*பிள்ளை* - *யார்?*
"புத்தர் ஜெயந்தி அன்று (மே 27)
பிள்ளையார் சிலையை உடைக்கலாம்", எனச் சிதம்பரம் அருகில் வடக்கு மாங்குடி என்ற ஊரில் பெரியார் அறிவித்தார்.
(28.04.1953)
கோயிலில் உள்ள பிள்ளையாரை
உடைக்க வேண்டாம்; சொந்தப் பணத்தில் மண்ணால் செய்து
உடைக்கவும் என்றார்! (விடுதலை
07.05.1953)
அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
"நாத்திகர்களிடம் இருந்து இந்த நாட்டைக் காக்கவும், அவர்களுக்கு அறிவு கொடுக்குமாறும் யானை முகனை வேண்டிக் கொள்ளுங்கள்", எனக் கேட்டுக் கொண்டார்.
குறிப்பிட்ட நாளில் பிள்ளையார் பொம்மைகள் உடைக்கப்பட்டன!
திருச்சியில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில்,
"புத்தர் போதனையும், பிள்ளையார் வணக்கச் சிறுமையும்" என்கிற தலைப்பில் பெரியார் உரையாற்றினார்.
இந்தப் போராட்டத்தில் தோழர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டனர். திருச்சி பெரியார் மாளிகையைக்
கொளுத்த முயன்றனர்!
சில இடங்களில் பெரியார் படத்தைக் கொளுத்தினர். "என் படத்தைக் கொளுத்த நானே ரூபாய் 50 தருகிறேன். அந்த இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம். என் படத்தைக் கொளுத்துவதால்
நான் செத்துவிட மாட்டேன்", என அறிக்கைக் கொடுத்து, இராஜாஜியின் ஆணவத்தை அடக்கினார் பெரியார்! (விடுதலை - 29.05.1953)
மதுரையில் திருவருள் நெறி மன்றத்தில், மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டிடம் போராட்டத்தை எதிர்த்து, திருச்சி வீரபத்திரர் என்பவர் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது!
பிள்ளையார் என்பது பொம்மை! அதில் சக்தியும் இல்லை; வெண்டைக்காயும் இல்லை என்பது நிரூபணம் செய்யப்பட்டது!
- கவிஞர் கலி.பூங்குன்றன்
(விடுதலை - 27.05.2010)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக