வெள்ளி, 13 மார்ச், 2020

சமஸ்கிருதம் உயிருள்ளதா?

குடிஅரசு,  08.09.1940-லிருந்து...

இந்தி மொழி கட்டாயப் பாடமாக திராவிட நாட்டில், காங்கிரஸ் (ஆரிய) மந்திரிகளால் புகுத்தப்பட்ட காலையில், இந்தி ஆரிய வர்க்க மொழியென்றும், அம்மொழி கட்டாயப் பாடமாக சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுமேயாகில், திராவிடச் சிறுவர்கள், எதிர் காலத்தில், திராவிடக் கலை, நாகரிகம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளை மறந்து ஆரியத்திற்கே அடிமையாய் விடுவார்கள் என்றும், மக்களின் வாழ்க்கையைத் திருத்துவதற்கு ஒரு ஒழுங்குபடுத்துவதற்கு கல்வியைத் திருத்தியமைத்தால் போதும் என்றும், அதை இன்று ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கண்கூடாகப் பார்க்கலாம் என்றும், எனவே, இந்திமொழி கட்டாயப் பாடமாக புகுத்தக்கூடாதென்று கூறி மறுத்து வந்தது எவ்வளவு உண்மையானது என்பதை  சமீபகாலமாக இந்(திராவிட) நாட்டிலுள்ள ஆரிய வர்க்கத்தினர் சாஸ்திரிகளும், ஆச்சாரிகளும் பேசிவருவதும், அறிக்கைகள் விடுவதும் நன்கு விளக்கும்.

ஆரிய ஆதிக்கத்தை ஆரிய செல்வாக்கை இந்நாட்டை விட்டு விரட்டியடிக்க, குழி தோண்டிப் புதைக்க திராவிடர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தூங்கினவன் தொடையில் கயிறு திரிப்பது இனி செல்லாது என்பதை உணர்ந்துதான் ஆரிய வர்க்கத்தார், அதை நிலைநிறுத்த வேறு வழி செய்தால் பலிக்காது என்று கருதி மொழியின் மூலமாக இஞ்சக்‌ஷன் செய்ய முனைந்திருக்கின்றனர்.

நாம் ஒன்று மிகைப்படுத்தியோ, அல்லது அவர்களைப் போல் கற்பனை செய்தோ கூறுவதாக யாரும் கருதவேண்டிய தில்லை. நாம் சொல்வது எவ்வளவு ஆதாரமுடைய தென்பது இந்நாட்டில் பத்திரிகைகள் படிப்போர்களுக்கு நன்கு தெரியவரும். அவர்கள் ஒரு நாளும் நாம் சொல்வதை மறுக்க முன்வரார் என்றே கருதுகிறோம். உதாரணத்திற்காக இரண் டொருவர் பேசியதை மட்டும் எடுத்துக் காட்டினால் வாசகர்கள் உண்மையை உணர்ந்துகொள்ள முடியுமெனக் கருதுகிறோம். சென்ற 2ஆம் தேதி சென்னையில் பச்சை யப்பன் கல்லூரி சமஸ்கிருத மாணவர் சங்க ஆதரவில் நடை பெற்ற ஒரு கூட்டத்தில் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் பேசுகை யில், “தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஏற்பட்டதினால்தான் வளர்ச்சியும் பெருமையும் ஏற்பட்டதென்று நான் கூறுவேன்” என்று கூறியிருக்கிறார்.

நியாயப்படி இவர் சொல்லியிருக்க வேண்டியது, “தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஏற்பட்டதினால்தான் இழிவும், சிறுமையும் ஏற்பட்டிருக்கிறதென நான் கூறுவேன்” என்பதாகும். இதற்குத்தான் என்று கட்டாய இந்திப் போர் இந்நாட்டில்  துவக்கப்பட்டதோ அன்று முதல் நாளது வரை சமஸ்கிருத மொழியால், தமிழ் மொழி எந்தெந்த வகைகளில் வளர்ச்சி குன்றி பெருமையிழந்து சிறுமையுற்றிருக்கிறதென்று ஆதாரங்களுடன் தமிழ்ப் பேராசிரியர்கள் முதல் பண்டிதர்கள் ஈறாகக் கட்டுரைகள் வெளியிட்டும், பிரசுரங்கள் பிரசுரித்தும், வாதங்கள் நடத்தியும் வந்திருக்கின்றனர் என்பதை வாசகர் கள் இதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

சமஸ்கிருத சம்பந்தத்தினால்தான் தமிழ் மக்களை, ஒரு சாதாரண கலியாணப் பத்திரிகையைக் கூட சமஸ்கிருத மொழிக் கலப்பில்லாமல் எழுதமுடியாத நிலைக்குக் கொண்டு வந்து விட்டதென்றால், இதை யாரும் மறுக்க முன்வருவார் என்று நாம் நம்பவில்லை. இத்தகைய நிலைமை உலகில் வேறு எந்நாட்டிலேனும் இருப்பதாக இவர் சொல்ல முன் வருவாரா என்று கேட்கிறோம். ஒரு ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் கலியாணப் பத்திரிகையை எழுதவும், ஒரு பிரஞ்சுக்காரன் பிரஞ்சு மொழியில் எழுதவும், ஒரு ஜப்பானியன் ஜப்பானிய மொழியில் எழுதவும் முடியாத நிலையிலும் இருக்கிறானா என்று எடுத்துக்காட்ட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

இன்று பள்ளிக் கூடங்களில், கணிதம். பூகோளம், சரித்திரம், ரசாயனம், பவுதிகம் ஆகியவைகளில் வழக்கி லிருந்து வரும் எண்ணற்ற சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று எந்த தமிழ் மகனாவது  ஒப்புக்கொள்வானா என்று கேட் கிறோம். இவை களுக்கு தமிழ் மொழியில் சொற்கள் இல்லாது ஒழிந்துவிட்டனவா? இல்லை. எல்லாவற்றிற்கும் இருக் கின்றன. அப்படியிருந்தும் ஏன் சமஸ்கிருத மொழிச்சொற் களை உபயோகித்து வருகின்றனர் என்றால், சமஸ்கிருத மொழிக்கு உயிரைக் கொடுத்து தமிழ்ச் சொற்களை வழக்கிலி ருந்து மறையச் செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சியைத் தவிர, வேறு என்னவாயிருக்க முடியும் என்று கேட்கிறோம்.

இவ்வாறு தமிழ் மொழியின் சொற்களை சொல் வழக்கிலிருந்து மறையச் செய்து அவ்வெழுத்துக் கொண்ட சமஸ்கிருத மொழிச் சொற்களை வளர்ப்பதுதான் தமிழ் மொழி வளர்ச்சியடைவதும் பெருமையடைவதும் என்ப தற்கு அறிகுறியா என்று கேட்கிறோம்.

எனவே, சமஸ்கிருதமொழிக் கலப்பால் தமிழ்மொழி எவ்வகையிலும் வளர்ச்சி பெறவோ, பெருமையடையவோ இல்லையென்பதும் அதற்கு மாறாக தமிழ் மொழி சிதைவுற்று அதன் பண்டைய பெருமையெல்லாம் அழிவுற்றுமிருக்கிறது என்பதும் விளங்கும்.

ஒரு மொழி, மற்றொரு மொழியுடன் சம்பந்தம் கொள்வதால் சம்பந்தம் கொள்ளும் மொழி கேடுறாது, சிதைவுறாது என்று கூறும் மூர்த்தியாருக்கு இரண்டு மொழிகளைக் குறித்து எவ்வளவு ஞானம் - அறிவு இருக்கிறது என்று முதலில் ஒரு வினா எழும். அந்த வினாவுக்கு  அவரது பேச்சிலே விடையிருக்கிறது. அதாவது, “நான் தமிழில் ஒரு நூல்கூட வாசித்ததில்லை. சில நாவல்கள் மட்டுமே படித்திருக்கிறேன். சமஸ்கிருதத்தில் எனக்கு கொஞ்சம் பரிச்சயம் உண்டு” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது செப்டம்பர் 3 ஆம் தேதிய சுதேசமித்திரன் 5 ஆம் பக்கம்  3 ஆம் கலம் தலைப்பிலிருந்து 9 ஆம் வரியிலிருந்து 4, 5 வரிகளில் காணக்கிடக்கிறது.

எனவே, ஒரு மொழியின் கலப்பால் மற்றொரு மொழி கெடாது என்று கூறும் - வாதிக்கும் வாதம் நியாயமானதா நியாயமற்றதா என்பது ஒரு புறமிருந்தாலும் வாதிக்க அவருக்கு அருகதையிருக்கிறதா என்பதை முடிவு கட்டும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம். இவ்வாறு, முன்னுக்குப்பின் சம்பந்தமில்லாமல் பேசிவருகிறார்களே, அதையும்  பத்திரிகை களில் பிரசுரித்து வருகிறார்களே யென்றால், அது நம்மவர்களின் ஏமாளித்தனத்தை அல்லாது வேறு எதைக் காட்டுகிறதென்று கேட்கிறோம். ‘தட்டிக்கேட்க ஆள் இல்லையேல் தம்பி சண்டப்பிரசண்டன்தான்’ என்று நாட்டிலே சொல்லுவார்கள். அவ்வாக்கு இன்று இவர்களுக்குத் தான் பொருத்தமாயிருக்கிறது. இவ்வாறு முரணாகப் பேசிவருவதை இமைகொட்டாமல் மக்கள் கேட்டுக் கொண்டிருந்த தினால்தான் சிறிதும் சரித்திரத்திற்கும் உண்மைக்கும் மாறாக கம்பன் சமஸ்கிருதத்தில் சிறந்த பண்டிதர் எனக் கூறியிருக்கிறார்.

கம்பன் சிறந்த சமஸ்கிருத பண்டிதர் என்று எந்த ஆதாரத்தின் மீது மூர்த்தியார் கூறுகிறாரோ நாமறியோம். கம்பனுக்கு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்த இராமாயணத்தை சமஸ்கிருத பண்டிதர்கள் வாசித்து விளக்க, அதைக் கேட்டு கம்பர் தமிழில் எழுதினார் என்று இராமாயணத்திலே சான்று இருக்கிறது. அதை மூர்த்தியார் பார்த்ததில்லையா? எவ்வாறு பார்த்திருக்க முடியும்? அவருக்குத்தான் தமிழில் சில நாவல்களைத் தவிர, வேறு எந்த நூலும் தெரியாதே, அப்படியிருக்க, அதை அவர் எப்படி பார்த்திருக்க முடியும்?

தொடரும்....

- விடுதலை நாளேடு, 12.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக