வெள்ளி, 13 மார்ச், 2020

நீதிக்கட்சிக்குத் தகுந்த காப்பாளர் பெரியாரே

- திருநெல்வேலி ஏ.வி.முத்தையபிள்ளை)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

தலைவர்

1. நம் கட்சிக்கு பெரியார் அவர்களே அன்னார் ஆயுள் பரியந்தம் தலைவராக இருக்க வேண்டும். சுமார் 6 மாத காலத்திற்கு முன்பே இந்த நோக்கத்தைக்கொண்ட ஓர் தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க கமிட்டியில் கொண்டுவந்திருப்பதை அநுசரித்து இந்த மாநாட்டில்  (திருவாரூர் மாநாட்டில்) அவர்களையே ஜீவிய தலைவராக இருக்க வேண்டுமென்பதற்குரிய கொள்கையைத் திட்டத்தில் செய்ய வேண்டிய மாறுபாடுகள் செய்து நிறைவேற்ற வேண்டியது முதல் கடமை.

ஆயுள் பரியந்தம் தலைமைப் பதவி வகிப்பதென்னும் கொள்கை, பொதுவாய் ஜனநாயகம் உலவும் நாட்டில் நிராகரிக்கப்பட்டு வந்தாலும், நம் தலைவரின் ஒப்பு உயர்வற்ற தன்மையைச் சீர்தூக்கிப் பார்த்தால், இவர்கள் விஷயத்தில் அக்கொள்கைக்கு மாறாக நடப்பது கெடுதியை உண்டு பண்ணாது.

ஏனெனில் இக்கட்சியில் நடுநிலைமையை வகித்து பிரதி பிரயோஜனம் எதிர்பாராத நிலையும் உள்ளவர்கள் கட்சி பிளவுபட ஏற்படவேண்டுமானால் பணம், கையாடல், பதவி வேட்டையாடல் தான் காரணம்; இப்பேர் வழிகளை கட்டுப் படுத்தி தன்னைப் போன்ற நடுநிலையுள்ள அறிவாளிகளை தேர்ந்தெடுக்கும் சக்தியுள்ளவர்கள் அவர்களே ஆகையால் கட்சியில் பிளவுபடாமல் நீதியை நிலைநாட்டும் குணசீலரும் பகுத்தறிவு வாய்ந்தவர்கள் என்பதும் நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டியதே என்பது அவர்கள் பகுத்தறிவே கொண்டு சென்ற 20 வருஷ காலங்களாக சுயமரியாதை இயக்கத்தை கையாண்டு நீதிக்கட்சித் தலைவரானார்கள் இது யாவரும் அறிந்த விஷயமே. இயக்கத்தில் ஒவ்வொரு அங்கத்தினரும் பகுத்தறிவைப் போற்றி நீதியை தன் நலம் கருதாமல் கையாள வேண்டுமானால், நம் தலைவரைப் பின் பற்றி நடப்பது தான் நம் கடமையாகும்.

ஏனெனில் நம் தலைவரவர்கள் தனக்கென வாழாப் பிறர் குரியாளர், இந்தியா முழுவதிலுமுள்ள எக்கட்சித் தலைவர்களுக்குமுரிய எவ்வித மேம்பாட்டிலும் ஓர் சிறிதும் குறைபடாதவர், வீரபுருஷர். அறிவு கேள்வி, பேச்சு வன்மை, மனித சுபாவத்தை நிதானிக்கும் புத்தி நியாயமான கொள்கைகளைக் கடைப்பிடித்து நிற்கும் பிடிவாதம், தன் குற்றங்கண்டவிடத்து பொறுமையுடன் ஒப்புக்கொள்ளுதல், எதிரிக்குச் சந்தர்ப்பம் கொடுத்து அவர்களின் கேள்விகளுக்கு அறிவிற்குப் பொருத்தமானதும் எல்லோரும் ஒப்புக் கொள் ளக் கூடியதுமான விடையளித்தல், இன்னும் இதுபோன்ற தலைவராக இருப்பவர்களுக்கு வேண்டிய பல நற்குணங்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர்களாதலால் இவர்கள் ஆயுள்கால தலைவராக அமைந்தால் அது நம் அதிர்ஷ்டமே என்றுதான் சொல்லவேண்டும். ஆதலால் அவர்களையே ஜீவிய தலைவராக எல்லோரும் ஏகமனதாய்த் தெரிந்தெடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

"தமிழ் நாடு தமிழருக்கே"

2 தமிழ்நாடு தமிழருக்கே என்பது தான் இனி நமது மூலமந்திரமாக இருக்க வேண்டும். திராவிட நாட்டைப் பிரித்து விட்டால் நமக்குண்டான கேடுகள் எல்லாம் சூரிய னைக் கண்ட பனிபோல் நீங்கிவிடும். நம் எதிரிகளையடக்க வேறு எந்த வழியும் தேவையில்லை. தற்போது ஆரியர்கள் முஸ்லிம் பிரிவினையை எதிர்ப்பதெல்லாம் எங்கே திராவிடர்கள் முஸ்லிம்களைப் போல் பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தினால்தான். இந்து, சுதேசமித்திரன் போன்ற ஆரியப் பத்திரிகைகளில் காணப்படும் முஸ்லிம் பிரிவினை எதிர்ப்புகளெல்லாம் யார் மூலம் அவர்களுக்குக் கிடைக் கின்றன என்று அப்பத்திரிகைகளிலே, பாருங்கள், அநேகமாய் மேற்படி செய்திகளெல்லாம் அவர்கள் "சொந்த நிருபர்கள்" எழுதியதே என்று தெரியவரும். பத்திரிகைகளின் சொந்த நிருபர்கள் எப்படி விஷயத்தைத் திரித்துக் கூறுவார்களென்பது சொல்லாமலே விளங்கும். மேலும் முஸ்லிம் தலைவர்களென்று ஆரியப் பத்திரிகைகளால் விளம்பரம் செய்யப்பட்ட பேர்வழிகளின் நிலைமைகளை அந்த ஊரில் போய் விசாரித்துப் பாருங்கள் அப்பொழுது நன்கு புலனாகும். அப்போலித் தலைவர்களில் மிகுதியானவர்களை வலை போட்டு அரித்தாலும் காணமுடியாது. கண்டாலும், இவர்கள், தலை உடையவர்களாதலால் தலைவர்களென்பதைத் தவிர வேறொன்றும் கண்டுபிடிக்க முடியாது. விஷயத்தை விளக்கிச் சொல்ல வேண்டுமானால் தென்னிந்தியா காங்கிரஸ், ஜில்லா, தாலுகா தலைவர்களில் பலரின் தனிக் கவுரவத்தையும் அவர்கள் பூஸ்திதிகளையும் அவர்களுக்குப் பொது ஜனங்களிடையிருக்கும் மதிப்பையும் பார்த்துக்கொள்ளுங்கள். இவைகளெல்லாம் நமக்கு நன்கு தெரிந்தவைகளே. ஆனால் பத்திரிகைகளில் படிக்கும் வடநாட்டார் இவர்களைக் கண்டார்களானால் தென்னாட்டின் உண்மைத்தலைவர்கள் தானே என்று எண்ணுவார்கள். அதுபோல வடநாட்டிலுள்ள தலைவர்களை, நாமும் நம்பும்படி பத்திரிகை பிரசாரம் நடக்கின்றது. இந்தப் பேப்பரில் முஸ்லிம்லீக் பிரிவினை எதிர்ப்புச் செய்திகள் தவறாமல் வந்து கொண்டி ருக்கின்றது. அதனை அப்படியே விழுங்கிவிடாதீர்கள். அலசிப்பாருங்கள் உண்மை தெரியவரும். முஸ்லிம் பிரிவினை எதிர்ப்பே திராவிட பிரிவினை இல்லாமலிருக்கும்படி செய்வதற்காகத் தான். திராவிடர்கள் பிரிந்தால் ஆரியர்களுக்குக் கதியில்லை என்பது நன்றாய்த் தெரிந்த பயத்தின் மேல் தான், ஆரியர்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு சூழ்ச்சிகளெல்லாம் செய்து வருகிறார்கள்.

"தாயை வெட்டுவதா சேயை வெட்டுவதா' என்பனபோன்ற மக்களை மயக்கும் வார்த்தைகளை காற்றில் வீசுகிறார்கள் இவ்வார்த்தைகளில் சிக்காதீர்கள்.

56 மன்னர்கள் ஆண்ட தேசம் எப்படி ஒன்றாயிருக்க முடியுமெனக் கேளுங்கள். இமயமுதல் குமரிவரை ஒன்றாயிருந்த  தெப்போதென்று வினாவுங்கள். பிரிட்டிஷ்காரர் வந்த 150 வருடத்திற்குப் பின் தானே? அதற்கு முன் ஒற்றைவெண் கொற்றக்குடையில் கோலோச்சிய கொற்றவனை சரித்திர பூர்வீகமாகக் காட்டுவீர்களா எனக்கேளுங்கள்.

இக்கேள்விகளைக் கேட்டால் ஆரியர்கள் கண்விழி பிதுங்கும். ஆடு மேய்த்தவர்கள் அரசாளவும் அரசாண்ட வர்கள் ஆடு மேய்க்கவுமாக இருந்த காலம் போய்விட்ட தென்று சொல்லுங்கள், "தமிழ்நாடு தமிழருக்கே தான்" இதனைப் பிரித்தே தீருவோம். முக்காலும் சத்தியம் என்று சொல்லி இன்று முதல் பிரித்துத் தீரும்வரை விடாமுயற்சியுடன் கருமமே கண்ணாயிருந்து பிரிவினை எண்ணத்தை நிறைவேற்றுவோம்.

கட்டுரையாளர் பற்றி...

திருநெல்வேலி ஏ.வி. முத்தைய பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரை 19.6.1940 மற்றும் 20.6.1940 இரண்டு நாள்கள் விடுதலையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சொல்ல வேண்டிய கருத்துகளை வரிசைபடுத்தி 26 விடயங்களை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். திருவாரூர் மாநாடு நடப்பதற்கு இரண்டு மாத காலத்திற்கு முன்பே வெளிவந்த கட்டுரை இது. பெரியாரே நீதிக்கட்சிக்கு நிரந்தரத் தலைவராக இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி கொள்கை, பத்திரிகை, உறுப்பினர்கள், நிதி, பிரச்சாரம், கொடி, தொண்டர்படை என்று பல செய்திகளை திட்டவட்டமாகத் தெரிவிக்கும் தொலை நோக்குப் பார்வை கொண்ட தரமான கட்டுரை வாசகர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

சென்சஸ்

3. சமீபத்தில் நடக்கப்போகும் சென்ஸஸ்ஸில் திராவிட ஆரிய பாகுபாட்டைக் கண்டு திராவிடர்கள் எவ்வளவு  என்று கணக்குத்தெரியும்படி செய்ய கவர்மெண்டாரை, திராவிடர் - ஆரியர் என்ற தலைப்பின் கீழ்குறிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

தினசரி

4. ஆங்கிலத்திலும், தமிழிலும் ஓர் தினசரி 12 பக்கங்களுக்குக் குறையாமல் செவ்வையாக நடத்துவதற்கு ஓர் ஏற்பாடு செய்ய வேண்டும் இது சரியாய் நடந்தபின் இதேமாதிரி தெலுங்கிலும் ஓர் தினசரி நடத்த வேண்டும்.

அங்கத்தினர்கள்

5. தெ. இ. க. உ. சங்கத்துக்கு ஏராளமான மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். திராவிடர் ஜனத்தொகை எவ்வளவோ அவ்வளவிலுள்ள ஆண் பெண்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களெல்லாம் தெ. இ. ந. உ. மெம்பர்கள் தான் என்ற நிலைக்குக்கொண்டுவர வேண்டும்.

பொது நிதி

6. கட்சிபலத்திற்கும் அபிவிருத்திக்குமாக ஓர் பொதுநிதி திரட்ட வேண்டும். இது பிரபுக்கள் தாராளமாய்க் கொடுப்பதைக் கொண்டு மட்டுமல்லாமல், ஜில்லாக்கள், தாலுகாக்கள் கிராமங்கள் தோறும்  ஙிவீக்ஷீtலீபீணீஹ் சிறீuதீ ஒன்று ஏற்படுத்தி நபர் ஒன்றுக்குக் குறைந்தது 8 அணா வீதம் வசூலித்து பொது நிதியுடன் சேர்த்துக்கொண்டே போக வேண்டும்.

பிரச்சாரம்

7. இங்கிலாந்து முழுவதும் நம் நாட்டில் ஆரியர்கள் நம்மை  எவ்விதம் நடத்துகிறார்களென்பதையும் அதன் காரணத்தையும் தெளிவுபட எடுத்து நன்கு விளக்கிக் காட்டுவதற்கு நம்மிடம் சம்பளம் பெற்ற ஆங்கிலேய விளம்பரக்காரர்களை நியமனம் செய்ய வேண்டும். மற்றும் அவர்களுக்கு ஒத்தாசையாக நம் செலவில் துண்டுப்பிரசுரம் கோடிக்கணக்கில் வினியோகம் செய்ய வேண்டும். நம் நாட்டிலும் இமயம் முதல் குமரிவரை மேலே சொல்லிய செய்தியைப் பரவச்செய்ய வேண்டும்.

- விடுதலை: 19.6.1940

தொடரும்....

வெள்ளி, 06 மார்ச் 2020 

6.3.2020 அன்றைய தொடர்ச்சி)

சொற்பொழிவாளர்கள்

8. நம்மவர்களில் பேச்சு வன்மையுள்ள வாலிபர்களைப் பொறுக்கி எடுத்து அவர்களைக் கொண்டு நம் கட்சியின் நோக்கத்தையும் ஆரியர்களாலுண்டாகும் கெடுதியையும் அதிலிருந்து நாம் மீண்டால் நமக்குக்கிடைக்கும் நன்மை களையும் தென்னிந்திய கிராமங்களிலும் பட்டணங்களிலும் உள்ள நம்மவர்களுக்கு அடிக்கடி எடுத்துப் போதிக்கச் சொல்ல வேண்டும். இவ்விதம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் நிலைமையை நாம் நன்கு கவனித்து அவர்கள் வீட்டிற்குவேண்டிய பொருளுதவி பொது நிதியி லிருந்து கொடுத்து வரவேண்டும். உலகமே விளம்பரத்திற் கடிமையென்பதை மறந்து விடக்கூடாது. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகருமென்பதை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

இந்தப் பிரசுரங்கள் தமிழர் ஜில்லா ஒன்றுக்கு ஒருவருக்கு குறையாமல் தலைமைச் சங்கத்திலேயிருந்து அனுப்ப வேண்டும். ஜில்லா கமிட்டியார் மாதச்சம்பளமும் அந்தந்த ஜில்லாவில் - சுற்றுப்பிரயாணம் செய்து பிரசங்கம் செய்து வரப் போதுமானபடியும் கொடுத்து உதவ வேண்டும். சென்ற கிராமங்களில் வருஷ அங்கத்தினர்கள் சேர்ப்பதும் நன் கொடை வசூலிப்பதும் இப்பிரசங்கியின் முக்கிய வேலை யாக இருக்கவேண்டும். இது இல்லாதது ஒரு பெரும் குறை. இந்த இயக்கம் வளர்ந்தேறுவதில் யாரும் இதில் கவனம் செலுத்தவில்லை. இப்போதிய பிரச்சாரகர்கள் தன்னைக் கூப்பிடும் கிராமத்தார்களிடம் போய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது முறையாகத் தோன்றவில்லை. இவர்கள் ஜில்லா சங்கத்தின் தலைவர் அல்லது அமைச்சர் மூலமாக அழைக்கப்பட வேண்டும். பண உதவி செய்யப்பட வேண்டுமேதவிர தனித்தமுறையாகச் செல்வதும், ஊதியம் தேடு முறையைக் கையாளாத வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை மாகாண சங்கத்தின் தலைவரவர்களை வணக்கமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொண்டர் படை

9. ஓர் தமிழ் தொண்டர் படை திரட்டவேண்டும். தமிழுக் கென தன் உயிரையும் தியாகம் செய்யக் கூடிய வீரராகப் பார்த்து அமைக்க வேண்டும். அவர்களிடம் வீரம், ஒழுங்கு, நாகரீகம், பெருந்தன்மை முதலிய குணங்களே காணப்படும் படி அவர்களுக்கும் போதித்து வரவேண்டும். இந்தப் படை வேறு, பிரச்சாரர்கள் வேறு. இவர்களுக்கு டிரில் ஸ்போர்ட்ஸ் முதலியவைகளைப் பழக்கிக் கொடுக்க வேண்டும். இவர் களுக்கு மேல்நாட்டு நாகரீகம் கொண்ட ஓர் தனி உடை கொடுக்க வேண்டும். இவர்கள் தியாக சொரூபிகளென நம் எதிரிகளும்  கருதும்படியாக இருக்க வேண்டும். இவர்க ளுக்கு ஜில்லாவில் சாரண ஆசிரியர்கள் (Scout Master) போன்றவர்களை தெரிந்தெடுத்து நியமனம் செய்ய வேண்டும்.

கொடி

10. நமது கட்சியின் கொடி மதக்கலப்பில்லாமல் தயாரிக் கப்பட்டிருக்கிறது. அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவுமிருக்கிறது.

சின்னம் (Badge)

11. பார்த்த மாத்திரத்திலேயே தெ.இ.ந.உ.ச என்று சொல் லும்படி ஓர் அறிகுறி (Badge) செய்து அதை வேறொருவர் செய்யாதபடி ரிஜிஷ்டர் செய்து கொள்ளவேண்டும். இந்த பாட்ஜை நமது தொண்டர்கள் தொப்பியிலும் பிரச்சாரகர்கள் மார்பிலும் அணிந்து கொள்ளவேண்டும்.

உடை

12. நம்மவர்கள் ஆணும் பெண்ணும் அவரவர்கள் விசேஷகாலங்களிலும் சாதாரண காலங்களிலும் அணிந்து கொள்ளவேண்டிய உடையைத் தீர்மானித்து அதில் முக்கியமாய் பெண்கள் தற்காலம் நாகரீகமாய்க்கட்டிவரும் உடையே அவர்களுக்கு அழகு செய்வதால் இதையே இன்னும் நாகரீகமான முறையில் அணிந்து கொள்ளும்படி செய்தும் ஆடவர்கள் மேல்நாட்டு உடையையும், நம்நாட்டு உடையையும் சமயசந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அணிந்து கொள்ளச்செய்ய வேண்டும்.

மதம்

13. போலி மதங்களையும் ஆரியக்கடவுள்களையும் அடியோடு விட்டு விடுவது தான் நல்லது. அதற்கு வேண்டிய பகுத்தறிவு நம்மவர்களில் பெரும்பாலருக்கு இல்லையாத லால் அவர்கள் அப்பகுத்தறிவு எய்தும்வரை அப்போதனை செய்யாமல் மதத்திற்கும் கடவுளுக்குமென செய்யும் சடங்கு களின் செலவை எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைத்துச் செய்யும்படி போதனை செய்யவேண்டும்.

முதலில் நாம் திராவிடர் என்ற உணர்ச்சியையும், 'அதன் பின் மதம் இரண்டாவதாக பாவிக்க வேண்டும். யார் யார் எந்த மதத்தையும் கையாளலாம். ஆனால் அம்மத உணர்ச்சி அடுத்த திராவிடரை பாதிக்கக் கூடாது, மதத்தைக் கொண்டு தனிப்பட்ட ஒரு ஆண் - பெண் சமமாக பிறருடன் வாழ்வ தற்கு, தடை செய்யக்கூடாது, சமபோஜனத்திலும் சகலவாழ் கையிலும் திராவிடர்கள் ஒரு குலமே ஒருதாய் மக்களே என்ற உணர்ச்சி தான் வேண்டுவது. மதத்தைப் பொறுத்து கடவுள் வழிபாட்டில் வீண் செலவு எவ்வகையிலும் தனிப்பட்ட ஆண் பெண் செய்யக்கூடாது இதுகடவுளிடம் பேரம் செய்து கொண்டது போலாகும். கடவுள் உணர்ச்சி அடைய வேண்டுமானால் பகுத்தறிவு உணர்ச்சி வளர்ப்பதில் தான், கிட்டும். ஒவ்வொரு திராவிடரும் கடவுள் ஒருவரே, அவரை வணங்குவதிலும் அவரிடம் அருள்  பெறுவதிலும் மனம் சீராக இருக்க வேண்டுமே தவிர, பணம் கொண்டு உபசரித்து அருள் பெற முடியாதென்ற உண்மையை ஒவ் வொரு பிரச்சாரகர்களும் வற்புறுத்தி, போதிக்கவேண்டும். நம் அறிவாளராகிய பெரியாரையும் அக்கொள்கையைப் பரப்புவதால், நம் ஆரிய நண்பர்கள் நாஸ்திகர் என்று கூறி பாமரர்களை தன்குல ஆசாரப்படி பித்தலாட்டமாய் ஏய்த்து வருகிறார்கள். ஏனெனில் அவர்கள் பிழைப்பில் மண் விழுந்து விடுமல்லவா.

திராவிட முஸ்லிம் ஒற்றுமை

14. முகமதியர்களை நம்முடன் சேர்த்துக்கொள்ள வேண் டிய ஏற்பாடு செய்யவேண்டும். இதுவிஷயமாய் ஜனாப் ஜின்னா அவர்களை நம்மில் பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் நேரில் போய்ச் சந்தித்து அவர்களுடன் கலந்து திராவிடர் களும் முஸ்லீம்களும் என்றும் ஒன்றாயிருப்பதற்குரிய வழிகளைத் தேடவேண்டும்.

நாம் முஸ்லீம் லீக்கில் அங்கத்தினர்களாகவும், முஸ்லீம் கள் நம் இயக்கத்தில் மெம்பர்களாகவுமிருக்க வேண்டியது அவசியம். இருவர் மதங்களும் ஒரே கடவுளேயென்ற கோட்பாடுடையது என்பது திராவிட ஆதிமதக்கொள்கை தென்னாட்டு திராவிடர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உணவும் பொதுவாகவே இருந்து வந்தது. அதாவது மாமிச மில்லா உணவு. மாமிச உணவு குளிர்ச்சியான நாடுகளில் வசிப்பவர்க்கு ஏற்பட்டது. உஷ்ணதேசங்களிலுள்ளவர் களுக்கு அது தேவை இல்லையென்பது, தெரிந்த விஷயமே. பழக்க வழக்கங்களால் இப்போது சகலரும் மாமிச உணவை கையாளுகிறார்கள். இன்நிலைமையில் சைவபோஜனம் பொதுவுணவாகவும், மாமிச உணவும் தனிப்பட்ட நிலைமை யிலும் வைத்துக் கொள்ளவேண்டுமே தவிர இந்த மாமிச உணவு கொள்வோரை பிரித்து நினைக்கவும் கூடாது, அத னால் குறை கூறவும் கூடாது.

தமிழ் மொழி

15. நம் தமிழ் சமஸ்கிருதத்தைப்போல classical language என்பதை கவர்மெண்டார் ஒப்புக் கொண்டு classical language வேண்டும் என்னும் இடங்களெல்லாம் தமிழ் சமஸ்கிருதத்தை விட மேலானதால் தமிழ் classical language தான் என்று அவர்களை ஒப்புக்கொள்ளும்படி செய்து சட்டங்களைத் திருத்தியமைக்கும்படி செய்ய வேண்டும்.

நமது ஸ்தாபனம்

17. முஸ்லிம்களுக்கு எப்படி லீக் சுயஸ்தாபனமோ அவ் விதமே திராவிடர்களுக்கு தெ.இ. ந.உ.ச. தான் ஸ்தாபனமே ஒழிய காங்கிரசுக்கு திராவிடனைப் பற்றிப் பேச யோக்கியதை கிடையாதென்பதை சர்க்கார் ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டும். திராவிடர்கள் இடம், பொருள் ஏவல்களைப் பற்றிப்பேச ஆரியர்க்குரிமையில்லை என்பதை சர்க்கார் உணரும்படி செய்ய வேண்டும்.

எதிர்க்க வேண்டியவைகள்

18. கதர், வார்தா திட்டம், இந்திக்கல்வி, வேண்டா வரிகள், (விற்பனை, புகையிலை, வரி) முதலியவைகளை எதிர்த்துப் போராட வேண்டும். கடையடைப்பு வேலை நிறுத்தம், சத்தியாக்கிரகம், மறியல் முதலியன சண்டித்தனமென்பதற்கு மறு பெயரே ஒழிய வேறில்லையாதலால் அதில் பாமர ஜனங் கள் ஈடுபடாமலிருக்க நற்போதனை செய்தும் மேற்கண்டவை களை நடக்கவொட்டாமலும் எதிர்க்க வேண்டியது.

(தொடரும்)

- விடுதலை: 19.5.1940

9.3.2020 அன்றைய தொடர்ச்சி

சர்க்கார் வேலை

19. சர்க்கார் சம்பந்தமான துறைகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அனுசரித்து வேலை கொடுக்க வேண்டு மென்னும் சட்டமிருந்தும் அது சரியாக அமுலில் நடை பெறாததின் காரணம் ஆரியர்கள் அதிகார வர்க்கத்தில் உயர்ந்த பீடத்திலிருப்பதேயாகும். எனவே மேற்படி சட்டத் தைச் சரியாய் அமுலுக்குக் கொண்டு வரும்படி கவர்ன் மெண்டாரை அடிக்கடி தூண்டிக்கொண்டேயிருக்கவேண்டும்.

வாசகசாலைகள்

20. ஒவ்வொரு ஜில்லாக்களின் தலைநகர்களில் நமது கட்சிக்கு ஒர் சொந்தக்கட்டிடம் கட்டி அதில் நம் தினசரிகளையும் பிரசுரங்களையும் பரவச் செய்தும் மனிதனுக்கு அறிவை வளர்க்கக்கூடியதும், நம் சமூகத்தை மேம்படக் காட்டக்கூடியது மான புத்தகங்களை நிரப்பி இலவச வாசகசாலை ஏற்படுத்த வேண்டும். தற்சமயம் கூடிய சீக்கிரம் ஜில்லாக்கள் தோறும் ஓர் வாடகைக் கட்டிடத்திலாவது ஏற்படுத்த வேண்டும். அதைப் பொறுப்பாக நடத்தக் கூடியவர்கள், பெரிய வீட்டுக் கரர்கள் பணக்கார்கள் என்னும் யோக்கியதைக்கல்லாமல் கட்சி அபிவிருத்தியும் சமூக நன்மையையும் கருதக்கூடியவர் களாகப் பார்த்துத் தெரிந்து அப்பேர்ப்பட்டவர்கள் வசம் நிருவாகம் ஒப்புவித்து நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மடாதிபதிகள்

21. நம் மடாதிபதிகள் அனைவரும் ஆரியர்கள் வசம் சிக்கி தங்கள் சுயமரியாதையை இழந்து அவர்கள் (ஆரியர்கள்) ஆட்டிவைக்கும் பாவைகளாக இருந்துவருவதோடல்லாமல் நமது சமூகத்திற்கும் விரோத மனப்பான்மை கொண்டு தாறு மாறான வழியில் நடப்பதினால் அவர்களை ஆரிய மாயையிலிருந்து விடுவித்து நம் சமூகத் திற்கு பேருதவி செய்யக்கூடியவர்களாக ஆக்கமுயலவேண்டும். அவர்கள் இப்போது தலைவர்களாக இருக்கிறவர்கள் போக இனி அப்பதவிக்கு வருகிறவர்கள், கல்வியறிவிற் சிறந்தவர் களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும், தாய்மொழிப் பற்றுமுடையவர் களாகயிருப்பவர்களைத் தெரிந்தெடுக்கச் செய்யவேண்டும். மேலைக்காவது இவர்களால் பொதுவாய் மனித சமூகத்திற்கும், குறிப்பாய் நம் சமூகத்திற்கும் பல நன்மைகள் ஏற்பட சக்தியுடையவர்களாக்க வேண்டும்.  அவர் களுக்கு நாமும் அவர்கள் மேன்மைக்குரிய மதிப்பைக்கொடுத்து அவர்களைக் கவுரவப்படுத்துவதோடு நாமும் அவர்களால் கவுரவம் அடைய வேண்டும். காலத்தையனுசரித்து அவர் களுக்கு சட்டம் மூலமாய் சில சவுகரியங்கள் (வாகனம் முதலிய வைகள்) செய்துகொடுத்து அவர்கள் பதிலுக்கு நமக்கும் பிரதியாக சில சவுகரியங்கள். செய்யும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். நாளடைவில் பின் பட்டத்திற்குரியவர்கள் இன் னின்ன பொறுப்பு கல்வி, திறமையுடையவர்களாக இருக்க வேண்டுமென்று திட்டம் செய்து  அவ்விதமுடையவர்களே பலரில், ஒருவரை பொது மக்களே தெரிந்தெடுக்கும்படி செய்ய வேண்டும்.

இந்துமத பரிபாலனச் சட்டம்

22. இந்துமத பரிபாலன சட்டத்தை முழுவதையும் சீர்திருத்தியமைக்க வேண்டும். பனகால் அரசர் செய்ததை மாற்றக்கூடாதென்று போராடுவது சரியல்ல. இப்போது பனகால் இருந்தால் அவரே அதை மாற்றியமைக்க. வேண்டுமென்று தானே ஓர் சீர்திருத்தம் கொண்டுவந்திருப்பார். தற்போது மத விஷய ஞானமில்லாதவர்கள் சிலர் போர்டு மெம்பர்களாய் இருப்பதால் அவர்களுக்குச் சில விஷயங்களை எடுத்துச் சொன்னாலும் செவியில் ஏறுகிறதில்லை. மேலும் பரம்பரைத் தர்ம கர்த்தாக்கள் எல்லோரும் தவறுதலாகவே நடக்கிறார் களென்று கருதி அவர்களை இம்சைப்படுத்துவதுதான் தாங்கள் செய்ய வேண்டிய காரியமென்பதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கருத்தில் இல்லை என்பதை அவர்கள் செயல் காட்டுகின்றது. கோர்ட் நடவடிக்கைகளில் போர்டு வாதி, பிரதிவாதியாக இருந்து கேஸ் நடத்தி தோற்றாலும், ஜெயித்தாலும் போர்டாரிடம் செலவு தொகை வசூலிக்கக் கூடாது என்று சட்டமிட்டு (போர்டு நியாயத்தப்பாய்ப் போனாலும்) வைத்திருக்கும் நம் கட்சிக்காரர் ஞிமீதீt ஸிமீறீuயீ ஙிவீறீறீ கடன் மசோதாச் சட்டம் மக்களைக் கஷ்டப்படுத்துகிறதென்று சொல்வதற்கு நாவுண்டா? போர்டாருக்கும் கட்டளைக் கார ருக்கும் சச்சரவு இல்லாமலிருக்க வேண்டுமானால் திட்டப்படி உள்ள தருமத்தை கட்டளைக்காரர்கள் கட்டாயம் நடத்தக் கடமைப்பட்டவர் களென்றும் மற்ற எஞ்சிய மீதிக்கட்டளை காரர்களுக்கேயொழிய போட்டாருக்கில்லை என்றும் கண்டிப் பாய் சட்டம் செய்தாலொழிய விவகாரம் ஓயாது. தமிழ்நாடு தமிழருக்கே என்பது போல் கட்டளைகள் கட்டளைக்காரருக்கே என்று விவகாரம் பண்ணுவதில் என்ன குற்றமிருக்கின்றது.

தமிழ்ப் புலவர்கள்

23. தமிழ் தோன்றிய காலம் தொட்டு தமிழ்ப் பெரும் புலவர்கள் எல்லாம் திராவிடர்களே. உதாரணம், திருவள்ளுவர் கம்பர், அவ்வை, புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலியவர்கள் இன்னும் தமிழ்ப் புலமையில் தலை சிறந்து விளங்குபவர்கள் திராவிடர்களே. கவிராயர் மகன் கவிராயர் என்னும் வழக்கு திராவிட சமூகத்தை தவிர ஆரியர்களிடையே கிடையாது, நம்மவர்களுக்கு புலமைத் தொழில் வம்ச பரம்பரையாகவே அருளாய் எற்பட்டு "குலவித்தை கல்லாமலே" என்றபடி தற்காலமும் தோன்றி புலமை நடத்திவருகிறார்கள், அவ்வித மிருந்தும் சர்க்காரால் வழங்கப்படும் மகா மகோபாத்தியாயப் பட்டம்" திராவிடர் ஒருவர்க்கேனும் கொடுக்கப்படவில்லை என்பது விசனிக்கத்தக்கதே,  தற்போது பட்டம் பெற்ற ஆரிய ரொருவர் திராவிடப் பெரும்புலவரொருவரின் மாணாக்கரே என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கெல்லாம் காரணம் நம்மவர் களுக்குத் தமிழில் ஆர்வமில்லாததுதான். இனி மேலாவது நம் புலவர்களுக்கெனப் பட்டமளிக்க வேண்டுமெனச் சர்க் காரை வேண்டிக்கொள்வதுடனல்லாமல் இன்னும் தொல் புலமைத் திறமுடன் முதுமை எய்தியிருக்கும் நம் புலவர் பெருமான் ஒருவருக்குக் கூடிய சீக்கிரம் மேற்படி பட்டம் கொடுத்து நாமெல்லோரும் மகிழும்படி சர்க்காரை வேண்டிக்கொள்ள வேண்டும். மற்றும் பட்டத்திற்குரிய எஞ்சிய புலவர்களையும் (ஏராளமாக இருக்கிறார்கள்) சர்க்கார் ஞாபகத்தில் வைத்து சமயம் தவற விடாமல் பட்டமளிக்கும்படி செய்ய வேண்டும்.

ஸ்தல ஸ்தாபனங்கள்

24, இப்போது ஸ்தல ஸ்தாபனங்கள் இருக்கும் சீர்கேட்டைக் கவனிக்கும்போது இவைகளையெல்லாம் அடியோடு ஒழித்து விடுவதே நலமெனச் சொல்லலாம். ஆனால், நமது கோரிக்கை யல்ல,  முதல் முதல் கட்சிப் பேய் ஸ்தல ஸ்தாபனங்களில் தாண்டவமாடக் கூடாது. ராஜீய விஷயங்களைப் பற்றியோ அல்லது அதன் சாயல் கொண்ட விஷயங்களையோ காரியங் களையோ ஸ்தல ஸ்தாபனங்களில் புகுத்தக்கூடாது. நம் கட்சி பலத்திற்கு வரும் காலத்திலும் இதைவிட்டு நழுவக் கூடாது. ஸ்தலஸ்தாபனத் தலைவர் சர்வாதிகாரியுமாயிருக்கக் கூடாது. அவர் பைசாக் கடனேனும் பிறருக்குக் கொடுக்கக் கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது,  இவ்விதமிருப்பின் அவர் லஞ்சம் வாங்கவும், கடன் உதவியவருக்கு சலுகைகாட்ட வேண்டியதும் திட்டமாய் ஏற்படும். அன்னவர் அப்பதவிக்கு உதவாது. மேலும் தலைவராக உள்ளவர் ஆங்கிலம் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலக் கல்வியில் பட்டம் பெற்றவர் தானிருக்க வேண்டுமென்பது கருத்தல்ல உத்தியோகத்தைக் கண்ணியமாய் நடத்தும் திறமை யுடையவராக இருக்க வேண்டும். எல்லாக்கட்சியாரையும் சமமாக நினைப்பவராக வேண்டும். ஜனங்களிடையே பரந்த செல் வாக்கும், (நன்மதிப்பு), உள்ளவராயிருக்க வேண்டும். பொதுஜன கஷ்ட நஷ்டங்களை நன்றாய் அறியும் திறமை யுடையவராகவும், தன் சுயமரியாதையைக் கிஞ்சித்தேனும் விட்டுக் கொடுக்காத நிலையுடையவராகவுமிருக்க வேண்டும்.

சிறிது காலத்திற்கு முன் ஸ்தலஸ்தாபனங்களின் தலைவர் களில் பலர் பெரும் பணக்காரர்களாயும் அவர்களினது பணம் முழுவதையும் விழுங்கக் கூடிய கடனுடையவர் களாயுமி ருந்தார்கள். இவர்களால் ஸ்தலஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட கெடுதி கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் செய்த கெடுதிகள் இன்றும் பசு மரத்தாணி போல் மேற்படி ஸ்தாபனங்களில் பார்க்கக் காணலாம் இவர்களிலும் பலர் நம்கட்சிப் பேரைச்சொல்லி வந்தவர்கள். இவர்கள் பதவிவகித்த காலம் தொட்டுத்தான் நம்கட்சி சீரழியத்தொடங்கியது. இவர்களால் சமூகத்திற்கும் அளவிறந்தகெடுதி உண்டாயிற்று. இவர்கள் தாங்களும் கெட்டு கட்சியையும் அழிநிலையில் கொண்டு வந்துவிட்டு "ஏறிய ஏணியை உதைப்பது போல் எக்கட்சியால் தங்கள் கடன்பாரங்களை நீக்கினார்களோ அக்கட்சியைப் படுகுழியில் தள்ளிவிட்டு எதிர்க்கட்சி யாரிடம் அடிபணிந்து பிச்சையேற்று அன்றும் இன்றும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை யுடைய மனிதனொருவனுக்கு இவர்களும் மனிதர்களா" என்கின்ற எண்ணம் உண்டாகின்றது. "தீயார் குணங்களுரைப் பதுவும் தீதே" என்பது ஞாபகத்திற்கு வருவதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

- விடுதலை: 20.6.1940

(தொடரும்)

11.3.2020 அன்றைய தொடர்ச்சி

மதுவிலக்குப் புரட்டு

25. இது ஆச்சாரியார் உலகில் ஓர் போலிப் பெயரெடுத்துக் கொள்ள உண்டு பண்ணிய ஓர் தந்திரம். வடநாட்டார் செய்ய முடியாததை தென் நாட்டில் தான் சாதித்துவிட்டதாகக் காட்டி வடநாட்டில் தனக்குப் போதிய செல்வாக்கு உண்டு பண்ணிக் கொள்வதற்கான யோசனை. இதை எதிர்ப்பவர் மீது பெரும்பழி சுமத்த தேடிக்கொண்ட உபாயம். வாஸ்தவத்தில்  ஆச்சாரியார் மதுவிலக்கு அவசியமேற்படவேண்டுமென்று நினைத்தால் முதல் முதல் காங்கிரஸ் மெம்பர்களில் குடிப்பவர்களை அடியோடு விலக்க வேண்டியதவசிய மல்லவா? அவ்விதம் செய்ய அவர் வரிந்து கட்டி முன் வருவாரா காங்கிரஸ்காரர்களில் குடிப்பவர்களை எப்படித் தெரிவதென்று அவர் கேட்பாரானால் தனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் குடிப்பவர்கள் தானே தனக்கு நன்கு தெரிந்திருப்பவர்களையாவது இக்காரணம் கொண்டு களைவாரா? முன்பு காங்கிரஸ் சர்க்கார் நடக்கும் பொழுதும் தற்போது காங்கிரசிலும் பெரிய பதவிகள் வகித்துக் கொண்டிருந்தவர்களும் இருக்கிறவர்களும் குடிக்கிறவர் கள்தான் என்று நாட்டில் உலவும் வதந்தி தனக்குத் தெரியா தென கையில் கீதையுடன் நெஞ்சில் கை வைத்து கனமாயிருந்த ஆச்சாரியார் கூறுவாரா! அல்லது அவர் சம்மந்தியான காந்தியார் தான் உபநிஷத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுவாரா! இவர்கள் தங்கள் வீட்டைச் சுத்தமிட்ட பிறகல்லவா மற்றவர்களைப் புனிதமாக்க வேண்டும்.

குடியை நாட்டை விட்டு விலக்குவதில் பிரியப்படாதவர் களில்லை. ஆனால் அதை விலக்கவேண்டிய வழி இதுவல்ல. ஒரு காரியத்தைச் செய்வதற்காக பல நற்காரியங்கள் நடக்கவொட்டாமல் தடுப்பதா?

ஜனங்களிடை பிரசாரத்தைச் செய்து ஜனங்கள் தாங்கள் சொல்வதையே தெய்வ வாக்காக நினைக்கிறார்கள் என்று சொல்லிப்பெருமையடித்துக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் பிரசாரத்தினாலேயே மதுவிலக்கை நீக்கியிருக்கலாமே. எத்தனையோ வர்ணப்பெட்டிகளிருக்க காங்கிரஸ்காரர்கள் சொன்னதும் வேதவாக்காகக் கொண்டு மஞ்சள் பெட்டியில் ஓட்டைப் போட்ட ஜனங்களை, கள்ளுக்கடைகள் எத்தனையிருந்தாலும் போகவொட்டாமல் சொல்லித் தடுப்பதென்ன பெரிதா? வேண்டியபோது "பெய்யெனப் பெய்யு மழை" எனச் சொல்லிய காங்கிரஸ்காரர்களுக்கு சாதிக்க முடியாதது என்ன இருக்கிறது. நிற்க.

மதுவிலக்கினால் சர்க்காருக்குப் பணம், நஷ்டமாகி விட்டதால் பணக்குறைவால் பள்ளிக்கூடங்களையும் சுகாதார வசதிகளையும் இன்னும் இது  போன்றவைகளையும் கெடுத்து மதுவிலக்கு வெற்றிபெறச் செய்வது ஒழுங்கான ஆளு முறையைக் கைக் கொண்ட அரசாங்கம் செய்யும் காரியமல்ல. மேல் கண்ட வசதிகள் செய்யவேண்டுமானால் அதற்காகப் புதிய வரிகளைப் போடு வதில் மூளை செலுத்துவதும் அழகல்ல. ஆகவே நாளடைவில் அதற்குரிய வழிகளை யோசித்துச் செய்ய வேண்டுமாகையால் உடனே மேற்படி சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும். மூடியிருக்கும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும்.

நம் சித்த வைத்தியம்.

26. நம் நாட்டிற்கு பழமையாயுள்ளதும் வைத்தியங் களெல்லாவற்றிலும் மிக மேன்மையுடையதும் சித்த வைத்தியமே, தற்கால நவீன (Allopathic - Homes Pathic) வைத்தியங்களில் புதிதாய்க் கண்டு பிடிக்கப்படும். சில வியாதிக் கூறுகளையும், சிகிச்சை, விஷயங்களையும், வைட்டமின் A B C D. முதலிய உணவு தாதுப் பொருள்களையும் முன்னமே ஒளிவுபடுத்தி விளக்கிக் காட்டியும் மக்களில் சிறந்த அறிவுடையவர்களே அதைக் கற்க வேண்டுமென்றும் கருத்தடங்கிய மொழிகளை உடையதும் எல்லாவற்றிற்கும் மேலாக ஸிமீழீuஸ்மீஸீணீtவீஷீஸீ என்னும் தற்கால "வாலிபம் திரும்பல்'' என்பதை அதைவிட ஓர்படி மேலாக "சாகாதிருத்தல்' என்னும் பெயர் கொண்ட "கற்ப சாதனம்" என்னும் உயர்தர மருந்துகளையும் கொண்டதாக இருக்கிறது.

மேலும் ஆயுர்வேதமென்பது ஆரியர்களால் செய்யப் படும் வைத்தியம். அது அவர்கள் சிந்து நதிக்கரையிலும் கங்கைக் கரையிலுமுள்ள மூலிகைகளைக் கொண்டு அவர்கள் வசித்தநாட்டின் சீதோஷ்ண ஸ்திதிக்குத் தக்கபடி தயாரிக்கப் பட்டுள்ளன. சித்த வைத்தியமோ நம் திராவிட நாட்டிலுள்ள மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் இந்நாட்டாருக்கு இதுவே ஏற்றது.

சித்த வைத்தியம், ஆரியர்களின் கொடுமையால் அநேக நற்காரியங்கள் நசுக்குண்டது போல் இதுவும் நசுக்குண்டு போயிற்று.எனினும் இடைஇடையே இதை ஆராய்ச்சி பண்ணி அந்த பெரியவர்களினால், முழுதும் நாசமாகவிடாமல் காப்பாற்றப்பட்டது. பரம்பரையாக சிலகுடும்பங்களில் இதையே தொழிலாகக் கொண்டு நடத்திய ஆச்சரியப்படும் படியான குணாசக்தி சித்தவைத்தியத்திற்குண்டென்பதை இடையே அடிக்கடி காட்டிக்கொண்டு வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். இவ்விதப்புகழுடைய அரியவைத்தியத்தைக் கைகழுவவிடக்கூடாது.

சித்த வைத்திய சம்மந்தமான ஓலைச்சுவடிகளெல்லாம் ஒருங்கு சேர்த்து தகுந்தவர்களைக் கொண்டு சரிபார்த்து அச்சியற்றி அவைகளை பழியாமல் காக்க வேண்டும். இதற்கு சர்க்கார் உதவி தேடுவதற்குள் காலங்கடந்துவிடும். பொதுநிதி யிலிருந்தே இவ்வரிய கல்வியை அழியாமல் தடுக்கும் படி வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறந்த தருமம்

உலகத்தில் மானிடர்க் குற்றபிணியைப் போக்கி அவர்களை நெடுநாள் ஜீவித்திருக்கும்படி செய்வதைத் தவிர சிறந்த தருமம் வேறென்ன? இதையே மேல் நாட்டார் கண்ணும் கருத்துமாய் செய்து வருகிறார்கள். மேல் நாட்டார் தங்களின் சமூகம் 100க்கு 90-95 வயதுடையவர்களாக ஆக்கிக் கொண்டு போகப்பார்க்கிறார்கள். நம் நாட்டிலோ சராசரி 100க்கு 25 வயதாகத் குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுத்து நிவர்த்தி செய்ய முயல வேண்டாமா?

எனது தாழ்மைபான அபிப்பிராயத்தில் சித்தவைத்தியம் தகுந்த ஆராய்ச்சியாளரைக் கொண்டு ஆராய்ச்சி பண்ணி தற்கால முறைகளினால் கிடைக்கும் யந்திர உதவிகளைக் கொண்டு மருந்துகள் தயார் செய்து நாடெங்கும் பரவச் செய்தால் மேற்சொன்ன காரியங்களெல்லாம் சாதிப்பதோடல் லாமல் சித்தவைத்தியமும் பூலோகபுகழுடன் International Frame விளங்குமென்பது திண்ணம். இதன் பெருமைகளை விளக்கிக்காட்டினால் மேல் நாட்டாராகிய இங்கிலீஷ், ஜெர்மன், பிரஞ்சுக்காரர்களும் இதில் ஈடுபட்டு நம்முடன் ஒத்துழைத்து நமக்கு மேன்மை தேடிக்கொடுப்பதோடல்லாமல் அவர்கள் நாட்டிலும் இதைப் பரவச்செய்வார்கள்.

இந்த சித்த வைத்தியத்தில் அவ்வளவு மேன்மையிருக்கிறது. நம் தமிழ் பாஷைக்கடுத்த (Lagacy) வரப் பிரசாதம் நம் சித்த வைத்தியம் தானென்று சொன்னால் மிகையாகாது. இதற்கு போதிய ஆதரவு கொடுக்க வேண்டுமென்று மற்றும் ஓர்முறை வற்புறுத்துகின்றேன்.

"தமிழ்நாடு தமிழருக்கே "

- விடுதலை: 20.6.1940

- விடுதலை நாளேடு 13. 3 .20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக