சனி, 19 நவம்பர், 2016

தேவதாசி ஒழிப்புச் சட்டம்


23.03.1930- குடிஅரசிலிருந்து...

கோயில்களில் பெண்களைப் பொட்டுக் கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திருமதி. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத் தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.

இதற்காகச் சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித் தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெ னில், கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி அவர் களையே பொதுமகளிர்களாக்கி நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும், சமய சமுக முக்கிய தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்டவழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றியும்,

நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங் கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியா தையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தை யோ, நலத்தையோ, கோரின அரசாங்க மாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காதென்று சொல்லுவோம்.

ஆனால், நமது இந்தியாவில் வெள்ளக்கார ஆட்சி குடிபுகவும் நிலைபெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும், உதவியாகவும் இருந்து வந்ததால் அப்பார்ப் பனர்களுக்கு அனுகூலமாக வெள்ளைக்காரர் களும் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால் அந்தப் பார்ப்பனர்கள் சொல்லு கின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்) தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டுவிட்டார்கள்.

இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையி லாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டி யவர்களாகி விட்டார்கள்.

ஆனால், இப்போது கொஞ்சகாலமாய் அப்பார்ப்பனர்களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கியதைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக்காரர்களை மிரட்டக்கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக்கூடிய சமயம் ஆதரித்தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சக்தியையும் தீவிர ஆசை யையும் காட்ட ஆரம்பித்துவிட்டதால், இப் போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத்திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டி ருக்கின்றது.

இந்த நிலைமையின் பலனேதான் இப் போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரசாரம் செய்யவும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும்; சட்டசபையில் இதுசமயம் ஒரு முடிவைப் பெற்றுத் தீரவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன  அபிப் பிராயத்திற்கு  வரநேர்ந்ததுமாகும்.

நிற்க, இப்போது திருமதி டாக்டர் முத்து லட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும், பொட் டுக்கட்டுவதை ஒழிக்கும் இந்த மசோதாவானது வெகுகாலமாகவே ஜனப்பிரதிநிதிகள் என் பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொது மகாநாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டி ருப்பதுடன் இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட் டங்களிலும் அடிக்கடி பிரதாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இவ்வாறெல்லாமிருக்க, இச்சட்டத்திற்குப் பொதுஜன அபிப்பிராயத்தை அறிய விரும்புவானேன்? என்பது விளங்க வில்லை.

இந்த நாள்பட்ட கொடிய சமுகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சே பணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக் கவே முடியாது. இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பதுபோல் தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல், இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும்.

ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமா கையால் இவ்வழக்கம் பெண்களின் அந்தஸ் தையும், கவுரவத்தையும் பெரிதும் பாதிக்கக் கூடியதாயிருக்கிறது. அன்றியும் ஒரு குறிப் பிட்ட ஜாதியையோ, சமுகத்தையோ விபசாரத் திற்கு அனுமதி கொடுப்பதும்,, பின்னர் அவர்களை இழிந்த சமுகமாகக் கருதுவதும் பெரும் சமுகக் கொடுமையாகும்.

சிறு குழந் தைகளிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமுக விதி களையே மீறியதாகும். எனவே இப்படிப்பட்ட நிலைமையில் இனி இதைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

பொதுஜனங்கள் எந்த விதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மை யாகவோதான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்து சமுகத்தில் கடவுள் பேரால், மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்தவேண்டும் என்று எந்த சமுகத்தாரோ, தேசத்தாரோ கருது வார்களானால், அவர்களைப்போல் காட்டு மிராண்டிகளோ கெட்டவர்களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமுகமாவது இம் மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களே யானால் அவர்களைப்போல் சுயமரியாதை யற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்கமுடியாது.

-விடுதலை,19.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக