புதன், 11 செப்டம்பர், 2019

பெரியார் அவர்களின் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம்- 8

முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-

5.9.2019 அன்றைய தொடர்ச்சி...

புரோகிதர்களுக்கே தெரியாது


புரோகிதர் எல்லாக் கடவுள்களையும் (விஸ்வதேவர்களைப்) பிரார்த்திப்பதிலிருந்து இந்தப் புரோகிதருக்குக் கடவுளின் நிலவரம் இன்னதென்பதே தெரியாதென்பது புலனாகிற தென்கிறார் மாக்டனல்டு என்பவர்.

இப்போதைய புரோகிதர்களும் இதே போன்றுதானே ஆயிரம் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி அர்ச் சனையும் பூசையும் நடத்துகின்றனர். இதிலிருந்து இவர்கள் தனி முதற் கடவுளில் நம்பிக்கையற்றவர்களாகின்றனர். இவ்வித அவநம்பிக்கைதான் மதச் சண்டைகளுக்கு மூல காரணமாகிறது. மெய்யறிவு பெறாமையே அவநம்பிக் கைக்குக் காரணம்.

அறிஞரல்ல


எனவே, மதச் சண்டை நடத்திய மத ஆச்சாரியர்களும் குருக்களும் பிறரும் மெய்யறிஞர்கள் அல்ல; ஒரு தனிக்கடவுள் கொள்கையினரல்ல; அந்தத் தனிப்பெரும் கடவுளின் அருள் பெற்றவருமல்ல; அந்தக் கடவுளின் தன்மையையும் உணர்ந்தவர்களோ அறிந்தவர்களோ அல்ல என்பது தெளிவாகிறது. இன்னும் தெளிவுறக் கூறுமிடத்து, ஆஸ்திகர் என்று கூறிக்கொண்டு பல தெய்வ வணக்கம் செய்பவர்கள், கடவுளின் உண்மையறியாதவர்கள்; அவர்கள் மொழியின்படி அவர்களே நாஸ்திகர்களாகின்றனர். ஏனெனில், ஒரு தனிக் கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் பல தெய்வங்களைப் பிரார்த்திக்கின்றனர்.

அவரவர்களுடைய விருப்பு வெறுப்புப்படிக் கடவுள்களும், அவரவர்கள் வாய் போனபடி மந்திரப் பாட்டுகளும் உற்பத்திப் பெருக்கம் செய்து வந்திருப்பதாலும், ஒருவர் தெய்வத்தில் மற்றவருக்கு நம்பிக்கையில்லாததாலும், இந்த தெய்வம் என்பதே வெறும் கற்பனைப் பித்தலாட்டமாகிறது. மற்றும், மந்திரம் என்று எதனைக் கூறுகிறார்களோ அதில் எந்தவித மகிமையும் கிடையாது. ஒருவரைத் திட்டுவதில் எவ்வளவு தெய்வீக சக்தியுள்ளதோ அவ்வளவு தெய்வீக சக்திதான், இந்த ஆள்மிரட்டல் செய்கின்ற, பணக்காரர்கள் பணத்தைக் கரைக்கச் சொல்லும் சொல்லடுக்குகளில் உள்ளதென்பது வெட்டவெளிச்சமாகிறது.

தலைவர்களே!


மணிச்சுருக்கமாகக் கூறுமிடத்து, இந்த மந்திரமென்பது பணம் பறிப்பதற்கான ஆள்மிரட்டல் அடுக்குச் சொற் களேயாகும். மற்றும், இப்போது ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தலைவர் இருப்பது போல், படைக்குத் தளபதியிருப்பது போல் இந்தப் பார்ப்பனீய தெய்வங்களும் பல்வேறு பிரிவு - கட்சி - ஆரிய முனிவர்களின் கற்பனைத் தலைவர்களேயாவர். மற்றும், கண்காணும் தலைவரைக் குறிப்பிடாது. கண்காணாத கற்பனைத் தலைவர்களை இவர்கள் குறிப்பிட்டிருப்பதால், இவர்கள் மூடநம்பிக்கையில் முழுக்க முழுக்க மூழ்கியிருந்த அறிவுவளம் பெறாத அநாகரிகர்கள் என்பதும் கண்காணாதவற்றை எண்ணிப் பயப்படும் சிறு பிள்ளை மனப்பான்மையினரென்பதும் புலனாகிறது.

பிள்ளைமனக் கற்பனை


அதாவது, சிறுகுழந்தைகள் பூச்சாண்டியை எண்ணிப் பயப்படுவது போலும், பூச்சாண்டியெனக் கூறி பய முறுத்துவது போலும், இந்த வேத மதத்தினரும் பூச்சாண்டித் தெய்வங்களை கற்பனை செய்து கொண்டுள்ளனர்.

குழந்தைகளின் பூச்சாண்டி என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மைதான் இந்த வேத தெய்வங்களு மென்பதும் தெளிவுபடுகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, இந்த வேதியர்களின் பயங்கொள்ளி மனதிலும் தன்னம்பிக்கையற்ற உள்ளத்திலும், வளம்பெறாத பிள்ளை மதியிலும் கற்பனை செய்யப்பட்டவைகளே தெய்வங்களாகின்றன. எனவே, இந்தத் தெய்வங்கள் என்பனவெல்லாம் வெறும் மாயை மனமயக்கத்தால் கற்பனை செய்து கொண்டவை என்பதே பகுத்தறிவு காணும் தீர்ப்பு.

இந்த ரிக்வேதப்புலவர்களின் கண்முன்னர் எப்போதும் சோமபானமும், சோம மூலிகைச் செடியும் (கஞ்சா போன்றது) இருக்குமாம். சோமயாகம்தான் ஆரியர்களின் முக்கிய யாகம். மதுக்குடித் திருவிழா இந்தச் சோமயாகம் போலும்! ரிக் வேதத்தில் ஒன்பதாவது பகுதி முழுவதும் இந்தச் சோமபான மகிமை உற்பத்தி முறை பற்றிய வர்ணனைப் பாடல்களையே கொண்டிருக்கிறது. சோமரசச் செடியின் மொக்கு, கொழுந்து, கம்பு முலியவற்றை இடித்துச் சாறெ டுத்து வடிகட்டிச் சுத்தமாக்கிப்பாலும் தண்ணீரும் கலந்து இனிப்பாக்கிக் குடிப்பராம்; பாலுடனும், மோருடனும், கஞ்சி யுடனும் கலந்து தினம் மூன்று வேளை தவறாது உண்பராம்.

அமிர்தம்


மூவா மருந்து, சாவா மருந்து, தேவாமிர்தம் என்று சொல்வதெல்லாம் இந்தச் சோமபான (மதுபான)மேயாகும். இது தேவ பானமாம்! தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் சாகாத தன்மையையளிப்பதாம்! இதற்கு அமிர்தம், சாவா மருந்து என்றும் பெயர். கவிஞர்களுக்குக் கற்பனைச் சக்தியை வளர்ப்பதும் இதுவே என இந்த முன்ஷியார் நூலிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது. (பக்கம் 375).

இந்தச் சோமபான தேவனுக்கு வனஸ்பதி என்றும் பெயராம்.

மக்கள் பழக்க வழக்கங்களே


ஆரிய தேவ வர்ணனைகளை நுணுகிக் கவனித்தால் மக்களுக்குள்ள கோபம் - தாபம் - அன்பு - அழுகை - பகை - உணவு - குடி பழக்க வழக்கங்கள் ஆகிய பலவும் ஆரிய வேதியர் வேதத்தில் பல்வேறு தேவர்களாக உருவகப் படுத்தப்பட்டிருப்பது புலனாகும்.

இத்துடன் மண், மரம், செடி, கொடி, கல், மலை, காடு, ஆறு, காற்று, தண்ணீர், தீ, அங்கங்கள் ஆகிய யாவும் தேவ கணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

ராட்சதர்கள் எனக் குறிப்பிட்டிருப்பது தஸ்யூகள் - தாசர்கள் எனப்படும் இந்தியப் பழங்குடி மக்களையேயாகும் என்று அந்த முன்ஷி நூலே ஒப்புக்கொள்கிறது. அசுரர்கள் பெயர் ரிக்வேதத்தின் பிற்பகுதியில் காணப்படுகிறதாம்.

உண்மைகள்


ரிக்வேத புராணக் கோட்பாடுகளை நுணுகிப் பார்த்தால் கீழ்க்கண்ட உண்மைகள் அறியக் கிடக்கின்றன.

1. முக்கிய இயற்கைக் கோள்களையே உயிரும் உடலு முள்ளனவாக உருவகப்படுத்திக் கொண்டு ஆரியர்கள் வணங்கி வந்தனர்.

2. மரம், செடி, கொடிகளையும் தெய்வங்களாக வணங்கினர்.

3. இந்திரனைக்காளையாகவும், சூரியனைக் குதிரையாகவும் ஆரியர் வேதம் உருவகப்படுத்தியிருப்பதால் இவர்கள் மிருகங்களை இந்திரன், சந்திரன், சூரியன் எனப் பெயரிட்டுத் தெய்வமாக்கிக் கும்பிட்டனர் என்பதும் தெளிவாகிறது.

4. நாசம் விளைவிக்கும் சூறாவளி, இடி, மின்னல் முதலியவற்றைப் பயங்கர தேவராகக் கருதி, ஆரியர் அருள் வேண்டி வந்தனர்; பாதுகாக்கும்படி மன்றாடியிருக்கின்றனர்.

5. ஆரியர்கள் குறிப்பிடும் வானுலகத் தெய்வம் தேவர் என்பனவெல்லாம் உண்மையில் கிடையாதென்பதும், இவ்வுலகில் காணும் பொருள்களையும், மனிதர் மிருகங் களுக்குள்ள பண்புகளையும், மிருகம், மரம், செடி, கொடிகளையும், மழை, காற்று, வெயில், தண்ணீர், நெருப்பு, மண், மலை, காடு முதலியவற்றையுமே தேவராக ஆரியர்தம் மனத்தில் எண்ணமிட்டுக் கொண்டனரென்பதும் வெள்ளிடைமலையாக விளக்கமாகிறது.

காட்டுமிராண்டித் தெய்வங்கள்


இயற்கைப் பொருள்களுக்கு மனித உடலுருவம் தந்து தேவர்களாக்கியதுடன் விட்டுப்போகவில்லை இந்த ஆரியக் கோட்பாடு. மனிதராக்கப்பட்டால் மனிதர்களுடைய நடவடிக்கைகள் விருப்பு - வெறுப்புப் பண்புகள் ஆகிய எல்லாம் சேர்க்கப்படத்தானே வேண்டும் என்று எண்ணினர் போலும்! இவ்விதமே சேர்த்தனர். ஆனால், இவ்விதச் சேர்க்கையில் சிறப்புப் பண்புகளைவிட, மனிதர்களின் தகாத பண்புகள், இழிகுணங்கள், கேடான நடவடிக்கைகள் ஆகியவைகளையே தேவர்களுக்கு விசேஷ லட்சணமாக்கி யுள்ளனர். இதன் உட்கருத்தும் நோக்கமும் என்ன? தேவர்களை நையாண்டி செய்வதா? தேவர்களே இம்மாதிரி கெட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தால், அத் தேவர்களை வணங்கும் அம்மக்களின் ஒழுக்கத்திலும் சந்தேகப்படத்தானே வேண்டும்? ஒழுக்கக்கேடர்களுக்கு ஆதரவு தேட, பாதுகாப்பளிக்க இம்மாதிரிக் கற்பனை செய்தனர் போலும் என்று கருதத்தானே வேண்டியிருக்கிறது? இது ஓரளவுக்கு உண்மையாகலாம். நாடோடி களாகத் திரிந்த அக்கால ஆரிய மக்களின் பழக்கங்கள் அநாகரிகக் காட்டுமிராண்டித் தன்மையில்தான் இருக்கும்; பக்குவப்படாத, பதப்படுத்தப்படாத இயற்கையுருவ முட் செடிகளாகத்தான் தோன்றியிருக்கும். அக்கால ஆரியர்கள் பண்பாட்டுப் பழக்க வழக்க நடைமுறைக் கோட்பாடுகள் உடையவர்களாக இருந்தனர். சிறந்த நாகரிகமுற்றிருந்த திராவிடப் பெருங்குடி மக்கள் அநாகரிக ஆரிய மக்களைக் கண்டு எள்ளி நகையாடியும் இருப்பர்; கண்டித்தும் இருப்பர்; தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்தும் இருக்கலாம். இத்தகைய கண்டன - தீண்டப்படாத நிலைமையிலிருந்து தப்பத் தங்கள் தேவர்களைச் சாட்சியாக - ஆதாரமாக ஆக்கி, தங்களுடைய பழக்க வழக்கத் தகாதப் போக்கு களுக்கு ஆதரவு தேட முற்பட்டுமிருக்கலாம் அந்த ஆரியக் குழுவினர். அதாவது தங்களுடைய தேவர்களிடமே இந்தப் பண்புகள் உள்ளனவெனச் சுட்டிக்காட்டி, தங்களுடைய சம்பிரதாயக் கோட்பாடுகளுக்குச் சப்பைக் கட்டுக்கட்ட முற்பட்டனர் போலும்!

இது, ஆரியர் இந்தியாவுக்கு வந்த துவக்கக்காலத்திற்கு ஏற்ற வாதமாகலாம். ஆனால், பிற்காலத்தில் அதுவும் மக்கள் நாகரிகச் சிறப்புற்ற அறிவு பண்பட்ட நிலைமையிலும் இத்தகாத பண்புக் கடவுள்கள் எதற்கு எனக் கேள்வி எழுகிறது.

விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் சோறும்; தண்டு முண்டுக்காரனுக்குத் தயிரும் சோறும் என்று உள்ளதே தமிழ் மக்களிடையே ஒரு பழமொழி. இந்தக் கோட்பாட்டுக்கு இந்த ஆரியக் கடவுள்கள் தகுந்த உதாரணமாக்கப்பட்டுள்ளன. போக்கிரிகளைக் கண்டு அஞ்சித்தானே மக்களும் அடங்குவர்; பணமும் பண்டமும் லஞ்சமாகத் தருவர்; சாதுவைக் கண்டால் யாரும் மதிக்கமாட்டர்களே; ஆதரிக்க மாட்டார்களே; உதவி புரிய மாட்டார்களே; உலகறிந்த

தாயிற்று இது. இந்த உட்கருத்தின் மீதுதான் ஆரிய வேதியரும் பிற்காலத்தில் பிற மக்களை முக்கியமாகத் திராவிட மக்களை வணங்கச் செய்யத் தங்கள் தெய் வங்களுக்கு இந்தப் போக்கிரி இலட்சணங்களைச் சூட்டிக் கொண்டுளர் என்பது விளக்கமாகிறது. இந்தத் துஷ்ட தெய்வங்களின் பெயரை - போக்கிரி நடவடிக்கைகளைச் சொல்லி மக்களை மிரட்டியும் பயப்படச் செய்தும் பணம் கறந்து சுகவாழ்வு வாழ நம்பகமான வழி இதுவெனக் கொண்டனர் என்றும் துலக்கமாகிறது.

தோத்திரங்கள் மூலமும் புகழ் பாடுவதன் மூலமும் பணமும் பண்டமும் பிரசாதமும் காணிக்கைகளாகத் தருவதன் மூலமும்தான் இந்தத் தெய்வங்கள் திருப்தியடைந்து மகிழ்ச்சியடைந்து கருணை காட்டும் - வரம் அருளும் என்ற கோட்பாட்டைத் தோற்றுவித்தனர். இது உலகறிந்த உண் மையும், யாரும் நம்பக்கூடிய நடப்புச் செயலுமாக உள்ளது.

மக்களிடையே, சுற்றத்தாரிடையே அன்பும் ஆதரவும் கூட்டுறவும் ஏற்படப் பணமும் பண்டமும் தருதல் அறிந்ததே. அரசாங்க அதிகாரிகளை வசப்படுத்தவும் இம்முறை கையாளப்படுகிறதல்லவா? எனவே, மனிதர் தலை யெழுத்தை நிர்ணயிக்கும் - மனிதர்கள் வாழ்க்கையை நிர்வகிக்கும் தலைமை அதிகாரிகளாக இந்தத் தேவர்களைச் சித்தரித்துக் காட்டிப் பூசைபோடவும், காணிக்கை செலுத்தவும் செய்தனர்.

கல்லிலும், மண்ணிலும், மரத்திலும், செம்பிலுமாகிய இந்தத் தேவ உருவங்கள் உண்ணவா போகின்றன! பணத்தால் தான் என்ன பலன்! அவற்றிற்கு இந்த வேதப் புரோகிதப் பூசாரிகளும் தங்களை, வேதப் பிரதிநிதிகளாகவும் பூதேவர் களாகவும் கற்பித்துக் காட்டித் தேவருக்குச் சமர்ப்பித்த வற்றைத் தமக்காக்கிக் கொண்டனர். தாயும் மகளும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வெவ்வேறு தானே என்று வாதிப்பரே தமிழ் மக்கள் உலகறிவோடு! இந்த வாதத்தை ஆரியப் பூசுரர்கள் பொய்யாக்க முற்பட்டு வெற்றியும் பெற்றனர். தமது வாயும் வயிறுமே தேவர்களின் வாயும் வயிறும் என்று பாமர மக்கள் நம்பும்படிச் செய்தனர். இவ்வித நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகக் காட்டுக்கரடி உறுமல் குரல் - சமஸ்கிருத மந்திரங்கள் என்ற கரடுமுரடு உச்சரிப்பு - கழுத்தறுபடும் ஆடு அலறுவது போல் ஒலிக்கும் - வெறி பிடித்தவன் கத்துவது போல் குரலெழுப்பும் சொல்லடுக்குப் பாட்டுக்களையும் தொடுத்துக் கொண்டனர். அத்துடன் தெய்வச் சாபம், தெய்வக் கோபம் என்றும் மிரட்டல் வாக்கியங்களைக் கற்பனை செய்து கூறித் தங்கள் கோட்பாடுகளை எதிர்ப்பவர்களையும் வாயடக்கினர். பகுத்தறிவு ஆய்வறிவு விஞ்ஞான அறிவுவளம் பெற்றுள்ள இக்காலத்திலும் இந்த மவுடீகக் கோட்பாடுகளை நம்புவோர் ஏராளமாயிருக்கும்போது, அறிவு வளம் பெறாத இளஞ்செடி நிலவரத்திலிருந்த அக்கால (ஆரிய அடிநாள்) தெய்வ மந்திர மாய மிரட்டுகளை நம்பியதில் ஆச்சரியம் இல்லையே!

தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கான இந்தப் புரோகிதப் பூசாரிக் கங்காணித் தொழிலைத் தங்களுக்குப் பரம்பரைச் சொத்தாக்கிக் கொள்ளத்தான் மற்ற மக்களின் தாய்மொழிப் பாட்டுகளை ஒதுக்கி மற்ற மக்கள் அறியாத புரிந்துகொள் ளவும் இயலாதபடித் தடுப்புக் கோட்டைக்குள் வைத்துக் கொண்ட சமஸ்கிருத மொழிச் சொல்லடுக்குகளைப் பூசை மந்திரங்களாக்கிக் கொண்டனர். திராவிடர் அம்மந்திரங் களை அறிந்தால் பாவம் என்றும், நரக பிராப்தி என்றும் பயமுறுத்தி, பிறர் இந்தச் சொல்லடுக்குகளின் அர்த்தத்தை அறியாதபடிச் செய்து விட்டனர். பிற்காலத்தில் இம்மந்திரங் களைத் திராவிடர்களும் அறிந்து கொண்டனர். திராவிடப் பெருங்குடி மன்னனான இராவணனும் இந்த வேதங்களை அறிந்திருந்தானென இராமாயணத்தில் வால்மீகியே தீட்டி வைத்திருக்கிறார். இவ்விதம் திராவிட மக்கள் அறிந்ததால், வேதியரின் பிழைப்பில் மண் விழுந்தது போலும்! எனவேதான், மனு(அ) தர்ம சாஸ்திரத்தில் சூத்திரர், முக்கியமாகப் பெண்கள் (இவ்விருவரும் அடிமைகளாக இருக்க வேண்டியவர்கள்) வேதத்தைப் படிக்கக்கூடாது, வேறுபாட்டுக்களைப் பாடக்கூடாதென தடைச்சட்ட விதியைச் சேர்த்துளர்).

இந்தத் தடைச்சட்ட விதிகளை மீறுபவர்களுக்குத் தண்ட னையும் நிர்ணயித்துத் தங்கள் கையாட்களான மன்னர் களைக் கொண்டு தண்டித்து வந்தனர். இந்தத் தண்டனையில் முக்கியமானவை நாக்கறுத்தல், காதிலே கொதிக்கும் உலோகக் குழம்பை வார்த்தல் எனத் தெரிகிறது.

மேலே கூறிய கோட்பாடுகளுக்கு ஆதாரங்கள் முன்ஷி, பிர்லா, ராதாகிருஷ்ணன், வெங்கட்ராம சாஸ்திரி தொகுப்பு நூலான இந்த ஆராய்ச்சி நூலிலும் பார்க்கக் காணப் படுகின்றன..

- வியாழக்கிழமை தொடரும்

 - விடுதலை நாளேடு, 10.9 .19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக