• Viduthalai
மீண்டும் கோயில்கள் முன் வேண்டுகோள் அறப்போர்
28.8.2021 அன்றைய தொடர்ச்சி...
24.08.1982 அன்று கோயில்கள் முன் வேண்டுகோள் அறப்போரை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை கழகம் செய்துகொண்டிருந்தபோது, அதை திசை திருப்ப பார்ப்பனர்கள் பல்வேறு விஷமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள். ஆனால் அவற்றையெல்லாம் புறக்கணித்து தமிழர்களிடையே பேராதரவு ஏற்பட்டது. மலேசியா சென்று திரும்பிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் மகாராஜன் கமிட்டி அறிக்கையை அமலாக்கி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் கோயில்கள் முன் வேண்டுகோள் அறப்போர் நடத்த திராவிடர் கழகத்திற்கு முழு உரிமை உண்டு என்று பார்ப்பனர்களின் திசை திருப்பல்களுக்கு பதிலளித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “திராவிடர் கழகத்திற்கு தான் மற்ற இன, மத, கட்சி - அவர்களைவிட கோயில் தொடர்பான உரிமைகளிலும் உரிமை இழப்புகளிலும், சரியான முடிவெடுக்கும் தகுதி உண்டு. ஏனெனில், தமிழனின் உரிமைகளை எந்த நிலையிலும் எடுத்து முன்வைக்கின்ற கட்சி அவற்றுக்காக போராடுகின்ற கட்சி, அந்தவகையில் விருப்பு வெறுப்பற்ற பகுத்தறிவு கட்சி; அதாவது கடவுளைப் பற்றியும் அது தொடர்பான மதங்களைப் பற்றியும் கவலைப்படாத கட்சி - அவ்வாறு உள்ள கட்சி ஒன்றுதான் அவ்வகையில் ஏற்பட்ட இழப்புகளையும் தீமைகளையும் ஓரவஞ்சனைகளையும் சரியாக நடுநிலையுடன் கண்டுகொள்ள முடியும். எனவே, இவ்வகை போராட்டங்களை நடத்த திராவிடர் கழகத்திற்கு மட்டும்தான் முழு தகுதி உள்ளது. அது ஒன்றினால் தான் இது தொடர்பான நிலைகளில் போராடி உரிமைகளை மீட்டெடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை தமிழ்நாடு முழுவதும் தோழர்கள் துண்டறிக்கைகளாக பரப்பினர். அப்பொழுது திருவில்லிபுத்தூரில் துண்டறிக்கை விநியோகித்துக் கொண்டிருந்த தோழர் சங்கரலிங்கம் அவர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அதிமுகவினர் வெட்டினர்.
24.08.1982 அன்று திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் 35 கோயில்களின் முன்னால் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டு பக்தி தமிழர்கள் இன எழுச்சி பெற்று கோயிலுக்குள் செல்லாமலேயே திரும்பினார். எல்லா இடங்களிலும் பெண்களே தலைமை வகித்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று வேண்டுகோள் அறப்போரை நடத்தினார்.
அப்பொழுது பக்தர்கள், தாய்மார்கள், பலர் தேங்காய் பூ பழம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சாமி கும்பிட வந்தனர். அவர்களிடம் ஆசிரியர் அவர்கள், அம்மா கோயிலுக்குள் செல்லாதீர்கள்; நம்மையெல்லாம் தேவடியாள் மக்கள் என்று எழுதி வைத்துள்ளார்கள்; உங்களுக்கு பக்தி இருக்குமானால் இங்கேயே தேங்காயை உடையுங்கள் அல்லது தமிழன் பூசாரியாக இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள் என்று விளக்கம் அளித்து வேண்டுகோள் விடுத்தார். அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு கோயில் வாயிலிலேயே தேங்காய் உடைத்து தோழர்களுக்கு பழங்களைக் கொடுத்து மகிழ்ச்சியோடு திரும்பினர். இந்த நிகழ்ச்சிகள் கழகத் தோழர்கள் இடத்திலும் பொதுமக்கள் இடத்திலும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. அறப்போரின்போது பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி கலந்துகொண்டு ஆற்றிய உரையில்,
“இந்தப் பிறவி இழிவை ஒழிக்கத்தானே தந்தை பெரியார் கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் போராடினார். உலகிலேயே எந்த நாட்டிலாவது பிறக்கும்பொழுதே இழி மக்களாய்ப் பிறக்கின்றனரா? இந்து மதம் பிறந்த இந்த நாட்டில்தானே இந்தப் பிறவி இழிவு.
உலகிலேயே இந்த நாட்டில்தானே உழைக்காதவன் உயர்ஜாதி, உழைக்கின்றவன் கீழ்ஜாதி!
தமிழனுடைய ஒவ்வொரு உரிமையும் போராடித்தானே பெறப்பட்டு இருக்கிறது. அன்று வைக்கம் வீதிகளிலே நடக்க உரிமையைப் போராடி வாங்கிக் கொடுத்தார் தந்தை பெரியார்.
உண்டிச் சாலைகளிலே பார்ப்பனர்க்கு ஓர் இடம், இதராளுக்கு வேறொரு இடம் என்று இருந்ததே, அதனை எதிர்த்துப் போராடியவரும் தந்தை பெரியார்தான்!
படித்த வழக்குரைஞர்களுக்கிடையேகூட வேற்றுமை இருந்தது. அண்மைக்காலம் வரை வழக்குரைஞர் சங்க அலுவலகத்தில் (ஙிணீக்ஷீ கிssஷீநீவீணீtவீஷீஸீ) கூட பார்ப்பானுக்கு என்று தனித் தண்ணீர்ப் பானை இருந்ததுண்டு. இவை எல்லாம் மாற்றப் பெற்றது எப்படி? தந்தை பெரியார் போராட்டத்தால்தானே! உழைப்பால்தானே!
தோழர்களே! நம்முடைய உரிமை ஒவ்வொன்றும் போராடிப் பெறப்பட்டவை தானே தவிர உயர்ஜாதிப் பார்ப்பனரின் காருண்யத்தாலோ, மனமாற்றத்தாலோ அல்ல! அல்ல!
அன்றைக்கு நடக்க உரிமை, கற்க உரிமை, உத்தியோக உரிமைகளுக்கு எப்படி போராடினோமோ, அதுபோலவேதான் இன்றைக்குப் பார்ப்பானுக்கு கோயில் கருவறைக்குள் நுழைய இருக்கும் உரிமை நமக்கும் வேண்டும் என்று போராடுகிறோம்” என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை தந்தை பெரியார் அவர்கள் வென்று எடுத்த செய்திகளையே அன்று விளக்கிப் பேசினார்.
பல இடங்களில் வேண்டுகோள் அறப்போர் நடத்த தடை விதிக்கப்பட்டது. அந்த இடங்களில் எல்லாம் தடையை மீறி தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். சேலத்தில் 82 பேரும், தர்மபுரியில் 45 பேரும், வேலூரில் 25 பேரும், கிருஷ்ணகிரியில் 18 பேரும், திருச்செங்கோட்டில் 40 பேரும், கன்னியாகுமரியில் 14 பேரும், திருவண்ணாமலையில் 100 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டார்கள். பல இடங்களில் ஹிந்து முன்னணி காலிகள் கோயிலுக்குள் இருந்து குழப்பம் செய்ய முயன்று மக்கள் ஆதரவின்றி தோல்வியடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக