செவ்வாய், 17 மார்ச், 2020

சமஸ்கிருதம் உயிருள்ளதா? -56

குடிஅரசு,  08.09.1940-லிருந்து...

12.3.2020  அன்றைய தொடர்ச்சி

எனவே, ஆரியவர்க்கத்தார் தங்கள் நிலையை உயர்த்த, தங்கள் செல்வாக்கைப் பாதுகாக்க இந்த 20ஆம் நூற்றாண்டிலே, இவ்வாறு பச்சையாக சரித்திரத்திற்குப் புறம்பானதும், தங்களுக்கு அதைக்குறித்து சிறிதும் அறிவோ, ஞானமோ, இல்லாததுமான காரியத்தை சொல்லத் தயங்கவில்லையானால், அந்நாளில் சூதுவாதற்ற நம்மவர்களை - திராவிடர்களை என்னென்ன சொல்லி ஏய்த்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்கக் கோருகிறோம்.

இதுவரை மூர்த்தியார் தங்கள் சமஸ்கிருத மொழியின் பெருமைகளைக் குறித்துக் கூறியதைக் கவனித்தோம். இனி தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் என்ன சொல்லுகிறார் என்பதை சிறிது கவனித்தால் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த எத்தகைய முறையைக் கையாளுகிறார்கள் என்பது புலனாகும் என்று கருதுகின்றோம். சென்ற மாதம் 31ஆம் தேதியில் திருநெல்வேலி எம்.டி.டி. இந்து காலேஜ் சமஸ்கிருத ஆரம்ப விழாவில் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் “சமஸ்கிருதத்தின் பெருமை களைக் குறித்துப் பேசுகையில் சமஸ்கிருதம் இறந்துபோன பாஷையென்று சொல்வதைக் கண்டிக்கிறேன். சமஸ்கிருதம் உயிருள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமஸ்கிருதம், ஆரிய மொழி (இது நாம் சொல்லும் பெயரல்ல. ஆங்கில இலக்கணாசிரியர்களே சமஸ்கிருதம் ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்தது என வகுத்திருக்கின்றனர்) இறந்துபோன மொழியென்றும், ஆரிய துவேஷிகளோ, பார்ப்பன துவேஷி களோ, சுயமரியாதைக்காரர்களோ, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களோ சொல்லுவதாக யாரும் எண்ணவேண்டாம். மொழி ஆராய்ச்சியாளர்களே, மொழிக்கு இலக்கணம் எழுதினவர்களே அவ்வாறு  கூறியிருக்கின்றனர். எம்மொழி பழைய எழுத்துச் சுவடியில் அதாவது எழுத்து வழக்கில் மட்டுமிருக்கிறதோ அதற்கு இறந்த மொழியென்றும், எம்மொழி எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலுமிருக்கிறதோ அதற்கு உயிருள்ள மொழிகள் எனவும், ஆராய்ச்சியாளர் வகுத்திருக்கின்றனர். ஆங்கிலத் தில் அதைக் குறித்து எழுதியிருப்பதை  அப்படியே வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். அதாவது,

“A living language is one which is used in common speech. A language which has ceased to be spoken but is found in writings of the Past is a Dead Language. Sanskrit and Latin are dead Languages " என எழுதப்பட்டிருக்கிறது.

இறந்த மொழிக்கு உள்ள லட்சணம், இன்னது இந்த லட்சணத்தை உடைய மொழிகள், இறந்த மொழிகள் என்று சொல்லுகையில், “நான் அவ்வாறு சமஸ்கிருதத்தை இறந்த மொழியென்று சொல்லுவதைக் கண்டிக்கிறேன். சமஸ்கிருதம் இறந்த மொழியன்று” என்று சொல்லி காரணம் கூறாமல் ஆத்திரப்பட்டுக் கண்டிக்க முன்வருவதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று கேட்கிறோம்.

இதுவரை சமஸ்கிருதம் இறந்த மொழி என்று சொல்லப்பட்டு வந்திருக்க, அதைப்பற்றிச் சிறிதும்கவலை கொள்ளாது, இன்று மட்டும்  இவர் இவ்வாறு ஆத்திரங்கொள்ளக் காரணம் என்ன என்றால், திராவிடர்கள் விழிப்படைந்து விட்டார்கள், சமஸ்கிருதம் இறந்த மொழியென்று சொல்லி வருவது மறைக்கப்படாவிட்டால், “இறந்த மொழியாகிய சமஸ்கிருதம் இந்நாட்டிற்கு என்ன அவசியம்? அதற்கு ஏன்  ஒவ்வொரு  உயர்தரக் கலாசாலைகளிலும் தனிப் பண்டிதரும் அதற்கு கரிக்குலத்தில் அதாவது பாடத் திட்டத்தில் தனி இடமும் கல்லூரிகளில் சமஸ்கிருத பேராசிரியர்களும் என்று கருதி அதை ஒழித்து விடுவார்கள்” என்ற அச்சத்தைத் தவிர, வேறு என்னவாயிருக்க முடியும் என்று கேட்கிறோம்.

அதோடு நின்றார் இல்லை ஆச்சாரியார். சமஸ்கிருதம் தெரியாத இந்தியனுக்கு எந்நாட்டிலும் மதிப்பில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது எவ்வளவு விஷமுள்ள ஆணவமான பேச்சு என்பதை எண்ணிப்பார்க்கக் கோருகிறோம். இந்தியன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் உலகத்தினரால் மதிக்கப்படவேண்டும் எனக் கருதினால்தானே சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். அதனால்தான் திருவாரூர் ஜஸ்டிஸ் மாநாட்டில் திராவிடன் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ளக் கூடாதென்றும், தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளக் கூடாதென்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

எனவே, ஆச்சாரியார் வாதப்படி இந்தியன் என்று எவன் தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறானோ, எவன் தன்னை உலகோர் மதிக்க வேண்டுமென எண்ணுகிறானோ அவன்தான் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமென்பதும், திருவாரூர் மாநாட்டு தீர்மானப்படி, திராவிடர் என்று சொல்லிக் கொள்கிற வனுக்கு சமஸ்கிருதம் தெரியவேண்டிய அவசிய மில்லையென்பதும் நன்கு விளங்கும்.

இதிலிருந்தாவது ஆரியவர்க்கத்தினர், தங்கள் மொழி யைக்  குறித்து எவ்வளவு உயர்வு கொண்டிருக்கின்றனர் என்பதையும், தமிழ் மொழியையோ அல்லது வேறு மொழி களையோ குறித்து எவ்வளவு தாழ்வு கொண்டிருக்கின்றனர் என்பதையும், எண்ணிப் பார்க்கவே கோருகிறோம். கடைசியாக, ஆரியத்திற்கு இந்நாட்டிலே சாவுமணி அடித்தாய் விட்டது என்பதை ஆரியவர்க்கத்தினர் நன்கு உணர்ந்து கொண்டுவிட்டனர் என்பதையும், அதன் காரணமாக சரித்திரத்திற்கும், உண்மைக்கும் புறம்பானதும் பொருத்தமற்றதுமான காரியங்களைச் சொல்லி எப்படியாவது ஆரிய ஆதிக்கம் நிலைக்க அருமுயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்பதையும், இப்பொழுதே திராவிடர்கள் விழிப்பாயிருந்து மக்களுக்கு அவ்வப்போதே உண்மையை விளக்கி, சரித்திர ஆதாரங்களை எடுத்துக்காட்டி ஆரிய சூழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமென்பதும் விளங்குகிறது அல்லவா? என்று கேட்கிறோம்.

இதைச் செய்ய ஒவ்வொரு திராவிடரும் முன் வருவார்களாக

- விடுதலை நாளேடு 17 3 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக