது, மாமிசம் சாப்பிடாதவர்கள்; கொலை பலி வெறுப்பவர்கள்.

தேவர்கள் மது, புலால், ஒழுக்கக் குறைவு, கொலைத் தொழில் முதலியவைகளில் ஈடுபட்டிருப்பவர்கள்; ஆதலால், அது காரணமாக அசுரர்கள் தேவர்களை வெறுத்து விரட்டி விட்டனர்.

வசவே வேதம்

விரட்டப்பட்டு ஓடியவர்கள், விரட்டியவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் இழிவாகவும் பேச முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டு, வெளியேறிப் பல நாடுகளைச் சுற்றிவிட்டு, இறுதியாக இந்தி நதி (சிந்து நதிக்கரை) வந்தடைந்து, சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு, தம்மை விரட்டியவர் களை மேலும் தொடர்ந்து வசைபாடலாயினர். இந்தியா விலும் அவர்கள் கண்ட மனிதர்கள் அவர்களது நாட்டு அசுரர்களைப் போலவே உயர்ந்த தத்துவத்தினராக இருந்து இவர்களை வெறுக்கவே, அவர்களையும் அசுரர் என்றே கருதி, அவர்களை வைவது போலச் சபிக்கும் காரியத்தை இவர்கள் மீதும் செய்து வந்திருக்கின்றனர். அந்த வசவேதான் வேதமாயிற்று. இவ்விதம் பாரசீகத்தில் இருந்து வந்த ஆரியர்கள் இந்தியாவிலும் குடியேறிக் கண்ணுக்குக் காணும் சூரியன், சந்திரன், தீ, தண்ணீர் முதலிய இவை களையே கடவுள்களாக்கி, அவைகளின் எண்ணிக்கையை 33 ஆக ஆக்கினர். இவை எல்லாம் டாக்டர் முன்ஷி முதலியோர் தீட்டியிருக்கும் ஆதாரம் முதலியவைகளில் இருந்தும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த 33 கடவுள்களில் இன்று கூறப்படும் சிவன் இல்லை; விஷ்ணு என்பவனைத் தங்கள் இனப்பாதுகாப்புத் தேவனாக, ஆபத்துக்களை அகற்றக்கோரித் துதிபாடுவதற்காக ஏற்படுத்தியிருந்தனர். ருத்திரன் என்றொரு கொடுமையான குணத்தைக் கொண்ட தேவராக ஆரியர் ஒரு தேவனைக் கொண்டிருந்தனர்.

இங்கு வந்த பின்பே ஆரியர்கள் ருத்திரன் என்ற தேவனை, சிவன் என்று பெயர்மாற்றி, அதை முக்கிய தேவனாக்கி, வேதத்தில் மிகச் சாதாரண - பிந்திய தேவனாக இருந்த விஷ்ணுவையும் முக்கியத்துவம் அளித்து நாளாவட்டத்தில் அவைகளையும் கடவுள்களாக ஆக்கி வந்திருக்கின்றனர். ஆயினும், பிரம்மா என்பதாக ஒரு கடவுள் வேதத்தில் காணப்படவில்லை. இவைகளையே நாளடைவில் விருத்தி செய்து சிவனின் பிள்ளைகள் என்றும், விஷ்ணுவின் அவதாரம் என்றும் பலரை உற்பத்தி செய்து தசாவதாரம், புராணக் கதைகள் என்பவைகளையும், கடவுள்களுக்குப் புத்திரர்களையும் உண்டு பண்ணினர். இவர்களெல்லாம் கடவுள்கள் அல்லர்; பெரிதும் தேவர்களும் அல்லர்; தேவர்கள் என்றால் பிரகாசமாக வானத்தில் இருப்பது என்பது அவர்கள் ஆதாரக் கருத்து.

வேதகாலம் தெரியாது

வேதங்களுக்கும் காலம், கர்த்தா, குறிப்பிட்ட கருத்து, முதலிய எதுவுமில்லை என்கிறார்கள். வேதம் ஏற்பட்ட காலம், எழுதியவர், அல்லது ஏற்படுத்தியவர் யார் என்று ருசுப்பிக்க ஆதாரங்கள் எதுவுமில்லை; ஆனால், இப்போது கூறுகிறார்கள் காலப்போக்கில் தொகுக்கப்பட்டவை என்று. இதையே இக்காலத்தில் உலகெங்கும் நிகரற்றது; சகல மதத்தையும் தழுவியதென்கிறார்கள். சங்கரர், ராமானுஜர், மாத்துவர் உள்பட ஆஸ்திகர் நாத்திகர்களும் பிறரும் தத்தமது ஆஸ்திக நாஸ்திகமான பலவிதக் கொள்கைகளை மதங்களாக வேதத்திலிருந்தே அவரவர் கருத்துக்கேற்ப விளக்கம் தந்து அமைத்திருக்கிறார்கள். கிளைக் கடவுள் களையும் அவதாரங்களையும் கொண்ட புராண இதிகா சங்கள் யாவும் ஒரே கருத்தில்தான் அதாவது ஆரியர் திராவிடப் போராட்டத்தின் மீதே ஏற்பட்டிருக்கின்றன.

அடிமைப்படுத்தும் தத்துவமே

திராவிடர்கள் என்றென்றைக்கும் தலைதூக்காதபடி செய்யும், நிரந்தரமாக ஆரியர்க்கு அடிமைப்பட்டிருக்கச் செய்யும் தத்துவமே புராண இதிகாசங்களின் தத்துவங் களாகும். சைவம், வைணவம் எல்லாமே இதே நோக்கம் கொண்டவை. திராவிடர் ஒழிப்பே அந்த நோக்கமாகும், இங்கு கண்டவர்களையும் நமது நாட்டு அசுரர்கள் என்றே கருதி ஆரியர்கள், திராவிடர்களைச் சூழ்ச்சிப் போரில் வென்று, அவ்வெற்றி தேவர்களால் ஏற்பட்டதென்று கருதி அத்தேவர்களையே அவதாரங்களாக்கி, அவற்றை நமது கடவுள்களாக ஆக்கிவிட்டனர். நமது நாட்டில் ஆரம்பிக்கப் பட்ட போராட்டத்தை அவர்கள் வெற்றி பெற்றதும் பல உருவில் கதைகளாக்கி அக்கதைகளைப் புராணங்களாக்கி விட்டனர். அக்கதையில் வந்த பாத்திரங்கள் எல்லாம்தான் கடவுள்களாக்கப்பட்டன.

இன்று

மக்களுக்கு இன்று உணர்ச்சி வந்துவிட்டதால், ஆரியர்கள் நம்மை அசுரர்கள், ராட்சதர்கள் என்று நேரில் கூறாமல் இருக்கின்றனர்; என்றாலும் அந்த வெறுப்புடன்தான் நம்மை நடத்துகிறார்கள்.

தேவர் - ஆரியப் பார்ப்பனரே

தேவர்கள் என்னும் ஆரியர்களை அதாவது பார்ப்பனர் களைப் பற்றி அவர்கள் நன்றாக எழுதி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திராவிடர்கள் போரில் தமக்குச் செய்த கொடுமைகள் காரணமாகவே மனுதர்மம் என்பதாக தமது வகுப்புக்கு ஒரு தனி அடக்குமுறை நீதிநூல் உண்டாக்கி அதை மத ஆதாரமாக ஆக்கிவிட்டார்கள். அந்த நூலில் யாகத்தின் பெயரால் திராவிடர்களைக் கொள்ளையடி என்றும், பலாத்காரமாய் பொருளைப் பிடுங்கிக் கொள் என்றும், ஆரியர்கள் எழுதியிருக்கிறார்கள். வசதிப்பட்ட போது திராவிடர்களும் ஆரியர்களை வெளுத்திருக் கிறார்கள். இக்கால மலைவாசிகள் யுத்தமுறை போன்று என்பதும் வேதத்தினால் விளங்குகிறது.

பெண் வேடத்தில் ஏமாற்றினர்

கஷ்டங்கள் நேர்ந்த காலத்தில் எல்லாம் பெண் வேடத்தில் ஆரியர்கள் திராவிடர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். தமது இனப் பெண்களென்பதற்குப் பதிலாக சிவன், விஷ்ணு பெண் அவதாரம் என்பதாகத் திரித்து எழுதியிருக்கிறார்கள். ஆக தந்திரம், சூது காரணமாகப் பல சாதனைகளைச் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமான கதைகளை எழுதும்போதும் ஆபாசங்களையும் மோசமான வைகளையும் அவர்கள் செய்யத் தயங்கவில்லை, நமக்கு வணக்கம், வழிபாடு இவைகட்கு உரியதாக புராணம் கடவுள்களை ஏற்படுத்திப் பார்ப்பனர்களுக்கு என்றென்றும் சுலபமான வகையில் சுகமாக வாழ வழி செய்துள்ளனர்.

தங்களுடைய ஆபத்துக் காலத்தில் புராண தந்திரங்கள் பயன்படவேண்டிய புராணப் பாத்திரங்களையும் நிகழ்ச்சி களையும், கடவுள்கள் திருவிழா, பண்டிகைகளாகக் கொண்டாடுமாறு செய்துவிட்டனரே அன்றி, நமக்கு என்று ஒரு தனிக் கடவுள் எதுவும் இல்லை. நம் கடவுள்கள் என்பனவெல்லாம் நம் பொருளையும் பணத்தையும் பார்ப்பனருக்குப் பிடுங்கிக் கொடுக்கவே இருக்கின்றன.

தொடரும்

- விடுதலை நாளேடு, 26. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக