வியாழன், 2 செப்டம்பர், 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-13


நீதிபதி மகாராஜன் குழு பரிந்துரைகள்

அறப்போரைத் தொடர்ந்து நாம் நீண்ட காலமாக வலியுறுத்திய நீதிபதி மகராஜன் குழு அறிக்கை தமிழ்நாடு அரசு அரசாணை (பல்வகை) எண்: 1001 வணிகவரி மற்றும் அறநிலையத் துறை நாள்: 27.08.1982 தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள்

முடிப்புரை

(1) காலத்தின் தேவையை அனுசரித்து இராமாநுசர் போன்ற சமய ஆச்சாரியர்கள் ஆகம சாத்திர அனுஷ்டானத்தில் பெரு மாறுதல்களையும் சீர்திருத்தங்களையும் செய்திருக்கிறார்கள்,

(2) எதிர்ப்பு இருந்தும் கூட, தேவையை அனுசரித்தும், சமூக நலனையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டும், இந்திய அரசு ‘ஹிந்துலா'வில் சட்டத் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்திருக்கிறது.

(3) காலத்தின் தேவையை அனுசரித்தும், சமூக நலனையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசும் ஆகமத்திற்கு மாறுபட்ட சில சட்டங்களைச் செய்திருக்கிறது.

(4) இப்போது மத மாற்றமும் சமூகக் கிளர்ச்சியும் ஏற்பட்டு, இவற்றின் விளைவாய் வன்முறைச் செயல்களும் நிகழ்ந்திருப்பதால், மத ஒருமைப்பாட்டினை உருவாக்கும் பொருட்டு மேலும் சீர்திருத்தம் செய்ய ஓர் அவசியம் விளைந்திருக்கிறது. செய்யப்படும் சீர்திருத்தத்தால் ஆகம விதிகளுக்குப் பாதகமில்லை; ஏனெனில் பூசையிலும் சடங்குகளிலும் எந்தத் தலையீடும் இல்லை.

(5) ஏற்கெனவே பல ஆகம முரண்பாடுகள் தாமே எழுந்து, நடைமுறையில் உள்ளன. அவற்றால் புனிதம் கெட்டதாக யாரும் கருதியதில்லை. பிராயச்சித்தம் எங்கும் செய்யப்படுவதில்லை.

(6) எதிர்காலத்தில் பூசை சிறப்பாக நடைபெற வேண்டியும், மக்களின் ஈடுபாட்டைப் பெருக்க வேண்டியும் அர்ச்சகர் நியமனம் பிறவியின் அடிப்படையில் இல்லாது ஜாதி இன வேறுபாடு இன்றி, பணித் தகுதி அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்ற கருத்து கிரமமாக ஆகமத்துக்கு முரணாகாது என்பதே இவ்வல்லுநர் குழு எடுக்கும் தெளிவான முடிபாகும்.

பரிந்துரைகள்

காலத்தின் தேவையை அனுசரித்து அரசே அவ்வப்போது சமூக நலனுக்கும் மக்களுடைய ஆர்வத்துக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு சட்டப்பூர்வமான பல மாறுதல்களைச் செய்து வந்திருக்கிறது. அரிசன ஆலயப் பிரவேசம், தேவதாசி ஒழிப்பு என்பன ஆகம விதிகளுக்கு மாறாக இருந்த போதிலும் கூட, விதிகளை மாற்றிச் சட்டம் செய்ய அரசு தயங்கவில்லை. அதுபோலவே கோயில்களில் தெய்வத்தின் பெயரால் நிகழ்ந்து வந்த உயிர்ப்பலியை அரசு சட்டபூர்வமாக தடை செய்ததும், நெடுங்காலமாக நிலவி வந்த பழக்க வழக்கத்துக்கு மாறான ஒரு சிறந்த மாறுதலாகும்.

இவைகளனைத்தையும் சிந்துக்கள் வரவேற்றுள்ளனர். சிறப்பாக குடியாட்சி வந்த பிறகு மக்களுடைய நலனையும் வளர்ச்சியையும் கருதி, பால்ய விவாகத் தடை, பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை முதலான முன்னேற்றக் கருத்துகள் சட்ட பூர்வமாக “ஹிந்து - லா”வில் இடம் பெற்றன. இந்தச் சட்ட மாறுதல்கள் செய்யும்பொருட்டு ஹிந்து சமூகத்தில் எந்த விதக் கலவரமும் அமைதிக்குறைவும் ஏற்படாதபோதும், சமூகத் தேவையையும் சமூக நலனையும் மட்டும் கருதி இந்த சட்டங்கள் செய்யப்பட்டன. இவை, தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, இந்திய யூனியன் அரசும் செய்தவையாகும். வல்லுநர் குழு, மேற்சொன்ன இத்தனைக் கருத்துகளையும் ஊன்றி நோக்கி, அரசுக்கு பின் வரும் ஆலோசனைகளைப் பரிந்துரை செய்கிறது.

(1) தமிழ்நாட்டில் இந்து சமய வாழ்விற்கே அடிப்படையாக உள்ள ஆழ்வார் நாயன்மார்களுடைய பாசுரங்களையும், வாழ்க்கையையும், அவர்களுக்கு முன்னமே தொடங்கித் தொன்மையாக நிலவி வருகின்ற பண்பாட்டையும், சமய வரலாற்றையும், சமய இலக்கியங்கள் காட்டும் மெய்ப்பொருள் தத்துவங்களையும் கூர்ந்து சிந்திக்கும் போது, இன்றைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் ஹிந்து சமயம் சிறப்பாக வளரும் பொருட்டு, ஹிந்துக்களுக்கு ஜாதிவேறுபாடு இன்றித் தீவிரமான பயிற்சி அளித்துக் கோயில்களில் பூசகர்களாக நியமிப்பது ஆகமத்திற்கு மாறுபட்டதாகும் என்று கருதுவதற்கு இடமில்லை.

(2) (அ) செயல் திட்டம் என்ற பகுதியில் சொல்லப்பட்ட திட்டத்தின்படி அர்ச்சகராகத் தேர்ந் தெடுப்பவருக்கு அய்ந்தாண்டு கால தீவிரமான கல்விப் பயிற்சியும் செயல்முறை பயிற்சியும் அறநிலையத் துறையின் பொறுப்பில் அளிக்கவேண்டும்.

(ஆ) பயிற்சி சம்பந்தமாக சேர்க்கை விதிகள், பயிற்சிப் பாடத்திட்டம் , தேர்வுத் திட்டம், பாடப் புத்தகங்கள் முதலான அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்கு, அற நிலையத் துறை ஆகம சபை ஒன்றை நிறுவ வேண்டும்.

(இ) இப்போது நடந்து வருகின்ற ஆகமப் பாடசாலைகள் அனைத்தையும் ஒரே தரமான நிலைக்குக் கொண்டு வரும் பொருட்டு, அங்கு உள்ள சேர்க்கை முறை, கல்வி முறை தேர்வு முதலியன அனைத்து அம்சங்களையும் முன்கூறிய ஆகமசபை நிர்வகித்து வரவேண்டும்.

(ஈ) இப்போது பூசகராயுள்ளவர்களின் குடும்பங்களி லிருந்து வரும் மாணாக்கருக்கு ஆகமக் கல்லூரிச் சேர்க்கையில் கூடுமானவரை முன்னுரிமை அளிக்க வேண்டும்.

(உ) செயல் திட்டத்தில் கூறியபடி வெற்றிகர மாகத் தேர்வை முடித்து வருகின்ற அர்ச்சக மாணாக்கர்களுக்கு உடனே வேலைக்கும் தகுந்த ஊதியத்திற்கும் உறுதியளித்து, பிற எல்லா வசதிகளையும் செய்து தரவேண்டும்.

(ஊ) செயல் திட்டத்தில் கூறியுள்ளபடி அறநிலையத் துறை ஆகமநூல்களை உரையோடு வெளியிட்டு மாணாக்கருக்குத் தேவையான புத்தகங்களையும் அச்சிட்டுத் தரவேண்டும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக