திங்கள், 18 மார்ச், 2019

வேலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் 6 அரிய தீர்மானங்கள்

அன்னை மணியம்மையார் பெயரில் சிறப்பு விருதினை தமிழ்நாடு அரசு அறிவித்திடுக!

வேலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் 6 அரிய தீர்மானங்கள்


* ஓராண்டு முழுவதும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா!

* 28 ஆண்டுகாலம் - சிறையில் வதியும் எழுவரையும் விடுதலை செய்க!

* 33 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெண்களுக்குக் கொண்டு வருக!

* லத்தேரி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மணியம்மையார் பெயரினைச் சூட்டுக!



வேலூர், மார்ச் 11 அன்னையார் நூற்றாண்டையொட்டி அன்னை மணியம்மையார் பெயரில் சிறப்பு விருதினை வழங்கவேண்டும் என்பது உள்பட ஆறு அரிய தீர்மானங்கள் வேலூரில் நடைபெற்ற ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் எண் 1:

ஓராண்டு முழுவதும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம்!


அன்னை மணியம்மையார் அவர்களின் நூற் றாண்டு விழாவை அவர்கள் பிறந்த இந்த வேலூரில் இன்று சிறப்பாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இதனை தொடர்ந்து ஓராண்டு முழுவதும் - பெண்ணுரிமை, பாலின சமத்துவம், பாலின வன்கொடுமை எதிர்ப்பு - தடுப்பு, நாடாளுமன்றத்தில் பெண்களுக்குக்கான இடஒதுக்கீடு சட்டம், பெண்களுக்கு 50 விழுக்காடு, பக்தி, சோதிடம், திருவிழாக்கள், போன்ற மூட சடங்குகளில் புத்தியும், பொருளையும், பொழுதையும் வீணடிப்பதில் இருந்து பெண்களை விடுதலை பெறச்செய்ய - மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், அறிவியல் சிந்தனையுடன் கூடிய விழிப்புணர்வுப் பணிகள், பெண்களுக்கிடையே சம உரிமைக்கு போராடும் எழுச்சியை ஏற்படுத்தும் உணர்வுகளை அனைத்து கிராமங்களுக்கும், கொண்டு செல்லுவதும் தான் அன்னை மணியம்மையாருக்குச் செலுத்தப்படும் உண்மையான நன்றிக் கடன் என்பதால், இத்தகு விழிப்புணர்வுப் பிரச்சாரப் பணியை ஆண்டு முழுவதும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 2:

லத்தேரி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரைச் சூட்டுக!


வேலூர் லத்தேரி பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளிக்கு நூற்றாண்டு காணும் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரினைச் சூட்டுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 3:

அன்னை மணியம்மையார் பெயரில் -  அரசு உயரிய விருது வழங்க வேண்டுகோள்!


மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்து, சுயமரியா தையுடன் கூடிய சமுதாய - சமத்துவத்தை - பெண்ணடிமை நீங்கிய புத்துலகை - சமூகநீதிக் கொடி பறக்கும் ஒப்பரவு சமுதாயத்தைப் படைத்த தந்தை பெரியாருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து, தொண்டறம் புரிந்தவரும், தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகும் அவர் தம் கொள்கைகளைத் தீவிரமாக பரப்பியவரும், பகுத்தறிவு இயக்கத் திற்கு உலகின் முதல் பெண்மணி என்ற பெருமைக் குரியவருமான அன்னை மணியம்மையார் பெயரில் - மற்ற மற்ற தலைவர்களுக்கு விருது வழங்குவது போல, தமிழ்நாடு அரசு சார்பில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் உயரிய விருது ஒன்றினை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

28 ஆண்டுகளாக சிறையில் வதியும் தோழர்களை விடுதலை செய்க!


ஒரு கொலை குற்ற வழக்கில் 28 ஆண்டுகளாக பேரறிவாளன் உட்பட சிறையில் வதியும் 7 பேர் களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அந்த 7 பேர்களையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மாநில அரசும், அந்த 7 பேர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி 6 மாதம் கழித்த நிலையிலும், அவர்களை விடுதலை செய்வதற்கான ஒப்புதலை வழங்காததது சட்டவிரோதமானதும் - வேதனைக்குரியதும் ஆகும் . தமிழ்நாடு அரசு மேலும் அழுத்தம் கொடுத்து, வேலூர் மத்திய சிறையில் இருக்கும் அந்த எழுவரையும் விடுதலை செய்ய தக்க முயற்சியினை எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பினையும், தமிழ்நாடு அரசு முடிவினையும் மதித்து எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கிட மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

பெண்களுக்களுக்கான 33 விழுக்காடு சட்டத்தினைக் கொண்டு வருக!


சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதா - 1996 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருப்பது வருந்ததக்கது. இதில் காலம் கடத்தாமல் மக்கள் தொகையில் கிட்டதட்ட சரி பகுதி எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கு உள்ஒதுக்கீட்டுடன் கூடிய 33 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை  இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பெண்ணுரிமைப் போராளியான அன்னை மணி யம்மையார் நூற்றாண்டில் இத்தகையதோர் சட்டம் கொண்டு வரப்படுவது மிகவும் பொருத்தமானது என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

தோட்டி லேன்' என்ற பெயரை நீக்கக் கோருதல்


ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காலம் முழுக்க திணிக் கப்பட்ட இழிசொற்களும், ஜாதிப் பெயர்களும் நீக்கப் பட்டு சுயமரியாதையுடன் வாழ்வதை, அழைக்கப்படு வதை உறுதி செய்யும்போராட்டம் தமிழக வரலாற்றில் நீண்ட நெடிய போராட்டமாகும். ஜாதி இழிவை நீக்கு வதற்கென சட்டங்களும், அரசாணைகளும் பலமுறை போடப்பட்டும், பல இடங்களில் அவை செயல்பாட்டுக்கு வராமல் முடக்கப்படுகின்றன.

வேலூர் மாநகராட்சி கஸ்பா முனிசிபல் குடியிருப்புப் பகுதிக்கு உள்ள ஸ்கேவஞ்சர் காலனி' அல்லது தோட்டி லேன்' என்ற பெயரை "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர் கஸ்பா" என பெயர் மாற்றம் செய்வதற்கான நீண்ட சட்டப் போராட்டத்தை, மக்கள் போராட்டத்தை அப் பகுதி மக்கள் மேற்கொண்டுவரும் நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி அதனைத் தட்டிக் கழிப்பதும், மீண்டும் மீண்டும் அப் பெயரையே அப்பகுதி மக்கள் மீது திணிப்பதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும். இந்நிலை மாற்றப்பட்டு, "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர், கஸ்பா" என்ற பெயரையே இனி அரசு ஆவ ணங்களிலும், வழக்கத்திலும் பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- விடுதலை நாளேடு, 11.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக